வியாழன், 5 ஜூலை, 2018

ஆரூடம்.

இன்று ஆரூடம் என்பதென்னவென்று அறிந்துகொள்வோம்.

ஆர்தல் என்ற தமிழ்ச்சொல்லுடன் ஊடு, அம் என்ற பிற தமிழ்ச்சொற்களும் இணைந்து உருவான சொல்லே ஆரூடம் ஆகும்.  இவற்றுள் ஊடு என்பது துருவிச் செல்லுதல்போல புகுந்து செல்லுதலைக் குறிக்கும்.  ஊடகம் என்ற சொல்லில் இந்த ஊடு என்ற சொல் முன் நிற்பதை அறிந்திருப்பீர்கள்.  ஊடுருவுதல் என்ற சொல்லிலும் இச்சொல் இருக்கின்றது.

அம் என்பது பல சொற்களில் இறுதிநிலையாய் இருப்பதனால் அதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றோம்.

ஆர்தல் என்பதை அறியவேண்டியது அகத்தியமாகிறது.

நுகர்தல் அல்லது அனுபவித்தல்;
அன்புகாட்டுதல்
நிறைதல்
உண்ணுதல்
பொருந்துதல்
அடைதல்
குடித்தல்
ஒத்தல்
தங்குதல் 
அணிதல்

இதன் பிறவினை ஆர்த்தல் என்பது.  இது அணிதல், ஆட்டுதல், ஆரவாரம் செயல், ஒலித்தல். கட்டுதல் , பொருதல், பொருத்துதல், தொகுத்தல், ஒளிவீசுதல், மின்னுதல் என்றும் பொருள்தரும்.

மொத்தத்தில் ஆர் என்பது உயர்செயல்களைக் குறிக்கும்.  ஆரியர் என்ற சொல்லும் இதனின்று வந்ததாக பிற தமிழறிஞர் கூறியதுமுண்டு.

வந்தார், சென்றார் என்பன போலும் வினை முற்றுக்களில்  வரும் ஆர் விகுதி இச்சொல்லே ஆகும்.  ஒரு வினைச்சொல் விகுதி என்னும் தகுதி பெறுவதென்றால் அச்சொல் மொழியில் மிக்கப் பழமை தொட்டே வழங்கி வந்துள்ளது என்பது சொல்லாமலே புரியும்.  

ஆரியர் என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள "ஏரபல்"  என்ற சொல்லுடன் இலத்தீன்வழித் தொடர்புடையது என்று வரலாற்றாசிரியர் ரோமில தாப்பார் கருதுகிறார்.  ஏர்த்தொழில் தொடர்புடைய ஏர் என்ற தமிழ்ச்சொல்லும் ஆர் என்பதனுடன் தொடர்புடையதாய் இருந்தால் அதில் வியப்பில்லை.  ஏர்த்தொழில் ஒரு காலத்தில் மிக்க உயர்வானதாகக் கருதப்பட்ட தொழில். இதற்குக் காரணம் அது மக்களுக்கு உணவளிக்கும் தொழில். உணவின்றேல் மனிதர் மடிவர்.

ஆர் என்ற சொல் தரும் பல பொருள்களில் பொருந்துதல் அல்லது நிறைவு என்ற பொருளைக் கருதுவோம்.  ஆர  ( நிறைவாக ) ஊடு சென்று கண்டுபிடித்துச் சொல்லும் திறனே ஆரூடமாகும். ஆரூடத்திலுள்ள மூன்று  துண்டுச்சொற்களும் தமிழே ஆகும். உதாரணமாக வீட்டில் கெட்டுப்போன சாமான்`களை வைத்திருந்தால்  அவற்றிலுள்ள ஒரு மறைவான ஆற்றல் வெளிப்பட்டு நன்றாக இயங்குபவையும் கெட்டுப்போகும் என்பது ஆரூடம்.  இது சீனாவில் "ஃபோங்க்  ஸ்வே" என்று சொல்லப்படுகிறது.  இதைப்பற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. உங்கள் உந்துவண்டியின் கெட்டுப்போன பகுதிகளை அதன் பின்னடைப்பில் போட்டு வைத்துக்கொண்டிருந்தால் உங்கள் வண்டி மேலும் மேலும் கெட்டுப்போகும் என்பது  சொல்லப்படுகிறது.  இது மூட நம்பிக்கை என்று நீங்கள் நினைத்தால் நாலைந்து கெட்டுப்போன சாமான்`களை வண்டியின் பின்புறத்தில் போட்டுவைத்து ஓட்டிக்கொண்டிருங்கள்.  அடிக்கடி கெட்டுப்போனால் அது ஆரூடத்தில் ஏதோ உண்மை இருப்பதைப் புலப்படுத்தக்கூடும். இன்றிலிருந்து இதை நீங்கள் ஆய்வுசெய்யுங்கள். அப்புறம் முடிவு மேற்கொள்ளுங்கள். வீட்டில் மின்`குமிழ் எரிந்துவிட்டால் உடனே சிலர் மாற்றிவிடுவர். இதுதான் காரணம் என்று சொல்வர்.  கெட்டுப்போவதைச் சீர்ப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை ஆரூட அறிவாளிகள் சொல்கிறார்கள்.  நாம் முற்றிலும் அறியாதவையும் உலகில் இருக்கக்கூடும் அன்றோ?   அம்மையார் ஒருவர், கோவில் பூசைக்காக நூற்றைம்பது வெள்ளிகள் கேட்டார். என்னையும் சேர்ந்துகொள்ளும்படி கேட்டார்.  நான் உடனே அதைக் கொடுத்துவிட்டேன். அது அப்படி இது இப்படி என்று சாக்குப்போக்குச் சொன்னால் நாளை ஒரு சளிக்காய்ச்சல் வந்து அது செலவாகிவிடத்தான் போகிறது.  ஆகும் என்பதுதான் ஆரூடம். நோய்க்குச் செலவிடுவதைவிட ஒரு பூசைக்குச் செலவிட்டால் நன்மை விளையும் என்பதும் ஒருவகை ஆரூடமே.  கடன்பத்திரங்களைச் சேமித்து வைத்துக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால் மேலும்  கடன்பல வரக்கூடும்.  இதுவும் ஆரூடமாகும்.

