திங்கள், 8 ஏப்ரல், 2019

அகிலமும் கைலாசமும்

தமிழ்மொழியை முற்றுமறிதல் என்பது முடியாத வேலை என்று  சொல்லலாம். எங்கெங்கு சென்று கற்றாலும் எல்லாமறிதல் இயலாமையினால். நாலுபேர் கூடி நன்மொழிகள் பேசிவிட்டுக் கலைந்து போவது வேறு.  மொழியறிதல் என்பது வேறு.

இல்லென்ற சொல்லொன்று உள்ளதே அது எங்கெங்கெல்லாம் உள்ளதென்பதை இப்போது கண்டு மகிழ முனைவோம்.  ஆயினும் எத்துணை முயன்றாலும் நாம் ஒன்றிரண்டை அறிந்துகொண்டால் அதுவே பேருவகை தருவதென்றுணர்வீராக.

அகிலம் என்ற சொல்லின் இடையில் இல் உள்ளது.

இல் என்பது இடம் என்று பொருள்படுவது.  இஃது இகரச் சுட்டடிச் சொல்.   இ என்பதிலிருந்து இல் தோன்றியது.   இல் எனின் இங்குள்ளது என்பது பொருள். இங்குள்ளது இடம்.  அதுதான் இங்கிருபதனைத்துக்கும் அடிப்படை. இடம் இல்லாமல் பொருளில்லை.

கண்ணில் இருப்பதென்ன என்ற வாக்கியத்தில் இல் என்பது இடப்பொருள் சுட்டும் உருபாக வருகிறது.   இடம் என்பதே இதன் அர்த்தம் என்பது விரிக்க வேண்டாதது.

அகிலம் என்ற சொல்லில்:

அ + கு + இல் + அம்  என்ற துண்டுகள் உள்ளன.  சொல்லின் இடையில் இல் இருப்பதை உணரலாம். 

அ =  அங்கு.
கு =  சேர்விடம் குறிக்கும் சிறுசொல். இது உருபாகவும் வரும்.  அவளுக்கு இவளுக்கு என்று சொல்லி அறிக.
இல் = இடம்.
அம் = விகுதி.   இந்த விகுதி அமைவு என்ற சொல்லின் அடிச்சொல் ஆகும்.

இதை இப்போது வாக்கியமாக மாற்றினால்:

" (இங்கிருந்து  )  அங்கு சென்று சேர்ந்தால் அதனில் உள்ள இட அமைப்பு"

என்றாகும்.  அங்கு என்பது தொடுவானாக இருக்கலாம்.  இது எல்லாம்
"அகிலம்."

அகிலம் என்ற சொல்லை அமைத்த அந்த இருண்ட காலத்துத் தமிழன் வானூர்தியிலோ துணைக்கோளத்திலோ பறந்து  பார்த்தானில்லை. இவையெல்லாம் அவனுக்குத் தெரியாதவை. அவனறிந்த மாத்திரத்தில் அவன்
சொல்லை அமைத்து விட்டுப் போயிருக்கிறான். சுழியனைப் பிட்டுப் பார்த்து உள்ளே சருக்கரையும் பயறும் இருப்பன கண்டு அறிந்ததுபோலுமே இச்சொல்லை நாமறிந்து கொள்கிறோம்.

அகலம் என்ற சொல்லும் இதுபோல் அமைந்ததே.  அ+ கு+  அல் + அம் = அகலம்.  அங்குபோய்ச் சேர்வது மட்டுமின்றி அவ்வெல்லையும் அல்லாத விரிவுடையது  என்று சொல்லிமுடித்து அமைந்ததே இச்சொல்.

உலகம் விரிந்தது ஆதலின் விரிவு குறிக்கும் அகலமென்னும் சொல்லினின்று அகிலம் என்னும் சொல் அரும்பியிருத்தல் கூடுமாதலின் இஃது  ( அகிலம் ) இருபிறப்பி ஆகும்.  அகலக் கருத்தே அகிலச் சொல்லுக்கு ஆக்கம் தந்திருக்கலாம்.  அல் என்பது இல் ஆனது. ஒன்றைப் பார்த்து இன்னொன்று அமைத்தல்.

இல் என்பதையும்   (  இடம் )   அல் என்பதையும்  ( அல்லாதது )  கொண்டு இவ்வளவு திறம்படச்  சொற்களை அமைத்துள்ளான் பண்டைத் தமிழன்.  காட்டிலும் மலைகளிலும் அருவி அருகினிலும் கடல் அருகினிலும் சுற்றித் திரிந்து  சிறுசிறு சொற்களைக் கொண்டு உரையாடிய அந்தக் காலத்துத் தமிழன் அவன். அவனையும் அவனமைத்த சொற்களையும் அறிய நீங்கள் உங்கள் இற்றை  நாகரிகத் துணைகளைக் களைந்துவிட்டு வெகுதொலைவு  காலச் சாலையில் பின்னோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதை மறவாதீர்.

