வெள்ளி, 15 ஜூன், 2018

எழுத்தறிஞனைக் கொன்ற எதிரிகள்.

சரிதானே    என்றாலும் இல்லைதான்  என்றாலும் என்னவம்மா
நரியாக   இல்லாமல் நல்ல  தெழுதிய ஆய்வெழுத்தன்
குறியாக வைத்திட்டுக் கொல்லுவ தென்பதிங்  கென்னஞாயம்?
மறியினைக் கொன்றுணும் மாந்தரின் கீழ்ப்பட்ட திச்செயலே.

ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் அவனுடைய சொந்தக் கருத்துகள் இருக்கும்.  அதாவது அதை எழுதும்போது அது அவனுக்குச் சரியாகத் தோன்றுகிறது. ஆனால் பிறருக்கு அது சரியில்லை என்று தோன்றலாம். சரியென்றும் தோன்றக்கூடும். அது சரியில்லை என்றால் அவன் ஆய்வு நல்லதா அல்லது ஏதும் தந்திரம் செய்கிறானா, உள்ளத்தில் பட்டதை உண்மையாகச் சொல்கிறானா என்று பார்க்கவேண்டும்,  அதற்காக அவனைக் கொல்வதென்பது அன்முறை ஆகும்.  அது ஓர் ஆட்டை கொன்று உண்ணும் செயலினும் கீழ்ப்பட்டதே ஆகு.,  அதில் இரக்கம் இன்மையினால். பிடிக்கவில்லையானால் ஆடு ஏதோ கத்துகிறது என்று நீங்கள் போய்க்கொண்டிருப்பதே நன்னெறியாகும். அவன்மேல் குறிவைத்து அவனைக் கொல்லலாகாது.

இது ஓரு நாட்டில் நடைபெற்ற நிகழ்வினைப் பற்றிய பாடல்.

நரியாக -  தந்திரமாக.
ஆய்வெழுத்தன் -  எழுத்தாளன்.
குறியாக -  குறிவைத்து.
மறியினை -  ஆட்டினை.
கொல்வோன் வருகையில் தன்னைக் காத்துக்கொள்ளத் திறனற்றது ஆடு.








புதன், 13 ஜூன், 2018

மாடி - தமிழ்ச்சொல்.

மாடி என்ற சொல் வழக்கில் உள்ளதாகும். மாடி என்பது வீட்டின் இரண்டாம் அடுக்குக்கும் அதற்குமேலும் உள்ள அடுக்குகளையும் குறிப்பதாகும்.

வீடுகட்டும் பாட்டாளி
வீதியிலே தூங்குகிறான்
கூடியந்த மாடியிலே
கும்மாளம் போடுகின்றார்

என்றொரு திரைக்கவிஞர் எழுதினார். திரைக்கவி யானாலும் நல்ல எதுகை மோனைகளுடன் எழுதி மகிழ்த்துவதில் நம் தமிழ்க்கவிகள் பண்பட்டவர்கள் ஆவர். தாம் வேலைக்கமர்த்தும் தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதிகள் செய்துதருவது கட்டுமானக் குத்தகையாளர்களின் சட்டப்படியான கடமை என்று சிங்கையில் சட்டமிருப்பதாகத் தெரிகிறது.  வீதியிலே தூங்குவோரை இங்குக்  காண்பதரிது.

அடுக்குமாடி என்பது பல அடிக்குகள் உள்ள கட்டடங்களுக்கு வழங்கும் சொல்.

புடவையில் விளிம்பு மடிக்கப்படுவதால் அதையும் மாடி என்று சொல்லும் வழக்கு உள்ளது.  சிற்றூரார் தெய்வத்துக்கும்  மாடன் என்ற பெயருண்டாதலால் அதன் பெண்பால் மாடி எனவரும். மாடத்தி எனினுமாம். பலரைப் பலிகொண்ட காவல்தெய்வம் மாடன்.  இவன்பெயர் மடி என்ற சொல்லடியாக அமைகிறது. மடி+அன் = மாடன் என்பது முதனிலை நீண்டு விகுதிபெற்ற ஆண்பாற்பெயர். பின்னர் இவனுக்கு மாடு ஒரு வாகனமாய் ஆக்கப்பட்டதென்று தெரிகிறது.  பிணம் தின்னும் மாடன் ஆதலின் இவன் சுடலைமாடன் என்பர்.

