செவ்வாய், 5 மே, 2015

உட்சிதை வுற்ற

உட்சிதை வுற்றவூர் மக்கள் அவர்கள்பால்
கட்சி அரசியலும்  உட்புகுமேல்  ---- மட்செருகி 
 மாய்ந்த நிலைக்கதுவே ஒப்பாகும் மற்றன்னார்
வாழ்ந்து நிலைப்படுவ தில். 

ஞாயிறு, 3 மே, 2015

war crimes investigation

சில நாடுகள் சொல்வது:

போர்க்குற்றம் புரிந்தோரே வாருங்கள் வழக்குக்கு;
நேர்மாறாய் நடந்தீரே  தாருங்கள் ஒத்துழைப்பு;
கூர்முற்றும் மழுங்காத தீர்மானப் படிமாலை
நார்மட்டும் தெரியாத நல்லமுறை வழங்கிடுவோம். 

எத்தனையே இலக்கமென்று எம்மிடமோ கணக்குண்டு;
செத்தவர்கள் உறுப்பறைகள் மொத்தமிதில்  பிணக்கில்லை;
சொத்துகளும் அழிந்தனவே குத்துமதிப் பதற்குண்டே!
மத்துகடை தலைப்போலே குடைதலில்லை முறையுண்டு.

நிலைமை  கூறல்:

அணிகூர்ந்த அரசநிலைப் பணிநீங்கிப் படுகைவீழ் 
தனிமாந்தன் இராசபக்சே குனிவுற்றுக் கூண்டேறி
இனிவாழா  ஒறுப்பினையே இளிபெறவே பெற்றாலும்
நனிவாழத் தமிழர்மறு வாழ்வமைதல் உடன் தேவை/

நாடிழந்த காரணத்தால் நலிவடைந்த தமிழர்பலர்;
வீடிழந்த  அளியருக்கு வீடுடனே வேண்டுமன்றோ
கூடிழந்த  பறவைகூடக்   கொல்லும் எமன் தனைநீங்கி
நாடிநின்ற தலத்திலகம் பீடுபெற  அமைத்தியலும்.

நெடுந்துயரை நீணிலத்தில் படுந்தனையும் விடிவுண்டோ?
கெடுந்தனையும் கெடுகவென இருந்தபுவி ,மன்பதையோர்
தொடர்விழிநீர் துடைத்திடவே எண்ணுதலும் நல்லகாலம்
படரிடும்பை முற்றகலப்  பரமனருள் வெல்கநாளும

preview and edit not available

error message
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismisss


நல்ல முறை -  நல்ல நீதி.

கூர் முற்றும் மழுங்காத தீர்மானம் :  இனப் படுகொலைக்கு முழு நீதி கிட்டா விட்டாலும் ஏதோ  சிறிது கேட்பதுபோன்ற தீர்மானம்;   (அறவே கேட்கமாட்டோம்  என்று தள்ளிவிடாமல் ).
எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடாமல் (  உதிர்ந்துபோனால்  நார் மட்டும் மிச்சம்; அப்படி இன்றி நார் தெரியாமல்  சில பூக்களாவது மாலையில் உள்ளன போலும் நீதி  )  இது   " மாலை  நார்மட்டும் தெரியாத நல்லமுறை"  எனப்பட்டது.
இலக்கம் -  இலட்சம்  என்ற எண்ணிக்கை . 
:உறுப்பறைகள்  -  கால் கை இழந்தோர் . 
குத்து மதிப்பு :ஏறத் தாழ என்று சொல்லும்படியான  மதிப்பீடு.
முறையுண்டு  this is a reference to proper judicial procedure
படுகை = பள்ளம் 
குனிவு:   அவமானம்.
கூண்டு:  குற்றவாளிக் கூண்டு.
இனி வாழா  ஒறுப்பு  -  மரண  தண்டனை.
இளி  -  தகுதிக்குக்  கேடு. 
அளியர் -   இரக்கத்துக்கு  உரியோர்.
தலத்திலகம்  -   தலத்தில் வீடு ;   தலம் -  இடம்.
பீடு -  பெருமை.
புவி மன்பதை -  international community.
படர்  இடும்பை  -   விரிவடையும் கெடுபாடும் துயரும்     










வெள்ளி, 1 மே, 2015

Devaneyap Pavanar and word: Aryan.

