புதன், 27 செப்டம்பர், 2017

ஏளனம் என்ற சொல்லின் அமைப்பு.



இன்று ஏளனம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்து இன்புறுவோம்,
இதற்குரிய வினைச்சொல் எள்ளுதல் என்பதாகும்.

சில தொழிற்பெயர்கள் முதனிலை நீண்டு அமைபவை. அதாவது வினைச்சொல் சுடு என்றிருந்தால் சூடு என்று நீண்டு பெயர்ச்சொல் ஆகும், அப்புறம் ஒரு விகுதி பெற்றுத் தொடர்புடைய பொருளையோ அதே பொருளையோ குறிக்கும்.   தொடர்புடைய பொருளைக் குறிப்பதற்கு எடுத்துக்காட்டு:  சூடு > சூடம் அல்லது அல்லது சூடன் என்பது. சூடன் என்பது நாம் பூசையின்போது கொளுத்தும் சூடன்,  சூடுதல் என்ற வினைச்சொல் வேறு.   சுடு என்பதிலிருந்து அமைந்த சூடு (வெம்மை) என்பது வேறு.

இதுபோலவே எள்ளுதல் என்ற வினைச்சொல்லும்.

எள் என்பது வினைப்பகுதி அல்லது ஏவல்வினை.

எள் என்பது எள்ளு என்று உகரச் சாரியை பெற்றும் வழங்கும்.  எள்> எள்ளுதல்.  கொள் > கொள்ளுதல் எனல்போல.

எள்> ஏள்+அன்+அம் = ஏளனம் என்றானது.

அன் : விகுதி அல்லது சொல்லிடைநிலை.

அம் :  விகுதி.

விகுதி என்பது மிகுதி என்பதன் திரிபு. சொல் இறுதி மிகுந்து நிற்றல்.  ம- வ திரிபு.

அன் அம் என்பவை மிகுதிகள்.  மிகுதி என்பதே விகுதி என்று திரிந்தது.

திரிபுக்கு முந்திய வடிவம் காணாமற் போய்விடுவதும் உண்டு.  அது வழக்கற்றுப் போவதும் அது பயன் கண்ட நூல்கள் அழிந்துவிட்டமையும் காரணங்கள். எடுத்துக்காட்டு:  

மனிதன்

   இதன் பெண்பால் வடிவம் மனிதை. இது  வனிதை என்று திரிந்தபின் 
(    ம  - வ திரிபு )அதையே மக்கள் விரும்பிப் பயன்படுத்த, மனிதை என்ற வடிவம் ஒழிந்தது. மனுசி (மனுஷி) என்ற வடிவமும் உள்ளது.. இதைப் பின் வேறோர் இடுகையில்  காண்போம்.

எள் என்பது ஒரு சிறிய தானியவகை.  எள் என்பதன் கருத்து சிறுமை என்பது.  எள்ளுதல் -   சிறுமைப்படுத்தல்.

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும்" என்பது நாயனார் வாக்கு.  எள்ளுதல் என்பதன் எதிர் எள்ளாமை. 

Some errors keep recurring. Will review.


செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சென்னை சேர்ந்த ரோகிங்க்யாக்கள் பெருமகிழ்ச்சி.



சென்னைக்கு உரோகிங்கியா வரவு.

கவிதை.


சென்னைக்கு ரோகிங்கியா வந்து  சேர்ந்தார்;

சீரான மறுவாழ்வால் உந்தப் பெற்றார்;

தொன்னைக்குள் கஞ்சிகண்ட நெஞ்சம் கொஞ்ச,

தொல்லையிலா இங்குதானே தூய வாழ்வே;

இந்நாளே போலஇனி எந்நா  ளேனும்

இனிவருமா என்றுரைகள் மலர்ந்த வாய்கள்;

மண்ணுலகில் இங்குபோல்முன் மகிழ்ந்த தில்லை!

மகிழ்தலமேல் துன்பமிலை மான்கள் துள்ளும்.



அதுதானே தமிழர்தம் விருந்தே ஓம்பல்;

அதற்கீடாய் அகிலத்தில் நாடொன் றில்லை.

