திங்கள், 6 ஜூன், 2016

குறுந்தொகை: நாட்டு / விலங்குகள் வருணனை.

புரிமட மரை ஆன் கரு நரை நல் ஏறு
தீம்புளி நெல்லி மாந்தி அயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்து
ஓங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக‌
வடபுல வாடைக் கழி மழை
தென்புலம் படரும் தண்பனி நாளே 


இது மதுரைக் கண்டரதத்தனார் பாடிய குறுந்தொகை 317‍வது இனிய பாடல். இதில் புலவர் தலைவனின் நாட்டு வளக் காட்சிகளைச் 
சுவை  சொட்ட வரிகளாக்கியுள்ளார். ,

தலைவனின் நாடு உயர்ந்த மலையை உடையது, அங்கே பசுமையான ஊற்றுநீர் கிடைத்தது, அதைப் பருகி உடல்நலம் மிக்கவனாய் அவனிருந்தான் என்பது தோன்ற பைஞ்சுனை பருகு  நாட்டவன் என்கிறார், நாடன் என்பது குறிஞ்சி நிலத் தலைவனைக் குறிக்கும். குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமும் ஆகும்.

குறிச்சி என்பது அங்குள்ள ஊர். உதாரணம், கடுக்காக்குறிச்சி. ஓங்குமலை என்று புலவர் பாடுதல் காண்க‌.


மான் மரை என்று சொல்லப்படும் இனத்துள் இங்கு மரை பற்றிப் பாடலில் வருகிறது. மரை ஆன் என்றால் பெண்மரை. இது மிகுந்த‌
மடம் உடையது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று கூறுவர் இவற்றுள் சொல்லப்படும் மடம்,      புரிமடம் என்றது ஆண்மரை மிக‌
விரும்பும் பெண்மரையின் மடம். அதாவது ஆண்மரை அறிந்த எல்லாம் பெண்மரை அறிந்திருப்பதில்லை. . அது பெண் என்பதனால்;
இதன்  (இவ்வறியாமையினால்  அது  ஆண் மரையிடத்து நடந்துகொள்ளும் விதங்களின் )  தொகையே மடம் எனப்படுகிறது. இந்த மடப்பத்தை ஆண்மரை விரும்புகிறது.


இந்த ஆண் மரையானது, கரியது: அதாவது கரு நிறத்தது; நரை என்றதனால் பெண்மரையை  நோக்கின் உருவிற் பெரியது. நல்ல குணங்கள் உடையது. எனவே கரு நரை நல் ஏறு என்றார் புலவர்.' நரை என்பது பெருமையாகும்.

(தொடரும்) .






ஞாயிறு, 5 ஜூன், 2016

கண்டனம்

மென்மையாகப்  பேசுதல்,   கடுமையாகப் பேசுதல்,  அன்பாகப் பேசுதல், தெளிவாகப் பேசுதல் என்று பல வகை  சொல்வர்.

இவற்றுள்  கடுமைப் பேச்சினை இப்போது காண்போம்.


கோப்பையைத் தட்டிவிட்டான் என்று தந்தை மகனைக் கடிந்துகொண்டார்  என்பது ஒரு வாக்கியம்.

கடிதல் (, கடிந்துகொள்ளுதல்)  என்பதில்   கடு  என்பதே அடிச்சொல்.

கடு >   கடி. >   கடிதல்.


கடிதல் என்ற சொல்லிலிருந்து கண்டித்தல் என்ற சொல் தோன்றியது.


கடி என்ற சொல்லுக்கு  இடையில் ஒரு  ணகர  ஒற்று .இட்டால் :


கடி  >    கண்டி .   (ண்   தோன்றல் .)

பின்பு:


கண்டி +  அன் +  அம்  =  கண்டனம் .     (அன் - இடைநிலை  ) அம்   விகுதி  பெற்றது

கண்டனை என்ற வடிவம் காணின்  அஃது இறுதியில்  ஐ விகுதி பெற்றது ஆகும்.  வரின் காண்க.


சனி, 4 ஜூன், 2016

முகம்மதலி மறைவு Demise Champion Ali

உலகே வியந்ததோர் ஒப்புமைக்கு நின்றோன்
பிறகே அறிந்தோம் பிழையாமோ வென்றோன்
கலையாகக் குத்து விளையாட்டைக் கொண்டோன்
நிலையாக மும்முறை வல்லோனாய்ப் பட்டம்
குலையாமல் ஞாலம் குலவிடவே கண்டோன்
தமதினம் உய்யத் தகுவழியில் வெற்றிக்கு
அமையாது முன்னின்ற ஆண்மையோ காண்பரிதே
தன்மதம் மாறியே  முன்னின் றுணர்த்தியவை
என்னென்று கேட்க இயம்பின பொன்மொழிகள்
இவ்வுலகோர் இன்னும் இருப்பார் மறவாரே!
மேடை அதிர்ந்தபின் நாடும்மற்  றேடுகளும்
கூட  அதிர்ந்தன   கூற்றுவனால்  நீத்தார்
அலிப்பெயர் ஆண்மைக்  களிப்போம்  இரங்கல்
ஒலிக்கத் தொழுகைக் குரல்.

அரும்பொருள் 

ஒப்புமைக்கு  -  வெள்ளையரோடு கறுப்பர் ஒத்தவர் என்பதற்கு,
பிறகே அறிந்தோம் -   அதாவது யாம் இப்போது  அறிந்தவை.
அமையாது  -   அடங்கிவிடாமல் 
காண்பரிதே -   காண அரிய குணங்கள். 
இன்னும் இருப்போர்  இவ்வுலகோர் -    இன்னும் இருக்கும் நம் போலும் மக்கள்.    (இருப்போர் -  இருக்கும்;(  முற்றெச்சம் .)
மேடை -  குத்துச் சண்டை மேடை. 
கூற்றுவனால்  நீத்தார் -  மரணம் அடைந்தார்,