"மாடனை வேடனைக் காடனைப் போற்றி
மயங்கும் அறிவிலிகாள் ....." 

என் கின்றார் பாரதி.  இவன் மனிதக்குருதி கேட்பானாம்.

மாடி என்பது இடர், இக்கட்டு, சினம் என்றும் பொருள்படும்.

மாடி - மடத்தின் தலைமையையும் குறிக்கும்.

மாடி  கூரையில்லாத கட்டிடத்தில் மேலடுக்கையும் குறிக்கும்.

மடி என்பது வினையடிச்சொல் ஆகும்.  இது முதனிலை நீண்டு  மாடி ஆகும்.
(தொழிற்பெயர்.)

மாடி+அம் =  மாடம்.    (  எழுநிலை மாடம்,  வழக்கு நோக்குக).

கட்டிடத்தின் ஒரு நிலை அல்லது அடுக்கு    அதன் தரை ஈறு மேலே எழுந்து,  மடிந்து திரும்பி எதிர்ச்சுவருடன் இணைந்து நிற்பது  போல் இருப்பதால்  அது மாடி எனப்பட்டது. மடி -  மாடி.  ஒவ்வொரு நிலையும் ஒரு மடிப்பாகிறது.  பன்னிலை மாடமென்பது பன்னிலை மடி ஆகும். புடவை மடிப்பும் மாடியே.

மடி என்பது திரும்புதல். இடர் என்பது மாறிமாறிவருவது.  ஒருமுறை வந்து பின் மாறி மறுமுறை வருகையில் அது மாடி ஆகிறது,  இப்படி அது இடர், இடுக்கண் என்ற பொருளை அடைகிறது,





செவ்வாய், 12 ஜூன், 2018

மா, மகா, இர்> இரு பெரிது கருமைப் பொருள்.

கருமை:

ஒளி இல்லாத விண்ணிலே இருப்பது கருமை மட்டுமே.  விண் எவ்வளவோ பெரியது.  மாணப் பெரிது.  ஆரளவில்லாதது. எங்கும் கருமை. எதிலும் கருமை. இதைத்தான் விண் என்றனர் தமிழர்.  விண் என்பது இயற்கை இருள். ஒன்றுமற்ற இடம்.  பெரிதாகிய விண், தமிழர்களால் பெரிதும் கொண்டாடப்பெற்றது.  இது பிற்காலத்தில்   விண்ணு > விஷ்ணு ஆனது.

விண்ணில் சூரியனும் உடுக்களும் தோன்றின. ஓளி தந்தன.  சூரியன் ஒளியும் வெம்மையும் தந்து உயிர்கள் குளிரில் வாடுவதை விலக்கிற்று.  இது செவ்விய ஒளி. செம்மை சிவப்பு. செங்கதிரோன் எனப்பட்டான் சூரியன்.  விண்ணும் சூரியனும் தோற்றமளித்த காலை நாமில்லை.  ஆகையால் இவை எப்படித் தோன்றின என்பதை நாம் அறியோம்.  நாம் பிறந்த் பின் நோக்குங்கால் இவை இருக்கின்றன.

விண்ணு  -  விஷ்ணு - அகண்ட ஆகாய வெளி. கருமை அல்லது நீலம் அதன் வண்ணம்.

செங்கதிர் -  சிவப்பு - சிவம்.  ஒளி.  ஆகாயத்தில் தோன்றும் ஒளி.

இவற்றைத் தமிழர் வணங்கினர்.

இவற்றுள் மிக்க விரிவானது விண்ணு என்னும் விஷ்ணுதான்.  இது மகா விஷ்ணு எனவும் பட்டது.   மக -  பிறத்தல்.   மக -  மகன்; மகள்;  மகார் - பிள்ளைகள்; மக்கள்.   மகம் என்ற உடு அல்லது நட்சத்திரம்.  பிறந்தவற்றுள் எல்லாவற்றையும் உள்ளடக்கி நிற்பது விண்ணு என்ற விஷ்ணுதான்.  இது இயற்கை.  மிகப் பெரிதும் பரிதுமாதலின் மகாவிஷ்ணு ,  (மகவிண்)  ஆனார்.
இது இயற்கையை உருவகப்படுத்தியது ஆகும்.

