ஞாயிறு, 5 நவம்பர், 2017

படுதல் படுத்தல் படம் சொற்கள் அமைப்பு

படுதலும் படுத்தலும்.

ஒரு முனையால் மட்டும் தொட்டால் அது படுதல். இது தன்வினை  எனப்படும்.  ஆனால் அகன்ற நெடிய பொருள் தன் முழுமைப் பக்கமும் மற்றொரு பொருளின் பக்கத்துடன் படுமாறு தொடுமாயின் அது படுத்தல் எனப்படும்.  ஒரு மனிதன் தன் முதுகுப் பகுதி அல்லது முன்பகுதி முழுமையும் பாயில் படுமாறு அதன்மேல் கிடப்பானாயின் அவன் அப்பாயில் படுத்துள்ளான் என்று சொல்வர்.  இங்கு படுத்தல் என்பது படு என்பதன் பிறவினையாகிறது.

அதாவது அம்மனிதன் தன் உடலைப் பாயிற் படும்படி கிட்த்துகிறான் என்பதாகும்.

படம்

இனிப் படம் என்பதைப் பார்ப்போம்.  இது படு+அம் என்று அமைந்த சொல்.  ஒரு பொருள் இன்னொரு பொருள்மேல் படுவதனால் அல்லது படுப்பதனால் ஒரு பதிவு உண்டாகுமாயின் அந்தப் பதிவே “படம்”  ஆகிறது.  இனி ஒன்றன்மேல் ஒரு பொருள் படிந்து ஒரு உருவோ பதிவோ உண்டாகுமாயின் அந்தப் படிவும் படமே ஆகும்.

அடுதலினின்று அடித்தல் என்பது இன்னொரு சொல்லாய்த் தோன்றியதுபோல்  படுதலிலிருந்து படிதல் என்பதும் படித்தல் என்பதும் தோன்றின. படி+ அம் என்பதும் படம் ஆகும்.  இது உருவம் படிதலையும் உள்ளடக்கும். 

இனி:

படி + அம் = படிவம் (வகர உடம்படு  மெய்)

படி + கு + அம் =  படிகம்  ( கு சொல்லமைப்பு இடைநிலை; அம் விகுதி)

படி என்ற  அடிச்சொல்லிலிருந்து இன்னும் பல புதிய  சொற்களையும் உருவாக்கலாம்.  இசைவான புதுப்பொருள் கிட்டினால் அப்போது அமைப்போம். நம்மிடம் ஏராளமான விகுதிகள் உள்ளன; ஒரு கவலையும் இல்லை.

இதையறியால் படம் என்ற சொல்லைத் தமிழன்று என்று ஒரு அகரவரிசை உடையோன் கூறியுள்ளது நேயர்கள் அறிந்ததே. அது உளறல்.

வெள்ளி, 3 நவம்பர், 2017

தூதன் என்ற சொல்.

தூதன் என்ற சொல்லைச் சில ஆண்டுகட்கு முன் விளக்கியிருந்தேன். அது இப்போது இணையத்தில் இல்லை. அதை மறுபதிவு செய்வோம்.

தூ என்பது ஓரெழுத்துச் சொல்.

தூ என்றால்:

சீழ்.
பகை
பற்றுக்கோடு. SUPPORT
சிறகு
வெண்மை "தூவெண் மதி சூடி" (சைவத் திருமுறை)
சுத்தம். ( உத்தம் > சுத்தம்: தூய்மை முதன்மை என்று பண்டையர் கருதினர்).
தசை ( தசை> சதை. ச>த)
வலிமை.

இத்தனை பொருள்களும் உள்ள சொல்தான் இந்த ஓரெழுத்துச் சொல்.

தூதனாய் இருப்போன் மன்னன்பால் பற்றன்பு ( விசுவாசம்)


உடையவனாய் இருத்தல் முதன்மையாகும். ஐந்தாம்படை


செயல்பாடுகள் உடையவன் தூதன் ஆதல் இயலாது.


