வெள்ளி, 30 ஜூன், 2017

தோய்த்திரம் > தோத்திரம்

தோத்திரம் செய்வோம் நம்  ஆண்டவருக்கு!

இனித் தோத்திரம் என்ற சொல்லின் வந்தவழி அறிவோம்.

மிகவும் மதித்து வணங்குதல்/ தோத்திரம் ஆகும்.

தோய்தல் - மூழ்கிவிட்டதுபோன்ற ஓர் ஈடுபாடு.

திரம் என்பது விகுதி. இது திறம் என்பதிலிருந்து பெறப்பட்டது.

தோய்தல் -   ஆழ்ந்து ஈடுபடுதல்.

தோய்+ திரம் = தோய்த்திரம் > தோத்திரம்.

யகர ஒற்று மறைந்தது பெருவாரிச் சொற்களில் என்பதறிக.

வியாழன், 29 ஜூன், 2017

தோது என்ற சொல்லை ...........

இன்று தோது என்ற சொல்லை அணுகுவோம்.

" இன்றைக்கு எப்படி?அவரைப் பார்த்துப் பேச முடியுமா? அவருக்கு எப்படித் தோது என்று தெரியவில்லையே!"

இப்படிப்  பேசுவதைக் கேட்டிருக்கலாம்.

தோது எனற்பாலது ஒரு தொடர்புக்கான வசதியைக் குறிக்கிறது.  தோதில்லை என்றால், அத் தொடர்பில்
ஈடுபடத் தருணமில்லை என்று பொருள்படும்.

தோது என்பது தோய் என்ற  வினையுடன், து என்னும் விகுதி சேர்ந்தது.  விகுதி சேர. யகர ஒற்று மறைகிறது.

தோய் >  தோய்து >  தோது.

இது பெருவரவினது அன்றோ?

இப்போது யகர ஒற்று மறைந்த சில சொற்களை நினைவு
கூர்வோம்.

தோய்+சை =  தோய்சை >  தோசை.
வேய்+ து + அம் = வேய்தம் > வேதம்.
உய் + (த்) + தி =  உய்த்தி >  உத்தி.
வாய்+ (த்) + தி = வாய்த்தி>  வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்வோன்).
சாய்+ (த்) +  இயம் = சாய்த்தியம்> சாத்தியம்.
பெய் + தி =  பெய்தி> பேதி.
(பெய்தல் =உடலினின்று கழித்தல். ஒ  நோ :   தூறுதல் (மலையாளம்) :மலம் கழித்தல்.)
வாய் + (ந்)+ தி =  வாய்ந்தி > வாந்தி.
பொய்+மெய் = பொய்ம்மெய் > பொம்மை.

எல்லாம் பட்டியலிட நேரமில்லை. படிக்க உங்களுக்கும்
நேரம் கிட்டுவது கடினம்.

புதன், 28 ஜூன், 2017

ரீதி.

இன்று ரீதி என்ற சொல்லைப் பார்க்கலாம்.

ரீதி என்ற சொல் உள்ள நிலைமை என்று பொருள்படும்.  "குடியுரிமை பெற்றவர்தாம் சங்கத்துக்குத் தலைவர் ஆகலாமென்ற  ரீதியில் பேசுவது தவறு. காரணம் நம்
சட்ட திட்டங்களில் அப்படி இல்லை"  என்ற வாக்கியத்தில்
ரீதி என்பது என்ன பொருளில் பயன்பாடு கண்டிருக்கிறது
என்று கவனியுங்கள்.

இருக்கும் நிலை என்பதே ரீதி ஆகும்.

இது இருதி என்ற சொல்லின் திரிபு.  இறுதி என்பது வேறு.

இருதி என்பது தன் தலையை இழந்ததுடன், ரு என்பது
ரீ என்று திரிந்துவிட்டது.

இருதி > ருதி > ரூதி > ரீதி.

இரு என்பது மலையாளத்தில் இரி என்று திரியும். ஆகவே
இரு > இரி > ரீதி எனினும் பொருத்தமே.  இங்கு தி என்பது விகுதி.

இரு + ஈ + தி =  இரீதி   எனின்,  இருப்பனவாகிய தன்மைகள் ஈயும் (கொடுக்கும்)  போக்கு என்று வரும். இதுவும் ஏற்புடைத்தே.  இது ஒரு பல்பிறப்பி ஆகும்.

இதைமேலும் விளக்கலாம்  எனினும் இதுவே போதுமானது.