புதன், 22 ஆகஸ்ட், 2018

ஆதிசங்கரர் கெடார்நாத்

 ஆதி சங்கரரைப் பற்றி நான்`கு ஆண்டுகட்கு முன்  யாம் எழுதிய கவிதை. கையெழுத்துப் படி (பிரதி)யிலிருந்து  சில வரிகளே கிடைத்தன:

ஆதி சங்கரர் அமைகல் உடையது
கெடார்நாத   நகர்;
ஓதி எங்கணும் பர ந்த ஒளிச்சிவம்
விடார்மூத  றிஞர்;
யாது வந்துமந்  தாகினி கரைப்புனல்
அடாக்கீழ்த  லினால்
மோதிச் சாயவும் முனைவர் அரன் தனைத்
தொழார்அமைந்   திலரே.

இன்னும் 8 அடிகள் கணினியிலிருந்து அழிந்தன.
உங்களிடம் இருந்தால் பின்னூட்டம் இட்டு உதவுங்கள்.. 

சீடன் என்ற சொல் வந்த விதம்.

ஒரு குருவென்னும் மனிதன், தன் சீடனின் மூளையைத் தீட்டித் தான் அகன்றபின்பு  சீடனும்  ஒரு குருவாகும் தகுதியை உண்டாக்குகிறான். எந்தக் குருவும் மேலுலகிலிருந்து நேராக வருவதில்லை.  அவன் பெற்ற அறிவைச் சீடனுக்கு வழங்கிப் படிப்பிக்கின்றான் என்பதே உண்மை.

சீண்டுதல் என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை முதலில் அறிவோம்.

சீண்டுதல் என்பது தீண்டுதல் என்பதன் திரிபு.   சகரத்தில் தொடங்கும் சில சொற்கள் தகரத் தொடக்கமாய் இருந்தவை.   தீண்டுதல் > சீண்டுதல். இனி சகரம் தொடக்கம் எனினும் இழுக்கில்லை.  ச>< த ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை.  ஒன்றுக்கு இன்னொன்று மோனை.

தூங்காதே தம்பி தூங்காதே  நீ
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.

பட்டுக்கோட்டை பாட்டு.  தூ > சோ மோனையானது.
இக்கவி மிக்க எதுகை மோனை கூர்அறிவுடையவர்.

எல்லாப் பாடல்களிலும் இவை போலும் மோனைப் புனைவு காணலாம்.

சீ  <>  தீ  :  இதுபோல் திரிந்த சொற்களை ஒப்பு நோக்குவோம்.

தம்தம் (  மதங்க ஒலி)  -   சம்தம் >  சந்தம்.

இப்படி மதங்க ஒலி குறித்த சொல் பின் அதுபோன்ற பிற இசையொலிகளையும் குறிக்க விரிந்தது.

தம் பந்தி >  சம்பந்தி.

பல் > பல் து > பற்று.   பல் து > பந்து.   பல்து > பந்து > பந்தம்;.
தம்பந்தம் > சம்பந்தம்.

தனி > சனி (  இதன் பொருள் தனிச்சிறப்பு உடைய கோள் என்பது ).

கோள்களில் சனிக்கு மட்டுமே ஈஸ்வரப் பட்டம் என்பர். இறைவன்> இறைவர்> ஈஶ்வர்> ஈஸ்வர்> ஈஸ்வரன்.

இவற்றில் சில நம் இடுகைகளில் விளக்கப்பட்டுள.

இப்படித் திரிந்ததுதான் தீண்டுதல் > சீண்டுதல்.

இன்னும் பல திரிபுகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒரே அடியாக உள்வாங்கிக் கொள்ளுதல் கடினமே. ஆகவே இவை போதுமானவை.

இரண்டு தன் சேர்ந்தால் ஒரு தம் ஆகிறது.  இப்படித் தொடங்கியதே இப்பன்மை வடிவம்.

தன் உறவினர்  -  தம் உறவினர் (பன்மை)   தன் > தம் பின்னர் சம்.

ஆகத்  தீண்டுதல் என்பதற்கும் சீண்டுதல் என்பதற்கும் உள்ள திரிபுத் தொடர்பையும் பொருண்மை அணுக்கத்தையும் உணர்ந்தோம்.

என்னைச் சீண்டாதே என்றால் அடிக்கடி தொட்டுத்தொட்டுத் தொந்தரவு கொடுக்காதே என்பதுதான் அர்த்தம்.

