சனி, 31 மார்ச், 2018

திட்டம் தீட்டு



இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சொல்லைப் பற்றிச் சற்றுத் தெளிவாக அறிந்துகொள்வோம்.

நம் முன் இருக்கும் சொல் “திட்டம்” என்பது. ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க அந்தத் தொண்டு நிறுவனத்திடம் “திட்டம்” எதுவும் இல்லை என்று ஒரு வாக்கியம், நம் கவனத்தை ஈர்க்கிறது. “திட்டம் தீட்டினால்தானே இருக்கும்” என்றொருவர் சொல்கிறார்.

ஆம்.  திட்டம் என்பது தீட்டப்படுவது.  திட்டம் போடுவது என்ற வழக்கும் உள்ளது.
திட்டம் தீட்டு.

தீட்டு என்பதே வினைச்சொல். திட்டம் என்பது இவ்வினையினின்று பிறந்த சொல்.
தீட்டுதல் > தீட்டு+அம் = திட்டம்.

அம் விகுதி சேர்ந்து சொல் அமைவது இயல்புதான். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது:  தீட்டு என்ற வினை, அம் என்ற விகுதியை எதிர்கொள்ளும்போது  திட்டு என்று குறுகி அப்புறம் விகுதியை ஏற்கிறது.

இங்கு சொல் என்பது தீட்டு என்ற வினைதான். அது திட்டு என்று விகுதி ஏற்பதற்காக உருமாறும்போது அந்த  இடைமாற்ற உருவினை ஒரு சொல்லாக ஏற்பதில்லை.  ஆகவே விளக்கத்தின்பொருட்டு அதனை பிறைக்கோடுகளுக்குள் போடலாம்.

தீட்டுதல்:   தீட்டு+ அம் =  (திட்டு+அம்) > திட்டம் என்று காட்டவேண்டும்.

கருவில் வளரும் குழந்தை,  அதன் வெவ்வேறு வளர்ச்சி வடிவங்களில் ஒரு கால் தவளை போலவும் இன்னொரு கால் வாலுடனும் இருக்கிறது.  அவையெல்லாம் எப்படி குழந்தையின் வடிவங்கள் என்று நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையோ  அதுபோலவே இதுவும். சொற்கள் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளைக் கடந்து பின் முழுச்சொல் ஆகலாம்.

தீட்டு என்ற வினையிலிருந்து முதனிலை குறுகி அமைந்த பின் விகுதி பெற்று அமைந்ததே திட்டம் என்ற சொல்.

இதுபோல முதனிலை திரிந்து விகுதி பெற்ற இன்னொரு சொல்: சவம் என்பது.
சா(தல்)  >  சா(வு)+ அம் =  சாவம் >  சவம். இங்கும் முதனிலை குறுகி விகுதி ஏற்றது
.
சா+அம் என்று காட்டி, இடையில் ஒரு வகர உடம்படு மெய் தோன்றிற்று எனினும்  அதுவுமது. ஆகவே வுகரம் இடப்பட்டு விளக்கம் தரப்படினும் அஃதே என்`க.

இங்கு உணர்த்த முனைவது சா என்பதினின்று அமைந்ததே சவம் என்னும் சொல். மற்றவற்றைப் பேசி நேரம் கடத்த நம் பண்டிதர்கள் உள்ளனர்.

இனிச் சா+வ்+அம் = சவம் எனினும் ஒக்கும்.

முதனிலை குறுகிய சொல்லுக்கு இன்னொன்று எ-டு:  தோண்டு -  தொண்டை. ஐ விகுதி.

ஆனால் தீட்டு+அம் > திட்டம் என்பதில் டுகரத்தில் ஏறிநின்ற உகரம்1 கெட்டு,  தீட்+ட்+அம் = திட்டம் எனக் குறுகிப் பிறந்தது சொல்.  தமிழில் தீட் என்பது சொல் அன்று.  பிறமொழிக்கு ஏலும். தமிழில் அது ஓர் இடைவடிவம் ஆம்.

குறிப்பு: 

1இங்கு கள்ளப்புகவர் ஏற்றிய பிசகு கண்டுபிடித்துத்
திருத்தப்பட்டது. 

வேறு மாற்றங்கள் காணின் தெரிவிக்கவும்,


வெள்ளி, 30 மார்ச், 2018

அந்தஸ்து , அஸ்திவாரம்

தழுக்குதல்  என்பது ஒரு  பழந்தமிழ்ச் சொல். இது  ஒருவன் வாழ்வில் வளம்பெற்று   உயர்வதையும்  குறிக்கும்.  இதன்  அடிச்சோல் "தழு " என்பது.
அம் =  அழகிய.
தழு =  வளமும் உயர்வும்.  (வினைச்சொல்).
து :   விகுதி.
அந்தழுத்து >  அந்தஸ்து.  
இதில் ஓர் எழுத்து : ஸ் என்பது இடப்பட்டது.  அது ழுகரத்துக்குப் பதிலாக.
ழகர வருக்கங்களுக்கு வேற்றொலிகள் நுழைக்கப்படுவது இயல்பான அயற்றிரிபு 
ஆகும்.
இன்னோர் எடுத்துக்காட்டு:
அழுத்திவார்தல் :  அழுத்திவாரம் >  அஸ்திவாரம்.
அஸ்தி வாரம் இடும் இடத்தில் அழுத்திவாரவேண்டும்.  அதுவே கருத்துக்
சொல்லமைப்புக்குக் காரணமும் ஆகும். 