"ஆரியன்"  --- சொல்லும் தேவ நேயப்பாவாணரும்,

பிறரால்  செய்து முடிக்கவியலாத,  மற்றும் இயல்பானவற்றுள்  அடங்காமல் அவற்றின் மேம்பட்டவற்றைச்  செய்துமுடிப்பவரே  பெரியவராவார்.  இச் செயல்களை வள்ளுவனார் " செயற்கு அரியவை: என்று குறளிற் குறிக்கின்றார்.

அரு என்ற அடிச்சொல்லினின்று தோன்றியதே  அரிய என்ற எச்சச்சொல்.  அரு+ இய =  அரிய..

அரு+ து =  அரிது;  உண்மையில் இது அரு+(இ)  து என்பதே.
அர் + உ + இ + து =  (இதில் உகரம் கெட்டு)  அர் + இ + து என்றாகி, 
அரிது ஆனது.  இதிலுள்ள இது என்பதை அஃறிணைச் சுட்டாகக் கொள்ளமல் இ என்பது தனியாகத் தோன்றியது என்று தமிழ்ப்புலவர் விளக்கினாலும்,  நீங்கள் கேட்டின்புறலாம். அதில் ஒன்றுமில்லை.

அரு என்பது வருமொழி முதலில் உயிர் வரின், ஆர் என்று  திரியும்.

அரு+ உயிர் =  ஆருயிர்.

புணர்ச்சியில் அரு என்பது ஆர் என்று திரியும். இது உங்கட்குத் தெரியும்.

ஆனால் புணர்ச்சியில் இல்லாமல் தானேயும் திரியும் என்பதை தேவ நேயப்பாவாணர் எடுத்துக்காட்டியுள்ளார்.


"ஆரி யாகமம்  சாந்தத் தளித்தபின்"   என்று சீவக சிந்தாமணியில் வருகின்றது. (சீவக. 129).

இங்கு அரு என்பது ஆரி என்று திரிந்தது.  அரு=  மேன்மை;  ஆரி = மேன்மை, அரியது   ஆரி -- அரு என்பதிலிருந்து அமைந்த தனிச் சொல் எனினுமாம். .

பத்துப்பாட்டுகளில் ஒன்றாகிய  மலைபடு கடாத்திலும்,  அரு எனற்பாலது  ஆரி யென்றாகும்.

ஆரிப் படுகர்  (  மலைப.. 161) 

அரியராகிய படுகர் என்பது.  

படுகர்  என்பார் ஓர் உழவுத்    தொழில் தொடர்புடைய  வகுப்பினர்  என்று 
தெரிகிறது.   படுகர் என்பது விளை நிலங்களையும் குறிக்கும்.  படுகை = பள்ளம்  என்பதும் ஆகும். 

இந்த ஆரி என்ற சொல்லே அன் என்ற ஈறு பெற்று ஆரியன் என்று வந்ததென்கிறார்     பாவாணர்..

ஏர்  என்ற சொல் மேலை மொழிகளில் ஆரென்றும் திரிந்துள்ளது.  எடுத்துக்காட்டு:  English: arable,  vide  its Indo European forms.

Gk: aristos.  meaning "noble".

ஏர் வேறு;   அரு >  ஆர்  வேறு  என்பர்.

அறி என்பதற்கும் ஆரி  என்பதற்கும் உள்ள தொடர்பினை ஆய்ந்து  பாருங்கள்.
--------------------------------------------------------------

Footnote:


வடமொழி வரலாறு:  1    பக் . 24  தேவ நே .  (இளவழகன் பதிப்பு).


பார்வை இட்ட நாள்:  7.12.2015