----------------------------

மகிழ்தலமேல் :   மகிழ்வுக்குரிய  இடமானால் அது 
மேலானது என்பது  பொருள்.  -  மகிழ் தலம்: 
வினைத்தொகை. 
மகிழ்தலமேல் என்ற தொடரில்  மகர ஒற்று (தல(ம்) )  
தொக்கது.



(குறிப்பு:  இவர்கள் இங்கேயே வைக்கப்படுவரோ - 
தெரியவில்லை.
நல்லபடி சாப்பிட்டு நன்றாக இருக்கட்டும்.) 

இலக்கணக்குறிப்பு:


"இங்குதானே" :   தமிழாசிரியர் சிலர் “இங்குத்தானே” 
என்று வல்லெழுத்து மிக்கு வரவேண்டும் என்று 
வேண்டுவர்.  அதுவே இலக்கணம் என்றாலும் 
இவ்விடத்து இங்கனம் மிகின் ஒலி கெடும்; ;   
இங்குத்தானே என்பது நாலசைச்சீராய் வந்து 
பாட்டும்  கெடும் என்று அறிக. ஆதலின் 
“இங்குதானே” என்பதே சரியாகும். மேலும் 
பாட்டில் வேண்டும்வழி தொகுக்கலாம் 
(ஓலிகளைக் குறைக்கலாம்) என்பதே  யாப்பின் முறை.  
 அந்த இலக்கணம் உரைநடைக்கு உதவும்.  
 இங்கு பொருந்தாது.
மேலும் பேச்சு வழக்கில் “ இங்குத்தானே”  
 என்று யாரும் பேசுவதில்லை. ஆகவே அவ்விலக்கணம் 
இப்போது பொருந்தவில்லை. எனினும் “இங்குத்தானே” 
என்பதுபோலும் தொடர்கள் பயன்படும் இடங்களும் 
பாட்டில் உளவென்று அறிக.  இங்குப்போல் என்று 
ஈண்டு வராமையும் அன்னதே. 

கடவுள் - மூவாசை - மறுபிறவி - பிறப்பறுத்தல்



கடவுள் மனிதனை ஏன் படைத்தார் ?

ஒவ்வொரு மனிதனுக்கும் இதைப்  பற்றிய சிந்தனை எழுவதுண்டு. முன்னரே சமய அறிஞர் எவரும் சொல்லியிருந்த காரணங்களை அறிந்து அவற்றைப் பின்பற்றி நில்லாதவருக்கு, கேள்விக்கான பதில் எளிதாய் இருப்பதில்லை.  இச்சிந்தனையும் நின்றுவிடுவதில்லை.   சமயப் பின்பற்றாளர்கள் தாம் கேட்டறிந்தவற்றையே ஒப்புவித்துவிடுவர். அது எளிதுதான்.

இந்து சமயத்தில் நிலவும் கருத்துப்படி தொடக்கத்தில் கடவுள் மட்டுமே இலங்கினார்.  அவர் ஓர்  அரு:   அரு என்பது எந்த உருவிலும் இல்லாத தன்மை.  உரு என்பதன் எதிர்ச்சொல் அரு.  அவர் ஆணுமில்லை.  பெண்ணுமில்லை. (அவர், அவன், அவள் என்று சுட்டுவது,  நாம் வேறுவழி அறியாமையால்தான்,) (படைத்தவனையே சுட்டுதல் இயலாத ஒன்றாம்)
 பான்மை இல்லாத அரு அவர்.   அவரைப் பெற்றவரும் இல்லை.  வளர்த்தவரும் இல்லை. அப்போது  அவருக்கு நாமறிந்திராத ஒரு காரணத்தினால்,  தம்மிலிருந்து (தன்னிலிருந்து)  பல ஆன்மாக்கள் பிரிந்திடல்  நிகழ்ந்தது. இவை அந்தப் பேரான்மாவுடன் சென்று ஒன்றுபட இயலவில்லை.  அவற்றுக்கு ஒவ்வொன்றுக்கும் ஓர் உடலைத் தந்து  அதன்மூலமாக மேன்மை பெற்றுத் தம்மை வந்து இறுதியில்  அடையும் ஒரு வழியை அவர் உருவாக்கினார். இதன் காரணமாகவே நாமும் இவ்வுலகில் பிறந்து  பிறப்பின் பயனை அடைந்து உடலினின்றும் விடுபட்டு இறுதியில் அவருடன் சென்று இணைகிறோம். அல்லது இணைய முயல்கிறோம்.
பிறந்து உடலை எடுத்த ஒவ்வோர் ஆன்மாவும் அவரை மறந்து உலக நிலைகளில் மூழ்கி வேறுபட்டு நிற்பதால் அவரை நெருங்கிச் செல்ல இயலாமல்  இங்கு யாவரும் உழன்றுகொண்டிருக்கிறோம். இவ்வுலகையும் அதன்கண் உள்ள கவர்ச்சிகளையும்  ஒதுக்கிவிட்டு கடவுள் ஒன்றையே நினைத்து நிற்கவேண்டும். இப்படிச் செய்தால் அவரினின்று பிரிந்திருப்பதற்கான காரணங்கள் அனைத்தும் விலகிவிடும்.