அகல்+தல் = அகலுதல் என்ற வினையும் அதிலிருந்து அமைந்தது.  அகல்+ தல் = அகறல் என்று வருதலும் அமையும்.

தீவு என்பது நாற்புறம் நீர் சூழ்ந்து நிலத்தொடர்பு முற்றத் தீர்ந்த நிலத்துண்டு. தீர்வு> தீவு என்பதை அறிவுறுத்தினோம்.  தீராத தொடர்பு நிலம்  தீவு+ அகம் + அல் + -பு + அம் என்ற பல துண்டுகள் கூடிய சொல்லே தீபகற்பம்.   தீவக அற்பம் > தீபகற்பம்.  வகர பகரப் போலி.  இதில் அல் என்ற அன்மைச் சொல் பயன்பாடு கண்டுள்ளமை காண்க. தீவு என்ற சொல் தீவகம் என்றும் வரும்.  நிலத்துண்டின் அகத்தே தொடர்பு ஏதுமின்றி  அமைந்தது என்று பொருள். அகம் என்ற சொல் புனைந்து அதனால் வந்த சொல்லூதியம் சொற்பமே ஆகும். பெரிய பொருள்மாற்ற மெதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தீவற்பம் என்று அமைத்திருக்கலாம். தீபகற்பம் என்பது சற்று இனிதாய் உள்ளது.

கைலாசம் என்ற சொல்லிலும் கை + இல் + ஆய + அம் என்று இல் என்ற இடப்பொருள் வந்திருப்பது காண்க.  பக்கத்தில் சிவனாருக்கு இல்லாமாக அமைந்தவிடம் என்று பொருள்.  கை=  பக்கம்;  இல் = இடம்;  ஆய்  = ஆகிய. அம் = அமைப்பு, அல்லது விகுதி.   அந்தக்கையில் இந்தக்கையில் என்ற தொடர்களில் கை என்பது பக்கப்  பொருளை உணர்த்தும்.  ஆய > ஆச.

இனி இல் என்ற இடப்பொருள் அமைந்த சொற்கள் எங்கெங்கு விரவியுள்ளன என்பதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.


புதன், 3 ஏப்ரல், 2019

கலியாணம் விவாகம் ரத்து

இன்று வீடு என்ற சொல்லுக்கும் அகம் என்ற சொல்லுக்கும் ஒரு ஒப்பீடு எழுதலாம் என்று எண்ணினாலும் கல்யாணம் என்ற சொல் வந்து குறுக்கிட்டு என்னை எழுதென்றது. அதற்கு ஒப்பி இச்சொல்லைப் பற்றி இன்று சிந்திக்கின்றோம். ஒப்பீட்டு ஆய்வை இன்னொரு நாளில் கவனிப்போம்.

கல்யாணம் என்பது உண்மையில் கலியாணமே ஆகும். இதற்குக் காரணம் கல்லுக்கும் கல்யாணத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் இச்சொல் பல இந்திய மொழிகளில் வழங்கி வருகிறது. அங்கெல்லாம் அது கல் என்றுதான் தொடங்குகிறது. நாம் கலியில் தொடங்குவதானது பிற மொழி வழக்குகளுக்கெல்லாம் இசையாமல் நம்மைக் கல்லாக்கிக் கொண்டு தொடங்குவதுபோலச் சிலரால் உணரப்படுதலும் இயல்பே ஆகும்.

தமிழ்ச்சொற்கள் பிற மாநிலங்கட்குச் செல்லுங்கால் இவ்வாறு சுருக்கப்படுதல் இயல்பு. கைலாசம் என்பதை கைலாஷ் என்றுதான் பிற மொழிகள் சுருக்கும். சுருங்கிய நிலையில் வந்து சேர்ந்த சொற்களை விரித்துப் பலுக்குதலும் காணப்படுவதே. எடுத்துக்காட்டு: ப்ரட் என்ற ஆங்கிலச் சொல் பிரட்டு என்று தமிழரிடை மாறுவது காண்க. எக் (முட்டை) என்பது எக்கு என்று ஒலிப்புறுகிறது. இதை நாம் மறந்துவிடவில்லை.

கல்யாணம் கலியாணம் என்பவற்றை விளக்கி யாம் எழுதியது
இப்போது கிட்டவில்லை.

இப்போது புதிதாகவே சிந்திப்போம்.

