வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

சாய்தல் என்பது பலவகைகளில் செயலாக்கம் படத்தக்கது  என்பதைச் சிந்தித்து உணரலாம்.  இவ் வகைகளையெல்லாம் தொகுத்து நால்வகையில் சாய்தல் கூடுமென்று கூறின் அது  சரியாகும். முன்னாகச் சாய்தல், பின்பக்கம் சாய்தல், பக்கவாட்டில் வலமாகச் சாய்தல்;  அவ்வாறே இடமாகச் சாய்தல் என்று நான்`கு அவையாம்.

சாம் என்றொரு சொல் முற்காலத்தில் வழங்கியது என்று அறிஞர் கூறியுள்ளனர். இச்சொல் பின்னர் இகர விகுதிபெற்று சாமி என்று நீண்டது.
விகுதி என்பதே  சொல்லின் மிகுதிதான்.   விஞ்சுதல் - மிஞ்சுதல் என்ற சொல் போலவே மிகுதி > விகுதி என்பதும் ஆம்.

சாமியைப் பண்டையர் முன்பக்கமாகச் சாய்ந்து தரையில் படிந்தவாறு கும்பிட்டனர்.  கும்பு இடுதல் என்பது கைகள் குவித்தலைக் குறிப்பது.  இச்சொல் கூம்பு என்பதனோடு தொடர்புடைய சொல்.   கும்பு > கூம்பு.  கூம்பு என்பது வல்லெழுத்துப் பெற்றுக் கூப்பு என்றாகும்.  கூப்பு > கூப்புதல்.

சாய்ந்து கும்பிடப் படுவது  சாய் > சாய்ம்  > சாம்  ஆனது.   சாம் என்ற சொல் பின் இகர விகுதி பெற்று சாமி ஆனது.   சாய் > சாய்ங்காலம் என்பது போன்றதே.  உகரத்தை உள்ளிடும்போது  சாயுங்காலம் என விரியும்.  சாயும் என்பது எச்சவினையின்பாற் படும்.  சாமி என்பதில் வரும் ஈற்று இகரத்தை வெறும் விகுதியாக விட்டுவிடாமல் இங்கு என்று சுட்டுப்பொருள் காண்போமாயின் சாயும் இங்கே என்று அது விரிதல் காணலாம்.   சாமி இருக்குமிடத்தில் சாய்வது பண்டை நாட்களிலிருந்தே வணங்குவதன் குறிப்பானது.

சாய்தல்  வினைச்சொல்.
சாயும் என்பது இடைக்குறைந்து  சாம்  ஆனது  எனினுமாம்.

சாய் > சாய்ம் > சாம்  எனினும்  அதுவேதான்.

சாயும் இ  >  சாம்  இ  >  சாமி என்பதும்  அமைப்பை விளக்கப் போதுமானது.

இன்னொரு சொல்லை ஒப்பிடுவோம்.

காண் > காண்பி என்பது பிறவினை வடிவம்.

இது பேச்சில் இப்படி வருவதில்லை.  காண் > காண்மி > காமி என்று ஒலிக்கப்படுவது கேட்டிருப்பீர்.

பாம்பு என்ற சொல்லிலும் பாய் > பாய்ம்பு > பாம்பு என்றாவதைக் காண்க.
வேகமாக முன்  வந்து  தீண்டுதல் அல்லது  விரைந்து நகர்தல் குறிக்கவே பாய்தல் என்ற சொல் இங்கு வருகிறது.

செத்துப்போனவன் சாய்ந்துவிடுகிறான்.  சாய் என்பதும் சா என்பதும் தொடர்புடைய சொற்கள்.

சா >  சாய் > சாய்தல்.
அல்லது   சாய் > சா > சாதல்.  இவற்றில் எப்படிப் பார்த்தாலும் தொடர்பு தெரிகிறது.

இதிலிருந்து  சா என்ற பழந்தமிழ்ச் சொல்  சாய்தலையும் சாதலையும் ஒருங்கு குறித்த பல்பொருளொரு சொல் என்பது புலப்படும்.

