திங்கள், 26 ஜனவரி, 2009

உறங்கும் உலகினர்

மையக் கிழக்கில் நடக்கும்சண்டை -- அது
மனத்தை உருக்கும் உலகெங்குமே! -- ஆயின்
நையத் தமிழரைப் புடைத்துக்கொல்வார்--கண்டு
நாவினை யேனும் அசைத்ததுண்டோ? -- இன்று
செய்யத் தகுந்தவை அனைத்தும்செய்த -- தமிழ்ச்
சீர்பெறும் ஞாலத் தமிழெரெல்லாம்,-- சென்று
பைய உலகினர் கண்களுக்குள் --- தோன்றி
பாய்ந்து விழித்தெழச் செய்திடாரோ?

வெள்ளி, 23 ஜனவரி, 2009

நெறிதவறிய வேடன்

தமிழன் எனச்சொன்னால் பாவமோ? -- இந்தத்
தரையில் குடிவாழ்தல் நோகுமோ -- நீரில்
அமிழ்ந்தும் அவன்சாக வேணுமோ -- தீயில்
அழிந்தால் புவிக்காவல் ஆறுமோ?

குழந்தை முதியோரும் பெண்களும் -- ஒரு
குற்றம் அறியாநோ யாளியும் -- உயிர்
இழந்தும் உடல்கள்புண் ஆகியும் ---போர்
இனியெத் தனைநாட்கள் போகுமோ?

இரத்த வெறிகொண்ட மாந்தர்கள் -- இங்கு
இயற்றும் சமர்நிற்க வேண்டுமாய் -- ஓர்
உரத்த குரல்தந்துஇஞ் ஞாலமும் ---அமைதி
ஓங்கச் செயற்பால காலமே!

புலிக்கே வலைவீசும் வேட்டுவன் -- வந்த
பொன்மான் முயல்தம்மைச் சாட்டுதல்,--- ஒரு
நெறிக்குள் அவனில்லை காட்டுமே --- உலகு
நில்லா தவன்மன்றில் ஏற்றுவீர்!

புதன், 14 ஜனவரி, 2009

எண்கணிதம் தொடர்ச்சி.

நானுமெண் கணிதம் பார்த்து
நாட்பலன் உரைப்பேன் நாளை
மானிடர்க் கெல்லாம் துன்பம்
மாறிடும் மகிழ்வு தோன்றும்!
ஏனது நடக்கும் என்றீர்?
இருபதும் ஒன்றும் கூட்டி.
மேனிலை ஆண்டும் சேர்க்க
மீளுமெண் ஐந்தாம் காண்க!

இரண்டா யிரத்தின் ஒன்பான்
இனிதாகும் ஆண்டில் நாளில்
இருபத்தில் பதவி ஏற்பார்
இரும்பெயர் ஓபா மாவே!
ஒருபத்தில் பாதி என்றால்
உயர்வெலாம் கூடும் என்பேன்!
உருவத்தில் உயர்ந்தாற் போல
ஓங்கிடும் அன்னார் ஆட்சி!!

என்கணக்கு இதுவே ஆகும்.
இனிவரும் காலம் காண்போம்....
பொங்கலுண்(ட) பின்னே வந்து
புதுக்கணக் கிங்கே சொன்னால்
பங்கமாய்ப் ் போகா தன்றோ?
பைந்தமிழ் மக்காள்! எங்கும்
பொங்குக பொங்கல் இன்பம்.
புதுப்பொலி வெங்கும் தங்கும்!