இனி, ஒரு குருவானவர் ஒரு சீடனுக்கு நெற்றியைத் தீண்டிச் "சீடனாக்கி"க் கொள்கிறார்.    ஆகவே இந்தத்  தீட்சை பெறுபவன் சீடனாகிறான்.

தீண்டு > சீண்டு > சீடு  ( இது இடைக்குறை).

சீடு+ அன் = சீடன்.   குருவினால் தீண்டப் பெற்ற பாக்கியவான் சீடன்.

பகு> பகு+ இயம் = பாக்கியம்.  (  உலகில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு; இவற்றுள்  நற்பாகத்தைப் பெற்றவன் பாக்கியவான்.)  பாக்கிய + ஆன் = பாக்கியவான், வகர உடம்படு மெய்.  வான் என்பது ஒரு தனி விகுதியன்று.
பாக்கியவான் : நற் பகுதியைப் பெற்றவன்.

சீ > சீத்தல்.   தேய்த்தல், கூராக்குதல்.  ( தொடுதல் கருத்து.  தொடுதல் பலவகை. ஒரு முறை தொடுதல்; பல முறை தொடுதல்;   தொட்டுத் தொடர்தல், இதை விளக்கவேண்டாம்.  தெரிந்துகொள்க.)

சீ > சீடு ( டு ஒரு விகுதி ) > சீடன்.  (  குருவினால் புத்தி கூராக்கப்படுபவன்).
குரு சீடனின் நெற்றியைத் தேய்த்து விடுகிறார். எலாம் பொருத்தமே.

டு இறுதி வரும் சொற்கள் சில 

பா ( பொருள்: பாடல் )  :  பாடு.  (பாடுதல்)
மூ ( அடிச்சொல்)  ( பொருள்:  மேல் உள்ள திறப்பினை பரக்க அடைத்தல்)
 மூ >  மூடு.
டு விகுதி வினை பெயர் என இரண்டிலும் வரும்.

மற்றவை:

சீடு > சீண்டு ( இடைமிகை).

சீண்டு ><  தீண்டு.   இரண்டும் இருவழித் தொடர்புள்ள சொற்கள்.

சீடு > சீடு+இய > சீடிய > சிஷ்ய.

சீடு > சீசு > சீசப்பிள்ளை ( சிற்றூர் வழக்கு).

தீண்டு என்பதன் வேர்ச்சொல் தீள் என்பது.

தீள் > தீள்+து >  தீண்டு.
தீள் >  தீள்+து > தீட்டு.
தீள் + சை =  தீட்சை.   (. > தீக்ஷை )  குரு சீடனைத் தீண்டிப் பற்றுறுத்தல்).

குறிப்பு:  ஆரியர் என்பது வெள்ளைக்காரன் கூறினமாதிரி ஓர் இனப்பெயர் அன்று.  அப்படி ஓர் இனம் இல்லை.  எல்லா ஊர்களிலும் வெளி நாட்டினர் வந்து தங்குவதென்பது இயல்பானதே. பல நாடுகளிலிருந்தும் ஊர்களிலிருந்தும் கடல் வழியாக வந்தவர்களும் நில வழியாக வந்தவர்களும்  இருந்தனர்.  திருமணம் செய்துகொண்டு கலந்துவிட்டனர். ( சீனப்படைகளுடன் வந்து வழி மாறி இந்தியச் சிற்றூரில் தங்கித் திருமணம் செய்துகொண்டு பிள்ளை குட்டி பெற்று மூப்பும் அடைந்து அண்மையில்தான் ஒரு சீனர் சீனாவிற்குப் போய்ச் சேர்ந்தார்.  இதுபோல் எத்தனையோ.  அலக்சாந்தரின் படைகளுடன் வந்தோர் பலர். திரும்பிச் சென்றுவிட்டனரா?  யாரறிவார்?  ஆப்கானியர் வந்திருப்பர்.)
ஆனால் ஆரியர் யாருமில்லை.
ஆர் என்பது தமிழில் ஒரு பலர்பால் விகுதி.  உயர்திணை குறிப்பது. பணிவு பகர்வது.  ஆர் என்ற வினைச்சொல்லும் உண்டு.  இவற்றைக் கூறும் தனி இடுகைகளைப் படியுங்கள்.
சமஸ்கிருதம் என்பது பெரும்பாலும்  சாமி கும்பிடும்போது  பயன்படுத்திய மொழி.  சாமிகளை மரத்தடியில் வைத்துக் கும்பிட்டனர். பெரும்பாலும் கோயில் கட்டியவர்கள் மன்னர்களே, மரத்தடிப் பூசாரி,  பிறர் கட்டிய கோயிலுக்குள் போனபோது அதே வழிபாட்டு முறையே வழக்கில் தொடர்ந்தது.  வடமொழி என்பது மரத்தடிமொழி என்று திரு வி க கூறியது சரியானதுதான்.  ஆரியர் வரவுமில்லை. சமஸ்கிருதம் அப்படிப்பட்டவர்களால் பேசப்படவும் இல்லை.  சமஸ்கிருதத்தில் முதல் கவி வால்மீகி ஒரு வால்மீகி சாதியான்;  இன்று தாழ்குலம்.  பாணினி வடமொழி இலக்கணம் இயற்றியவன், ஒரு பாணன். பாண்+இன்+இ = பாணினி.   இது வெள்ளைக்காரனுக்குத் தெரியவில்லை.   புலவர்கள் குலப்பெயர்களால் அக்காலத்தில் அறியப்பட்டனர். வேதவியாசன் செம்படவன்.  சமஸ்கிருதம் எப்படி வெளிநாட்டு மொழி ஆனது.?  உரோமாபுரியின் காலத்திலே தமிழரும் பிறரும் அங்கு சென்று இந்தியச் சொற்களைத் தந்து உதவியுள்ளனர். (சென்னைப்பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசியர் ஆய்வு முடிவு ) ஆரியர் வந்தனர் என்ற தெரிவியல் (  தியரி)  நிறுவப்படவில்லை.