இப்போது ஆரூடம் என்பதை நன்றாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.இவற்றிலெல்லாம் சிந்தனை செலுத்தி அதை  ஓர் ஆய்வுக்கலையாக்கி உள்ளனர்.

எனவே  ஆர = நிறைவாக;  ஊடு = உள் நுழைந்து மறைந்துள்ள ஆற்றல்களை;  ----அறிந்துகொள்வதே ஆரூடம் .  அம் விகுதி என்பது முன்னரே சொல்லப்பட்டது. 

வீழ்ச்சி வருவதாயின் அது வரத்தான் செய்யும். சில முன்னறி குறிகளைக் கண்டு அவற்றை விலக்கிக் கொள்வது அறிவுடைமையே ஆகும்.

சில பொருள்கள் நிறைவலைகளை ஏற்படுத்துகின்றன;  சில பொருள்கள் அழிவலைகளை ஏற்படுத்துகின்றன.  இவை கண்காணா அலைகள். இப்போது இவற்றை உணரத்தான் முடிகிறது.  பின்னொரு காலத்தில் கண்டுபிடித்துப் பயன் பெருக்கும் அறிவை மனிதர்கள் அடையக்கூடும்.  யான்  அறியேன். இன்று நாமறிந்துள்ள பலவற்றை ஆயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்த மனிதர் அறிந்திருக்கவில்லையே.


புதன், 4 ஜூலை, 2018

கம்மல் கம்மி என்பன கருமைத் தொடர்பு

வானம் கம்மலாக இருக்கிறது என்பதைப் பேச்சுவழக்கில் நீங்கள் எதிர்கொண்டிருக்கக் கூடும்.  கம்மல் என்பது ஒரு காதணியையும் குறிக்குமென்றாலும் இன்றைய நம் பார்வை அது பற்றியதன்று,  மழை வரும்போல் தோன்றுகிறதென்பதற்குக் கம்மல் என்பார்களே அதையே இங்கு எடுத்துக்கொள்கிறோம்.

சிறிது இருட்டிக்கொண்டிருப்பது போன்ற நிலை ;  அதாவது கருமேகங்கள் மூடி வானம் ஒளிகுறைந்த நிலை.  அதுவே கம்மல் ஆகும்.

இதற்குமுன் வந்த இடுகைகளில் கரு என்பது கம் என்று திரிவதை உரைத்துள்ளோம்.  ருகர மறைவை அறிந்துகொண்டோம்.

கருங்கண் >  கருங்கணம் > கங்கணம் என்று திரிந்தமை போல,  கம்மல் என்பதும் கரு என்று தொடங்கும் ஒரு சொல் திரிந்ததனால் ஏற்பட்டதே என்பது தெளிவு.

கரு > கருமல் > கம்மல் என்றாகிறது.

பண்டைத் தமிழ்ப் பேச்சில் வானம் கருமைகொள்வதைக் கருமல் என்று கூறினர் என்பதை ஆய்ந்து தெளிந்துகொள்ளலாம்.  பேசியோரும் மறைந்து அவர்கள் எப்படிப் பேசினர் என்பதும் மறைந்துவிட்ட நிலையில் நுட்பங்களை நுணுகி ஆய்ந்துதான் தெரிந்துகொள்ளமுடியும்.

வட்டக்கரிய விழி ---- கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ

என்ற பாரதியின் பாட்டில் வானக் கருமை குறிப்பிடப்படுகிறது.

கம்மல் என்பது ஒளி வீசிக்கொண்டிருந்த நிலை மாறி, வானம் கருமை கொண்டு மாறுவதைக் குறிக்கும்,

கம்மி என்ற  சொல்லும் தொடர்புடையதே.  முதலில் இது ஒளி குறைந்த நிலையைக் குறிக்க வழங்கிப் பின்னாளில் பொதுவான குறைவைக் குறித்ததென்பதை அறிந்துகொள்ளலாம்.