அவரை மட்டுமே நினைத்திருப்பதற்கு மண்ணாசை. பாலியல் ஆசை, பொருளாசை அனைத்தையும் துறக்கவேண்டும். இம் மூவாசைகளின் தலையீட்டினால் நாம் அவரையே நினைத்திருக்க முடிவதில்லை.  பேரான்மாவுக்கும் நமக்குமுள்ள பிரிவு தொடர்ந்து வந்துகொண்டுள்ளது.  ஓர் உயிர்வாழ்க்கையின் முடிவில் வெற்றியின்மையால் மீண்டும் பிறக்கின்றோம். மறுபிறவியானது கடவுளை அடைய அவருடன் ஒன்றுபட இயலாமற் போனதையே எடுத்துக்காட்டுகின்றது. தோல்வி! என்றாலும் ---

முயற்சி திருவினை ஆக்கும்; அஃதின்றேல் மெய்வருத்தக்கூலியாவது தந்திடுமே!

திருட்டு கொள்ளை ஏமாற்று முதலிய வினைகள் அவரை நாம் எண்ணிநிற்கத் தவறியமையையே காட்டுகின்றது.  இவற்றால் மீண்டும் பிறக்க நேர்கின்றது.  எல்லா அழகும் தன்னில் உள்ள கடவுளை மறந்து ஒரு பாலியல் உணர்வில் தோய்ந்திருந்துவிட்டால் அவரை மறந்துவிட்டதனால் மறுபிறவி வந்துவிடுகின்றது. இப்பிறப்பையும் இனிவரும் பிறப்பையும் அறுக்கவேண்டும். ஆசைகளை ஒழிக்கவேண்டும் ன்கிறது இந்து சமயம்.
பேரான்மாவும் ஆன்மாவே.  சிற்றான்மாவும் ஆன்மாவே. இவ்விரண்டுக்கும் வேறுபாடு யாதெனின் பேரான்மா தன்னையும் தான் கடந்துவந்த பல்வேறு நிலைகளையும் உணர்ந்து இலங்குகின்றது.  சிற்றான்மாவோ அவற்றிலெதையும் உணராமல் மூவாசை வாய்ப்பட்டுத் தவிக்கிறது.

எல்லா அழகும் தன்னில் உடையவர் கடவுள். ஆகையால் அவர் முருகன் எனப்படுகிறார்.  செம்மைநிலை மாறாதவர் அவர்.  ஆதலின் சிவம் எனப்படுகிறார். மிகவிரிந்த நிலையினர் அவர்: ஆதாலின் விண்ணு> விஷ்ணு எனப்படுகிறார், அம்மையும் அப்பனும் அவரே. ஆதலின் அம்மையப்பர் எனப்படுகிறார். இவையனைத்தும் ஒரே கடவுளின் பல்வேறு நிலைகளையும் தன்மைகளையும் குறிக்கின்றன.

இவற்றைப் பின்னர் தொடர்வோம். யாமெழுதிய சிவஞான போத உரையையும் படித்து மகிழலாம்.