சமஸ்கிருதத்தில் உள்ள வெளிநாட்டுச் சொற்கள் பெறப்பட்டவை. ஒரு மொழியில் வெளிநாட்டுச் சொற்கள் இருந்தால் அது அக்காரணத்தினால் வெளிநாட்டினர் மொழி ஆகிவிடாது.  மூன்றில் ஒரு பகுதி திராவிடச் சொற்கள் அதில் உள்ளன; ( டாக்டர் லகோவரி).  சமஸ்கிருதம்  தென்னகத்து ஒலியமைப்பை உடையது ( சுனில் குமார் சட்டர்ஜீ).

நாம் எடுத்து விளக்கிய சொற்கள் சொற்பமே. அறிக. சமஸ்கிருதத்தில் சொற்கள் 170000 க்கு மேல் உள்ளன. நாம் இங்கு விளக்கியுள்ள சொற்கள் மிகவும் குறைவு.   மொத்த எண்ணிக்கையை எட்டமுடியாது. அது ஒருவர் இருவர் செய்து முடிக்கும் வேலையன்று,

பின் செப்பம் பெறும்.








 

இல்லாதது அல்லாதது: சொற்பம் அற்பம், தீவகம் அல் பு அம்!!

அல்லாதது  இல்லாதது என்பவற்றுள் பொருள் வேற்றுமை சிறிது உளதென்பதை நீங்கள் அறிவீர்.    ஒன்றை இல்லை என்றால் அப்பொருள் இவ்வுலகின்கண் காணமுடியாதது என்று கொள்ளுதல் வேண்டும்.   அல்லாமையோ  அதுவன்று, பிற என்று சொல்வதாகும்.

மிக்கப் பழங்காலத்திலே  அல் என்ற சொல்லைப் பயன்படுத்தித் தமிழர் சொற்களைப் புனைந்துள்ளனர்.   உயர்திணை,   அஃறிணை என்னும் பகுப்பில் அஃறிணை என்ற சொல்லிலிருந்து அது  " திணை அல்லாதது "  என்று பொருள்தருதலை நன் `கு உணர்ந்துகொள்ளலாம்.  உயர்திணைக்கு உயர்  என்னும் மேன்மைக் குறிப்பு பயன்படுத்தப்படுவதால்,  அதன் மாற்றுக்கு "தாழ்திணை"   என்று பெயரிடப்படவில்லை என்பதையும் உன்னுக.   தாழ்வு என்று வகைப்படுத்தாமல் அஃறிணைப் பொருள்களைத் திணைப்பகுப்பில் உட்படுத்தாமல் திணை அல்லாதவை என்று மட்டுமே பகுத்துள்ளனர் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.  இது எங்ஙனமாயினும்  "அல்" என்னும் சொல் ஈண்டு பயன் கண்டுள்ளமைமட்டும் குறித்துக்கொள்ளுங்கள்.

