வியாழன், 3 ஆகஸ்ட், 2017

“கலா”



இன்று “கலா”  என்ற சொல்லை அணுகுவோம்.

கலா என்பது  தமிழன்று என்று கருதியவர்கள் உண்டு.  இதற்குக் காரணம் இந்தச்  சொல் “தேசிய சேவை” செய்துகொண்டிருப்பதுதான். இச்சொல் பலராலும் விரும்பப்படும் சொல்லாய் இருப்பதும் பிற மொழிகளில் காணப்படுவதும்  நமக்குப் பெருமைக்குரியதாகும்.

கலா என்பதுபோன்ற (அதாவது எதுகைச் ) சொற்கள் பல உள்ளன.  எடுத்துக்காட்டாக  -  பலா, நிலா, உலா, தலா, விலா, துலா என்பவை.  இன்னும் பெயர்ச் சொற்கள் அல்லாதவைகளும் உள:  அலா,   இலா, செலா  முதலிய காண்க.   எனவே ஒலி முறையில் அது தமிழ் ஒலியுடைய சொல்லே.
கல்+தல் =  கற்றல்.  இங்கு கல் என்பதே பகுதி. இனிக் கல்+வி = கல்வி;  கல்+ ஐ = கலை;  கல்+பு = கற்பு;   கல் +பு + அன் + ஐ =  கற்பனை;  இவை போலவே கல் + ஆ = கலா  ஆனது. பல் சுளைகள் உள்ள பழம்  பல்+ ஆ = பலா ஆனது போலவும்  வானில் நிற்பதும் ஒளிவீசுவதாகவும் கருதப்பட்டது நில்+ஆ=  நிலா என்று ஆனது போலவும் ஆகும். 1

கலாதேவி, கலா நிலையம் முதலியவும் தமிழின்று கிளம்பிப் பரவிய சொற்களே.

தேவி > தீ  (தேய் );  நிலையம் > நில்.  எம் முன் இடுகைகள் காணவும்.


_____________________________
அடிக்குறிப்பு 

1  இது தமிழ்ச் சொல் என்பது பேராசிரியர் அனவ்ரத வினாயகம் பிள்ளை 
அவர்களால் சொல்லப்பட்டது. (1935)  இவர் கழகத் தமிழ்க்  கையகராதித் தொகுப்பாளர் .




புதன், 2 ஆகஸ்ட், 2017

"இலேசு"

"இலேசு"

இன்று "இலேசு" என்ற சொல்லைச் சிந்திப்போம்.

இது பெரும்பாலும் "லேசு" என்றே வழங்கிவருகிறது. இது "லேஸ்" என்ற ஆங்கிலச் சொல்லுடன் ஒலியொருமை உடையதாயினும்  இரண்டிற்கும் பொருள் வேறுபாடு உள்ளது.

பெரும்பாலோர் இச்சொல்லின் முன்னிற்கும் இகரம், லகர வருக்கத்தில்  சொல் தொடங்கலாகாது என்ற இலக்கணவிதி காரணமாகவே  இகரம் எழுதப்படுகிறது
என்று எண்ணுவர்.

இதனை இல்+ஏ + சு என்று பிரிக்கவேண்டும்.  இல் = இல்லை என்பது.
ஏ = ஏற்றம், உயர்ச்சி என்று பொருள்படுவது.  சு என்பது ஓர் விகுதி.  மனசு, புதுசு, காசு, ஆசு  என்பனபோலும் பலசொற்களில் இது வரும்.  கா > காசு
என்பதில் காத்தலுக்குரியது என்னும் பொருளில் சொல் அமைகிறது.  ஆதல் என்பதினின்று வருவது ஆசு (பற்றுக்கோடு ). மனசு, புதுசு என்பவற்றில்
சு விகுதியாகவோ அல்லது து என்பதன் திரிபாகவோ கருதப்படலாம்.
எனவே, இலேசு என்பதில் சு என்பது விகுதியாகும்.

கனம் என்பது பளு என்ற பொருளிலும், மதிப்பு என்ற பொருளிலும் வருவதுபோலவே, ஏ = உயர்ச்சி என்பது மதிப்பு என்றும் பளு என்றும்
பொருள்தரும்.  அதிக மண் உள்ள மேடுகள்  ஏ = ஏற்றம், ஏற்றமான இடங்கள்
என்று அறியப்படும். ஏற்றம் தரும்பொருள் உள்ளீடு , பளுவுடையது என்பது
உணரப்படும். மே (மேல்) என்னும் இடப்பெயரும் மேடு என்று ஏற்றமான இடத்தைக் குறிக்கச் சொல்லாய் அமைதல் அறிக. கனப்பொருள் அடைவு
இன்றி ஏற்றம், மேடு என்பன இரா.

எனவே, இல்+ஏ+சு என்பது, கனம் இல்லாதது, ஏற்றம் இல்லாதது என்று
பொருள்படுகிறது. அவரை இலேசாக நினைக்கக்கூடாது எனும்போது, கனம் அல்லது மதிப்பு என்பது சுட்டப்பெறுகிறது.

இரவில் விழித்தெழுந்தால் கவலையே!.....

இரவில் விழித்தெழுந்தால் ‍== அந்த‌
இனிமைப் புறாக்களைக் காணாக் கவலையே!
உறவென் றிலையெனினும் ==  அவை
குமுறிப் பறப்பதும் உண்பதும் ஈர்த்தெனை
வரவழை காலையினை  == என்னும்;
வல்லமை இன்மையின் வாளா திருப்பனே!
இரவும் விலகுதற்கு === இனி
இருத்தல்  கிடத்தலே  அன்றியென் செய்வது?

இருந்திடும் போதினிலோர் == தமிழ்
இன்கவி என்பதே என் துணை ஆனது!
வருந்துதல் நீக்கியதே ==  நல்ல‌
வண்ணக் கவின் தனில் எண்ணம் பதிந்தன.
அருந்துகி றேன் தமிழ்த்தேன்  === அது
அந்தி இரவினிக் காலை பகலென‌ப்
பொருந்துமெந் நேரத்திலும் == அந்தப்
புறாக்கள் இவண்சேர் விடியலும் வந்திடும்.