ஆகவே, தூய்மை குறிக்கும் தூ என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து


தூதன் என்ற சொல் பிறந்தது.













மேலும் தூது செல்பவன் அரசுக்கு என்றும்


பற்றுக்கோடு தருவோனாக , உடையவனாக செயல்படவேண்டும்










ஒற்றன் என்பவன் ஒன்றியிருந்து இரகசியங்களை
அறிந்துவருபவன்.

ஒன்று(தல்) > ஒன்று > ஒற்று (வலித்தல்) > ஒற்றன்.

தூதன், தூது : இத்தமிழ்ச்சொல் பலமொழிகளையும்
அளாவி நிற்பது பெருமைக்குரித்தேயாம்.

தூ ( அடிச்சொல்)

தூது ( து விகுதி) 
இவ்விகுதி பெற்ற பிற சொற்கள்
: மாது, கைது. விழுது தோது  வாது  சூது.
என்பன  காண்க)

தூது + அன்.

பெரும்பாலும் ஆடவரே இத்தொழிலில் ஈடுபட்டமையால்
பெண்பாற் சொல் வழக்கில் இல்லை.


தூதுவை, தூதினி எனலாம்!

தூ என்ற சொல்லின் மூலச்சொல் ஊ என்பது.  இது அ, இ. உ என்ற
முச்சுட்டுக்களில் ஒன்றான  உ என்பதன் நெடில் வடிவம்.  உ என்றால் முன்னிருப்பது, முன்செல்வது என்ற இவைபோலும் பல
முன்னிகழ்வுகளைக் குறிக்கும். தூதன் என்பவன் முன் செல்பவன்.
அரசன் ஒரு நாட்டிடம் தொடர்பு கொள்ள நினைக்கையில்
தூதனையே முன்  அனுப்புவான்.  எனவே தூது என்ற சொல்
முறையாக அமைந்துள்ளது.  ஒரு காதலி ஒரு தோழியைத் தூது
அனுப்புகிறாள்.  அதாவது உ > ஊ :  முன் சென்று அறிந்துவர
அனுப்புகிறாள் என்று பொருள்.

ஊ என்ற நெடிற்சுட்டில் தோன்றி முன்செலவைக் குறித்து, தூய்மை பற்றுக்கோடு ஆகிய நற்குண நற்செயல்களையும் குறித்து,
முன்னணியில் கருதற்குரிய இனிய அமைப்பை இது
வெளிப்படுத்துவதை பகுத்தறிந்துகொள்க.



அறிந்து இன்புறுவீர்.












இலடாக்கில் வானூர்தி ஓடுபாதைகள்.

சீன அரசு அதன் -நிலப்பகுதியில் ஒழுங்கான ஓடுபாதைகளை அமைத்துத்
தன் கடமைகளை முறையாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்திய அரசு வெகுகாலமாக இதில் ஒழுங்கான கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. பனிபடர் நிலப்பகுதியான இலடாக்கில்
கவனிப்பின்றி வேலைகள் கிடக்கின்றன. படைவீரர்களைப் பனிப்பாறைகள் அடர்பகுதியில் கிடத்திவிட்டுக் குளிரில் வாடச்செய்துள்ளனர்.  மோடியின் அரசு பதவியேற்ற பின்புதான் இப்போது மீண்டும் இப்பகுதி அரசின் கவனித்தில் வரத் தொடங்கியுள்ளது.

படைவீரர்களை அதிகம் தண்டிக்காமல் வசதிகள் செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. அதை மோடியே நன்'கு நிறைவுசெய்கிறார்.

அதைப்பற்றிய ஒரு துணுக்குச் செய்தி இங்கே உள்ளது.  யாம் படித்துச் சுவைத்தோம்.  நீங்களும்:.......

http://indiatoday.intoday.in/story/doklam-indian-air-force-ladakh-airfields/1/1082130.html