ஆக,   சாமி என்பதன் அடைவுப் பொருள் கும்பிடப் படுவது என்பதுதான் என்பதை உணரலாம்.  வணக்கம் என்ற சொல்  வளைவு குறித்தது முன்.
இன்று இப்பொருள் மறைவாக இருப்பதுபோலவே  சாமி என்பதும் சாய்தல் கருத்தை மறைவாகக் கொண்டுள்ளது.

 ஸ்வாமின் என்னும் சமஸ்கிருதச் சொல் வேறு.  இச்சொல் பல பொருள் உடைய சொல்.

வியாழன், 31 ஜனவரி, 2019

மாளப் பல வழிகள்.

மனிதனையும் நீபடைத்தாய் மாளப் பலவே
வழிகளையும் கூடப் படைத்தாய் ---- புனிதரா
அன்றிப்புன் மையோரா என்றிவற்றை நோக்கிப்பின்
கொன்றிடுவாய் அல்லையே  நீ,


 

புதன், 30 ஜனவரி, 2019

தமிழ் நேசன் நாளிதழ் நிறுத்தம் மலேசியாவில்

தமிழ் நேசன் என்பது மலேசியாவில் ( முன்னர் மலாயா என்று அறியப்பட்ட பகுதியில் )  வெளிவந்து கொண்டிருந்த நாளிதழ்.  பிப்ரவரி ஒன்று முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக செய்தி வந்துள்ளது.

தமிழ்த் தொண்டு புரிந்துவந்த நேசன் இதழ் நிறுத்தப்படுவது கவலைக்குரியதுதான். நேசனால் எழுத்தாளர் நிலைக்குச் சென்றவர்களும் கவிஞர் தகுதி பெற்றவர்களும் செய்திகள் அறிந்து இன்புற்றவர்களும் பலர் ஆவர். சட்டத்துறையில் பட்டம்பெற்ற நம் நண்பர் திரு. அ. மாசிலாமணி அவர்கள் கூட ஒரு கட்டுரையை அதில் வெளியிட்டிருந்தார்.  அது ஒரு குமுக அமைப்பைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை.  அதைத் தொடர்ந்து  பல ஆய்வுகள் வெளிவந்தன. தமிழ் நேசனின் இவ்வாறு நேயம் பெற்ற அறிவாளிகள் பலர் ஆவர்.

இப்போது மலேசியாவில் பல தமிழ்ப் பத்திரிகைகள் இருப்பதாகத் தெரிகிறது. இப்போது பத்திரிகைகள் நாளிதழ்கள் முதலியவை அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை.  எல்லாச் செய்திகளும் கணினி மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் வந்துவிடுகின்றன.  உலகம் மாறிவிட்டது.

சிங்கப்பூரில் " தி இன்டிபென்டன்ட்"  முதலிய கணினி வழி இதழ்கள் இப்போது சக்கை போடு போடுகின்றன.  நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்   இவ் விதழ்களைப் ப் படிக்கமுடியும்.  தாளிதழ்கள் இவ்வாறு பயன் காணக் கூடியவை அல்ல. விற்பனை வீழ்ச்சிக்கு இதுவும் காரணங்களில் ஒன்றாகலாம்.

கவிதை:

முப்பாட்டன் காலமுதல் முத்தமிழைச் சுமந்துகொண்டு
தப்பாமல் தவழ்ந்துவந்த  தமிழ்நேசற் கோநிறுத்தம் ?
எப்பாலா ரும்புகழ இனிக்குநகை யுடன்வருவாய்
எப்போது ம் இனிக்காணா எழிலெண்ணிக் கவல்கின்றோம்.

நாளைமுதல் கோளில்பொறி நயவாநிலை எய்திடினும்
நீளும்பல  நல்லாண்டுகள் நீஇயற்று  தமிழ்த்தொண்டை
நாளும்யாங்  களெல்லாமே  நன்னினைவில்   தாளிகைகள்
பாளையத்துள் அரசெனவே பண்புடனே புகழ்வோமே.