பிறந்தவற்றுள் விஷ்ணுவே விரிவாதலால் மக (பிறத்தல்)   என்ற சொற்கு பெரிது என்ற பொருள் மொழியில் ஏற்பட்டது.   மக - பிறந்தது; மக >  மா: பெரிது; மக > மகா:  பெரிது.  

இருளே எங்கும் பரந்து கிடப்பது.  தாமேயாய் எங்கும் பரந்து கிடந்த இருள்,  பரந்தாமன் ஆனான். (தாமே எங்கும் பரந்து கிடந்த இருள் -   தாமே பரந்து > பரந்தாமன். 

(தாமம் : கயிறு.  கயிற்றால் உரலில் கட்டப்பட்டவன் என்பது தொன்ம விளக்கம்.)

சிவமென்பது இருளில் ஒளி.  ஒளியும் ஓரிடத்திலிருந்து புறப்பட்டு எங்கு தன் கதிர்களைப் பரப்பி,  இருளை விலக்கிற்று.  ஒளி மறைந்தக்கால் இருள் கவியும்.  இருள் கப்பிக்கொள்ளும்.  இப்படி செவ்வொளி பரப்பி நிற்பது, இருள் கடிவது  சிவமே.  சே என்றாலும் சிவப்பு.  சேயோன்.  சிவப்பன். சிவந்தான். சிவன்.

எல்லாம் அழகுதான். அழகே முருகு.  முருகன் எனப்பட்டான்.

விண்ணு, சிவம். முருகு என்பன மனிதர்களல்லர்.  இருந்தாலும் அன் விகுதி கொடுத்துச் சொல்வது மொழிமரபு. அல்லது உருவகம்.

பரந்து நிற்போன் பரமன்.  விண்ணு என்னும் விஷ்ணு பரமன்; சிவம் பரமன்.

இருளே பெரிதாதலின்  இரு என்ற அடிச்சொல்லுக்கு: பெரிது என்ற பொருள் மொழியில் ஏற்பட்டது.   இர்> இருள். உள் என்பது விகுதி. கடவுள், இயவுள் என்ற சொற்களிலும் உள் என்பது விகுதியே. அடிச்சொல் வினையாயினும் அன்றாயினும் வரும்.

மக என்ற அடிச்சொல் மா என்றும் திரிந்தது.  தலையெழுத்தை அடுத்து நிற்கும் ககரத்தால் தலையெழுத்து நீளும்.  பகு > பா என்று திரிந்தாற்போலும்.  பகுதி> பாதி. மிகுதி > மீதி.  இதுபோலவே மக என்பது மா ஆனது. பிறந்த விண்ணு பெரிதாதலின்,  மக என்பது மகா என்றும் திரிந்தது.  பெரிது என்பதே பொருள். பொருள் மாற்றம் ஏதுமில்லை. ஒலித்திரிபுகள்தாம்.

இரு பெரிது.  இருள் பெரிது.
மக பெரிது; மா பெரிது.  மகா பெரிது.

விண் கருமையாதலின்   மா என்பது  பெரிதென்றும் பின்னும் கருமை என்றும் இருபொருளும் தரும்  என்பதுணர்க.

மா என்பது கருமை.  அழுக்கும் கருப்பு.  ஆகையால் மா என்பதிலிருந்து ஒரு சு விகுதி சேர்ந்த சொல் உருவாகி மாசு என்று அழுக்கைக் குறித்தது.   அழுக்கு கருப்பு என்றால் கருப்பெல்லாம் அழுக்கன்று.  அழுக்கு வகைகளில் கருப்பு அழுக்கு மாசு எனப்பட்டது.

மா> மை:  கருப்பு நிறமான ஒரு பொருள்.

மை > மை+ இல்:  மயில். ( ஐகாரக்குறுக்கம்).  இல் = இடப்பெயர்.  கருப்பிடங்களை உடைய பறவை மயில்.

மை> மையில் > மயிலை.     (  மயிலைக் காளை).  மயிலைநாதன்:  மயிலை நிறத்தோனாகிய பரம்பொருள். 

இவற்றிலிருந்து விண் மா மகா இர் என்பவை உணர்க. இதில் சொல்லப்பட்டாதவை இன்னும் உள.  அவை விடப்பட்டன.