தீபகற்பம் என்ற சொல்லை ஓர் இடுகையில் விளக்கியிருந்தோம்.   இதன்பொருள் "தீவு அல்லாதது"   என்பதுமட்டுமே எனற்பாலதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  ஒரு பெருநிலத்துடன் அறவே தொடர்பு தீர்ந்தது தீவு ஆகும்,    தீர் > தீர்வு > தீவு.   இங்கு ரகர ஒற்று மறைந்துள்ளமை காணலாம்.  இதற்கோர் எடுத்துக்காட்டு:  பேத்தி என்ற சொல்.   பேர்> பேர்த்தி > பேத்தி ஆதல் காண்க.  வினைச்சொல் ஆக்கத்திலும் :  சேர் > சேர்மி > சேமி > சேமித்தல் என்று சொல்லமைதலைக் காணலாம்.  தீபகற்பம் என்பது :   தீவகம் அல்லாதது என்று பொருள் தருமாறு புனையப்பட்டுள்ளது,   தீவக(ம்) + அல் + பு+ அம்.  அதாவது தீவு அன்று என்பதுதான்.  வியக்கத்தக்க பொருண்மையை உள்ளடக்கி இஃது புனையப்படவில்லை எனினும் எளிமையான புனைவு என்று இதனை நாம் புகழலாம். இதனை முக்கரைத்தொடர் என்பதும் ஏற்புடைத்து என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பு  அம் என்பன இருவிகுதிகள்.   துடைப்பம் முதலிய சொற்களில் வந்துள்ளமை அறிந்தின்புறுக.   துடைத்தல்:   துடை+பு+அம்.

இனி நாமெடுத்துக்கொண்ட அல்பம் என்ற சொல்லுக்கு வருவோம். கணக்கில் கொள்வதற்குத் தரம் அல்லாத பொருளே  அல்பம் ஆகும்.   அல்+பு+அம் = அல்பம்.  இது புணர்த்தப்படின் அற்பம் என்றாகும். தமிழிலிது புணர்த்தப்பட்டே வழங்குவது ஆகும்.   இச்சொல் பேச்சு வழக்கில் அல்ப்பம் என்று வழங்கும்.   லகர ஒற்றும் பகர ஒற்றும்  அடுத்தடுத்து நிற்றல் செந்தமிழ் முறையன்று ஆதலின் தமிழியல்பு பற்றி அது அற்பம் என்றே வரவேண்டும்.

இதே முறையை மேற்கொண்டு  சொல்பம் என்ற சொல்லும் பயனுக்கு வந்துள்ளது.  சொல்பமாவது  சொல்லத்தகுந்த எண்ணிக்கையிலானது என்பதுதான்,  இது சொல்லுதல் என்னும் வினையடித்தோன்றிய சொல்.  அற்பம் என்ற சொல் போலவே இதுவும் புணர்த்தியே சொல்லாய் அமையும்.   சொல்பம் என்னாமல் சொற்பம் ஆகும்.   அதுவே செந்தமிழியற்கை.

அயல் என்ற சுட்டடிச் சொல்லிலே  அல் வந்துள்ளமை சுட்டிக்காட்டியுள்ளோம்.
அயல் என்றால் அங்கு அல்லது அவ்விடத்தினது அல்லாதது என்பதுதான்.  அ+அல் என்று எளிமையாகவே சொல் அமைந்தது,  அன்னியன் என்ற சொல்லும் நல்லபடியாகப் புனைந்ததே.   நீயும் நானுமல்லாத பிறன் என்பது பொருள்.  இதை அல்+ நீ + அன் =  அன்னியன் ஆனது.   இதில் நீ என்பது நி என்று குறுகிற்று.  பழம்+நீ என்பது பழநி என்று குறுகினமைபோலுமே இதுவாம். நானும் நீயுமலாதான் அன்னியன் என்பது மிகநன்றாய புனைவு ஆகும்,  இது அந்நியன் என்றும் எழுதப்படும்.  நீ என்பதே நி என்று குறுகினமையால் அந்நியன்  என்று  எழுதுவது பொருத்தமாகத் தோன்றக்கூடுமெனினும்,  அல்+நி என்பது அன்னி என்று புணருமாதலின் அன்னியன் என்பதே நலமாம்.

அல் என்பது கடைக்குறைந்து அ என்று வந்து ஒரு முன்னொட்டாகப் பிறமொழிகளையும் வளப்படுத்தியுள்ளது.   எடுத்துக்காட்டு:  நீதி -  அநீதி எனக் காண்க.