அந்தஸ்து என்பதற்கு மற்றோர் முடிபும் கூறுதல்  அமையும்.

அம் -  அழகிய;
தகம் - தகு+ அம்;  அதாவது தகுதி.
அம்+தகம்+து =  அந்தகத்து > அந்தஸ்து.
அதாவது அழகிய தகவு உடைய நிலை.

எங்கனமாயினும் இது தமிழிலிருந்து தோன்றித் திரிந்த சொல் என்பது
தெளிவு.

ழு அல்லது க வுக்குப் பதில் ஸ்.  அவ்வளவுதான் திரிபு.





நடுதலும் நாடும்.



நடுதல் என்ற சொல்லை முன் ஆய்ந்துள்ளோம். இன்று அதே சொல்லை வேறோரு கோணத்தில் சிந்தித்து அறிவோம். (நாடு என்ற சொல்லின் தொடர்பில்.)

விதை நடுகிறவன் என்ன செய்கிறான்?  விதையை ஓர் இடத்தில் ( மண்ணில் ) நட்டுவைக்கிறான். அதாவது புதைத்துவைக்கிறான்.  

ஆகவே நடுதல் என்பது முழுமையாகவோ பாதியாகவோ மண்ணில் செலுத்துதல் ஆகும்.

நடுதல் என்பது நள் என்ற அடியினின்று வருகிறது.

நள் > நடு.

ஒன்றில் ஒன்று புகுவது அல்லது உட்செல்வதுதான் நடுதல். இங்கு நடுதலில் மனிதன் விதையை உட்செலுத்துகிறான்.  ( action through human agency).

நாடாது நட்டலிற் கேடில்லை என்பார் திருவள்ளுவ நாயனார்.  நடு+ அல் = நட்டல்.  அதே நடு என்ற சொல்தான் நட்டல் என்னும் நட்பையும் குறிக்கிறது.  விதை மண்ணில் நடப்படுதல்போல்  அன்பு உள்ளத்தில் நடப்படுகிறது.

நள் என்பது முன்வடிவம்.

நள்+ தல் = நட்டல்;   ள்+ = .
நடு + அல் = நட்டல். டகரம் இரட்டிப்பு.

இனி நள் அடியிலிருந்து:
நள் + பு =  நட்பு.  (வல்லெழுத்துத்  திரிபு).
நள் + பு =  நண்பு. (மெல்லெழுத்துத் திரிபு).

இருவகையிலும் அமையும்.
நட்பு > நட்பினர்.   நண்பு > நண்பர்.
நண்பர் என்பது இடைக்குறைந்து நபர் என்றுமாகி,  ஓர் ஆள் என்ற பொருளில் இப்போது வழங்குகிறது. 


சில கட்சிக்காரர்கள் அந்தத் தோழர் இந்தத் தோழர் என்று குறிப்பிடுவது போன்றதே நபர் என்பதும்.

ஆள் என்ற சொல் ஆட்சிசெய்வோன் என்ற பொருளில் வழங்காமல் ஒரு மனிதன் என்று வழங்குவது போலவே நபர் என்பதும் நட்பு என்ற பொருளழுத்தம் உடைய சொல்லாய் இல்லாமற் போய்விட்டது.  இவை வழக்கில் மக்கள் ஏற்படுத்திய திரிபுகள்.

நட்டு நிற்றலே நட்பு.  குடியிருத்தலும் அப்படியே ஆகும்.  நிரந்தரமாக எங்கே மக்கள் தங்குகிறார்களோ (தங்களை நட்டுக்  கொள்கிறார்களோ ) அதுவே நாடு ஆகும்.   மக்கள் அங்கே நட்டு நிற்கிறார்கள்; நட்டு நடக்கிறார்கள்;  நட்டு வாழ்கிறார்கள்.  நட்டிருப்பதே நிரந்தரமாகத் தங்குதல்.

நட்ட விதை எப்படி மண்ணில் ஓர் இடத்தில் தங்கி விட்டதோ அப்படியே மனிதனும்.

இப்போது நள்> நடு> நாடு என்பதன் பொருளைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

நடுதலாவது நிரந்தரமாய் இருத்தல். விதையும் இருக்கும்; நட்பும் ஒருவன்பால் இருக்கும்; மக்களும் பெருவாரியாக ஓரிடத்தில் இருப்பர். எல்லாம் நள்! நள்! நள்!
நடு என்பது முதனிலை நீண்டு நாடு என்று அமையும்.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

இனி நளிதல் என்ற வினையும் நள் என்பதன் வெளிப்பாடே.  நளிதல் என்பது பரத்தல் என்றும் பொருள்தரும். இப்போது:

நள் > நளி;
நள் > நடு.
நள் > நடு  > நாடு.

மக்கள் நட்டுக்கொண்டு வாழிடம்;  ஒரு பரந்த இடம்.

நள் என்பதன் பல்வேறு பொருட்சாயல்களைப்
புரிந்துகொண்டு இன்புறுக.