சங்க காலத்தின் பின்பு பெண்கள்மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்கள் பலர் ஏமாற்றிவிட்டு ஓடிவிடுதல் கூடுதலாக நிகழ்ந்தமையால் இவை விதிக்கப்படவேண்டி நேர்ந்தது.
கலி என்பது மகிழ்ச்சி என்று பொருள்படும். ஆணுடன் பழக அனுமதி பெறும் சடங்கே கலி + ஆண் + அம் ஆகும். சிற்றூரார் இன்றும் கலியாணம் என்றே சொல்வர். ஆணுடன் சேரும் நிகழ்வு என்பதே கலியாணம் என்பதன் பொருள். ஆண் என்பது யாண் என்று வருவது யகர உடம்படு மெய். அம் விகுதியாகும், இவ்வாறு அறியவே இது தமிழ்ச்சொல் ஆகிறது.

வாழ்க்கை விழுமிய நிலையை அடையத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கொள்கை. இதனடிப்படையில் எழுந்தது விவாகம் என்ற சொல்: வி+ வா + ஆகு + அம் : விவாகம், விழுமிய வாழ்வு ஆகும் தொடக்கச் சடங்கு. இது ஒரு சொற்சுருக்கப் புனைவு ஆகும். இரத்து என்பது இறத்து: இறு+ + து: இறத்து > இரத்து > ரத்து, இறுதல்: முடிதல்; இறுதி என்ற சொல்லும் இதில் வந்ததே. ஆக விவாக ரத்து என்பதை உணர்ந்து கொண்டீர்கள்.


செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சேனை

சேனை என்னும் சொல் முன்னர் விளக்கப்பட்டது.  அதை இங்குக் காணலாம்:


https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_20.html

 சேனை என்பது பல்வேறு பொருளுடைய சொல் என்பது இங்குத் தெளிவாக உள்ளது.

ஐயப்பாடுகள் யாவையேனும் இல்லாவிடின்  உங்கள் சிறுசேனைகளையும் கூட்டிவைத்துச் சொல்லிக்கொடுக்கலாம்.

சிறு சேனைகள் :  உங்கள் குழந்தைகள்.

சிறிசேனா என்பவர் இலங்கை அதிபர்.   அவர்பெயரும் இச்சொல்லுடன் தொடர்புபட்டிருப்பது மகிழ்வு தருவதே.

வீதியில் போய்வந்து கொண்டிருப்பவர்களும் சேனை எனப்படுவர்.  பலர் சேர்ந்த கூட்டமே சேனை.

சேர் >  சேர்நர்  .  சேர்நன்.

சேர்ந + ஐ =  சேர்நை >  சேனை.  என்று இலக்கணப்படி செல்லும்போதும் இதை இப்படி அமைக்க ஒரு கருத்து வாக்கியம் உதவி இருக்கக் கூடுமென்பதையும் மறுத்தற்கில்லை.

விளக்கம்:

வாக்கியம்:  அனைவரும் சேர்ந்து  செல்கிறார்கள்.

சேர்  ( சேர்ந்து )
அனை  (அனைவரும்  )

சேர் + அனை  =  சே +னை  =   சேனை என்று அழகாக சொல் வடிந்து வருகிறது.
என்றாலும் தமிழிலக்கண மரபு நோக்கி  சேர்ந் + ஐ  என்று சொல்வதும் பின் ரகர ஒற்று  கெடுதலும் ஐ கார விகுதி காட்டுதலும் பொருத்தமாக இருக்கும்.

இதனைப் பஜனை என்ற சொல்லுடன் ஒப்புவைக்கலாம்.

பாடு + அனைவரும்.
அனைவரும் பாடுவதுதான் பஜனை.  வேறு என்ன பஜனை.  சில மாதிரி பாட்டுக்களைத்தாம்  பாடுவார்கள். இது பாடல் தேர்வு முறையன்றி இதனால் ஒன்றும் சொல் அமையவில்லை.

டகர வருக்கத்துக்கு ஜ, ஷ முதலியன மாற்றீடாக வரும்.

பாடு + அனை >  பாஜ் + அனை >  பஜனை.

நெடில் குறில் குறுக்கம்.  பாடனை > படனை > பஜனை.
அனைவரும் என்பதில் அனை என்பதை விகுதியாக்குதல்.

அயற்சொற்களும் இப்படிக் குறுகும்:

ராஜா >>  ரஜினி. ( பெண் ).  ரா> ர.    அப்புறம் ஜ்+ இன் + இ.

தோண்டு > தொண்டை.  தோண்டியதுபோல் உள்ள உணவு மூச்சுக் குழல்.
தோ > தொ குறுக்கம்.

பாடனை(வரும்)  என்பது குறுகி பஜனை என்று வந்தாலும் சேனை என்பது குறுக வழியில்லை.  குறுகிச் செனை என்பது நன்றாக இல்லை.

அறிந்து மகிழ்வீர்.