வியாழன், 2 ஏப்ரல், 2015

பரிதியும் நிலவும்


பரிதிலீ  குவான்யூவும் மறைந்த போதும்
பாரிலொளி ஏற்றொளிரும் நிலவாய் நின்றார்
அரிதினீ டுலகுபெறு செல்வ மான
அவர்பெற்ற நன்மகனார் என்றால் உண்மை
சுருதியோ டிழைகின்ற இலயம் போலும்
சூழ்தருவ தனைத்தும்நன் கிணக்கிச் செல்வார்
கருதியோர் சிங்கையுல கின்முன் செல்லும்
காண்பரொரு நாடிதனில் ஐய முண்டோ.

அரும்பொருள்:


பாரில் ஒளி  ஏற்று ஒளிரும் :  அச் சூரிஅனின் ஒளியைப் பெற்றதனால்  குளிர்ந்த  ஒளி வீசுகின்ற;

நிலவாய் நின்றார் : அரசியலில் ஒரு மதியாக நிலை கொண்டார்.

அரிதின் ஈடு உலகு பெறு:  உலகம் அரிதாக  ஈடாக ப் பெறுதலை உடைய

கருதியோர் :  சிந்தனை செய்வோர்

சிங்கை உலகின்முன் செல்லும் நாடு; கருதியோர் இது காண்பர்; இதில்  ஐயம் உண்டோ என்றபடி மாற்றுக

புதன், 1 ஏப்ரல், 2015

ராஜ ராஜன் படை -சதுப்பு நிலத்தீவான சிங்கப்பூருக்கு

(Numbers refer to footnote numbering)

சுமத்திராவில் பாலிம்பாங்கில்  வெற்றியை  ஈட்டியபின்  இராஜராஜனின்  படையணி ஒன்று சதுப்பு நிலத்தீவான  சிங்கப்பூருக்கு வந்து கரை தொட்டது.  அந்த அணியின் தலைவன்  நீல உத்தம சோழன்.   இவன் ஓர்  அழகிய மலாய்ப் பெண்ணைக் கட்டிக்கொண்டு இங்கேயே  தங்கிவிட்டான் என்கிறார்கள். 1  மலாய் வரலாற்றில் Sang Nila Utama   'பணிதற்குரியவர்".  ( சங்க் )  2

சதுப்பு நிலங்களை மீட்கும்பணி  கிழக்கிந்தியக் குழும்பின் (கம்பெனியின்)  காலத்திலிருந்து சிங்கையில்  நடைபெற்றுக்கொண்டு வந்திருக்கிறது. 1950-வாக்கில்  கொலம் ஆயர் பகுதியில் ஒரு பேரடுப்பு  (Incinerator)  இருந்தது.  நகரத்தில் எடுக்கப்படும்  குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டு அவற்றின்  சாம்பலை அடுத்திருந்த  சதுப்பு நிலங்களில்  கொட்டிக்கொண்டிருந்தார்கள்.  இந்த அடுப்பு தொடர்பான வேலைகளில்  ஈடுபட்டோர் பலர் அருகிலுள்ள சிற்றுரில்  (kampong) தங்கள் குடும்பங்களுடன்  வாழ்ந்தனர்.  கோழி, ஆடு, மாடு முதலியவற்றையும் வளர்த்து வந்தனர்.  நாளடைவில் இந்த சதுப்பு நிலம் மீட்கப்பட்டது.

நில  மீட்பு நல்லதுதான்.  அங்கு நண்டு மீன் பிடித்து  குழம்பு வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த பல குடும்பங்கள் அருகில் இருந்த மெக்பர்ஸன்  சந்தையில்  இவற்றைக்  காசு கொடுத்து வாங்கவேண்டிய தாயிற்று.  ஆண்டு:  1952.

வளர்ச்சிக்கும் ஒரு விலை கொடுக்கவேண்டுமே !

தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படிக்க மெய்யப்ப செட்டியார் சாலையில் உள்ள பள்ளிக்குப் போகவேண்டிய திருந்தது.  அந்தப்பகுதிக்குத் தமிழர் :  மண்ணுமலை என்றனர். மலய் மொழியில் "போத்தோங்  பாசிர்." 3  அங்கு ஓடும் ஆற்றுக்குச் செங்கமாரி ஆறு என்றனர். ஆங்கிலத்தில் காலாங் ரிவர். (Not a translation of the term "SengkamAri"). மண்ணுமலைப் பகுதியில் எருமைகள் குளிக்க நல்ல வசதிகள் இருந்தன.

அப்போதும் அப்பர் சிராங்கூன்  சாலை  வண்டிகள் அதிகம்  ஓடும்  சாலைதான்.
இப்போது இங்கு மின் தொடர்வண்டி  நிலையம்  உள்ளது.
(அறிந்தோர்வாய்க் கேட்டு எழுதப்பட்டது.)


------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:

1.  இதை ஒரு சீனச் செய்தியாளர்  தம் ஆங்கிலக் கட்டுரையில்  குறிப்பிட்டு
எழுதியது  நினைவிற்கு வரும்.  (சிங்கப்பூர்  வானவூர்தி 1ஒன்று பாலிம்பாங்க்
(சுமத்திராவில்) விழுந்து நொறுங்கியபோது.  பாலிம்பாங்குக்கும்  சிங்க்கப்பூருக்கும்  தொடர்பு  நீங்கவில்லை  என்பதாக  எழுதியிருந்தார். )

2.  சங்க்  :  சம்ஸ்கிருதம் - சாந்த்   saint.  "Sant Fateh Singh"  :  this usage of the word can be a modern example.
There was a Malay Secondary School in the name of  Sang Nila Utama.

3  மண்ணுமலை .     Potong -   வெட்டு,   பாசிர் =  மணல்.   மண்ணுமலை என்பது
மக்கள் மொழிபெயர்ப்பு. மலாய்த்  தொடருக்கு  "மணல்வெட்டி  மலை" என்று பொருள்.  இங்கு அமைந்த  புது நகரில்தான்  "சிவ துர்க்கா  ஆலயம் "  உள்ளது,
4 செங்கமாரி  ஆறு  இப்போது தூய்மைப் படுத்தப்பட்டு  அழகு பெற்றுள்ளது.  எருமைகள்  போய் வெகு  காலம் சென்றுவிட்டது.
ஆ ற்றில் மீன் உண்டு என்கிறார்கள்.

Recommended reading for old history of Malaysia and Singapore

மலாயா   தேச சரித்திரக் காட்சிகள்:.   பிரமச்சாரி  கைலாசம் ,  இராமகிருஷ்ண  மடம்  வெளியீடு.


vellaza



வெள்ளாளர் என்ற சொல்  -ளர்  என்று முடிகிறதே யன்றி,  -ழர்  என்று முடியுமாறு இப்போது எங்கேயும் எழுதப்படுவதில்லை.

சோழர் என்பது உண்மையில் சோளர்  என்பதிலிருந்து  வந்ததென்று ஆய்வாளர் சிலர் கூறியதுண்டு.  அதிகமான சோளம் விளைந்த நாட்டுக்கு உரியோர்  என்று பொருள்தரும் சோளர்  என்பதே சோழர் என்று மருவிற்று  என்றனர்.   ள  >  ழ  ஆகும் என்றனர்.

12-ம் நூற்றாண்டுக்  சோழர்  கல்வெட்டு ஒன்று "வெள்ளாளர் " என்பதை  வெள்ளாழர்  என்கிறது. இவ்வடிவம் நூல்களில் இல்லையென்று தெரிகிறது.

எவ்வாறாயினும்  ள  > ழ  திரிபினை  மனத்தில் இருத்துங்கள்.

பேச்சு வழக்கில்  ழ என்பது ள  ஆவது யாண்டும் கேட்கப்படுவது ஆகும்.