கரு என்பதே கம் ஆகும்.

கரு+ ம் + அல்  =  கருமல் > கம்மல்.

மல் என்பதைச் சொல்லிறுதியாகக் கொள்வதில் தப்பில்லை. அது ஆய்வினை எளிதாக்கும் என்பதை உணரலாம்,

மான் என்ற ஆண்பால் சொல்லிறுதியும் இப்படி அமைந்ததே ஆகும்.

பெரு + ம் + ஆன் =  பெருமான்.     இய  + ம்  + ஆன் =  இயமான் > எசமான் > எஜமான்.
இயக்கும் திறமுடையோன் ஆதலின் இய என்ற சொல் பயன்  கண்டது.  இய> இயவுள் என்பது காண்க.

மான் என்பது ம்+ஆன் என்பதே;  ம் தொடர்புறுத்த வந்த இணைப்பு ஒற்று ஆகும்.  ஆன் என்பதே ஆண்பால் விகுதி.  ஆனாலும் மான் என்பதோர் இறுதி எனக்கொள்ளுதலில் பெரிய தவறொன்றுமில்லை.

கம்மல் என்பதில் இறுதி விகுதி அல் என்பதே.   கம் என்பது பகுதி என்பதினும் கரு என்பதே பகுதி என்று உணர்தல் தெளிவு ஆகும்.

கஞ்சன் என்பதும் கரு என்பதனடிப் பிறந்த சொல்லென்பது முன் இடுகையில்
கண்டு உவந்தோம்.


செவ்வாய், 3 ஜூலை, 2018

"கங்கணம்" அமைந்த விதம்

கங்கணம் என்ற சொல் அமைந்த விதம் வெகு சுவைதருவதாகும்.  அதை இப்போது அறிந்து மகிழ்வோமாக.

இது கருங்கண் என்ற சிற்றூர் வழக்கிலிருந்து வருகின்ற சொல்.  திட்டினால் பலிக்கக் கூடிய நாவு உள்ளவனை  கருநாக்கு உடையவன் என்பர்.  சிலருக்கு நாக்கின் ஒருபகுதியில் கருநிறம் படர்ந்திருக்கும்.  இவர்களுக்குக் கோபமூட்டி அதன் காரணமாகச் சாவ(சாப)மிடும்படி நடத்தலாகாது என்பர். மூக்கில் கருப்பு விழுந்திருந்தால் தரித்திரம் என்பர்.  (சாபம், தரித்திரம்) என்பவற்றை விளக்கியதுண்டு.  அவை இங்கு  இருக்கின்றனவா என்று தெரியவில்லை.  பார்வையிலும் கெடுதல் ஏற்படுவதுண்டு என்பர்.  தீயபார்வை பார்க்கும் கண் கருங்கண் ஆகும்.  கருங்கண்ணால் பார்த்தால் போகும் காரியம் தோல்வியில் முடியும் என்பர்.

இவை மூட நம்பிக்கை என்பாரும் இல்லாமல் இல்லை,

அதுவன்று நமது ஆய்வு.  கருங்கண் என்பதிலிருந்து கங்கணம் என்ற சொல் அமைந்ததை விளக்குவதே ஆய்வாகும்.

கருங்கண்+ அம் =  கருங்கணம்.
இதில் ருகரம் கெட,
கருங்கணம் >  கங்கணம் ஆகிறது.

கருங்கண்ணால் பட்ட பார்வை பாதித்துவிடாமல் இருக்க,  கையில் காப்புக் கட்டிகொண்டனர்.  காப்பு என்பது காவல் என்று பொருள்படும்.  காவலுக்காகக் கட்டுதல் என்னும் வினை,  அதற்காகக் கட்டப்படும் நூலையும் வளையையும் குறித்தது ஆகுபெயர்.  கண்ணைக் குறிக்கும் கங்கணம் என்ற சொல், பின் வளையை அல்லது காவல் நூலைக் குறித்ததும் ஆகுபெயரே.

பிறகாலத்தில் கண் தொடர்பாக மட்டுமின்றி வேறு இடர்களைத் தடுக்கவும் கட்டிக்கொண்டனர்.  மனவுறுதிக்காவும் கட்டிக்கொண்டனர்.  இப்படிப் பொருள் விரிய விரிய,  கங்கணம் என்ற சொல் தன் முதற்பொருளை இழந்து வேறு பொருள் காட்டத் தொடங்கிற்று என்பதை அறிக.

தொல்காப்பிய இலக்கணப்படி தன் முதற்பொருளிழந்து வேறுபொருளில் வழங்கும் சொற்கள் திரிசொற்களே.  மேலும்  ஓர் எழுத்தும் இழந்த சொல் கங்கணம் ஆகும்.

இவை யாவும் அறிந்து மகிழ்வாக இருங்கள்.

====================================

அடிக்குறிப்பு:

காப்பு என்பதை,  திரு . வி. க அவர்களால் போற்றப்பட்ட ஆசிரியர் க.ப. மகிழ்நன் விளக்கினார் ( தமிழ்க் களஞ்சியம்).<1950 .="" br="">