வியாழன், 10 டிசம்பர், 2015

பிரபஞ்சம் அஞ்சுகம் அஞ்சாலி

உலகம் என்பதைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன.   ஆனால் பிரபஞ்சம்  அல்லது ப்ரபஞ்சம்  என்ற பதத்தையும் பயன்படுத்தி வருகிறோம்.

இந்தச் சொல் எப்படி அமைந்தது என்பதைக் காண்போம்.

நிலம், தீ, நீர், வளி விசும்பு என்ற ஐந்து பூதங்கள் . பூதங்கள்  என்றால் இறைவன் புதிதாகப் படை த்தவை.  புதிதாக என்றால் தொடக்கமாகப் படைத்தவை.  புது + அம்  = பூதம்.  இன்னொரு வழியில் சொல்லவேண்டுமானால் முன் இல்லாதிருந்த நிலையில் புதிதாகத் தோன்றியவை.

இந்தப்  புதியனவாய்த் தோன்றிய  ஐந்தும் கலந்த அமைப்பே உலகம்.
தொல்காப்பியர் சொன்னபடி :

"நிலம்தீ  நீர்வளி விசும்போ டைந்தும் 

கலந்த மயக்கம் உலகம் ஆதலின். "

ஆகவே உலகம் பிறக்க ,  முதற் பிறந்த ஐந்துமே உலகம்.


ஐந்து என்பது அஞ்சு என்று திரியும். பேச்சிலும் அஞ்சு என்பதே வழங்கும்.  

எடுத்துக்காட்டு:

" அமைச்சு  அரசேய்ப்ப  அஞ்சவத் தைத்தே " (   சிவ . போ , 4  )

அஞ்சுகம்:   அஞ்சு ​+  உகம் ,

உகம் <=  உக + அம்  ,   உக என்பதில் ஈற்றகரம்  கெட்டுப்  புணர்ந்தது.  ஐந்தை உகந்தது என்று பொருள்.(   ஒரு கிளி, ஒரு மெல்லாடை   )

அஞ்சாலிகள் añcālikaḷ  வரவை ஐந்தால் வகுப்போர். அஞ்சு +  ஆல் + இ.n. < அஞ்சாலி. Cultivators, so called because they are entitled to only one-fifths of the produce of their cultivation, the remainder being paid to the king; நிலவருவாயில் ஐந்தி லொருபங்கை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் குடிகள். (R.)    (பேரகராதி )  

இனி,   பிரபஞ்சத்துக்கு வருவோம்.

பிறப்பு + அஞ்சு + அம்  =  பிறப்பஞ்சம்  >  பிரபஞ்சம் >  ப்ரபஞ்சம் .

முதலில் ஒரு "ப் "  நீக்குக.

அப்போது பிறபஞ்சம்  வரும்.

தமிழில் உள்ள இந்த "ற -வுக்குப் பதில் "ர "-வைப்  போடுக .

இதில் ஒரு பெரிய மாற்றம் இல்லை.  பிரபஞ்சம் ஆகும்.

அப்புறம் ப்ரபஞ்சம்  என்று அழகாக வரும்.

இனிப் பிரிக்கும்போது  ப்ர  +  பஞ்ச  என்று  மாற்றிப் பிரிக்க.

சொல் அமைந்த விதத்தையே  மறைத்துவிடலாம்.

அதுதான்  திறமை.


 Note:Hackers have changed the spelling  of   certain words in this post   and rendered it   unintelligible. in certain respects.  We have restored it   We shall review it after an interval. 



இது 26.12.2017ல்   மறுபார்வை   செய்யப்பட்டது.      ஆனால் எதையும்  மாற்றவில்லை.    மீண்டும்  பார்க்கப்படும்.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

வாய்தா

வாய்தா என்ற சொல் உருது மொழியிலும்    வழங்குகிறது.   தமிழ்  நாட்டிலும்  சிற்றூர்களில் வழங்குகிறது.  நிலம் வைத்திருப்போர் கட்டவேண்டிய வரியை இது குறிக்கின்றது.

வருவாயின் அல்லது நிலத்தின் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை  இறுத்தலே வாய்தா ,   இது மிகவும்  அழகாக அமைந்த ஒரு சொல்.  நாட்டு வழக்காகிய இச்சொல்லை  அமைத்து  அசத்தியவர் யார் என்பது தெரியவில்லை,  உருதுமொழிச் சொல் என்று தமிழாசிரியர் கருதினர்.

இந்தச் சொல்லைப் பற்றித்   தமிழ் வாத்தியார்கள்  சிந்திக்கத் தொடங்கியது முஸ்லீம்  அரசர் காலத்தில்.  ஆகவே   அவர்கள் உருது என்றனர்.  அதற்குமுன் சங்க காலத்தில் பேச்சு வழக்கில் அது இருந்ததா என்பதை  அறிய வழி ஒன்றுமில்லை.  சங்கப் புலவர்களின் சொற்றொகுதியில்  இலக்கியங்கள் வாயிலாக கண்டுகொள்ளப்படாத சொல்லைப்   பேச்சில் வழங்கியதா என்று கண்டுபிடிக்க வழி இல்லை.  தமிழாகவும்  இருக்கலாம்.  அல்லாமலும் இருக்கலாம்.

உருது மொழி பிற்காலத்தது.  தெக்காணி  மொழியில் இருந்து உருவாகியது
என்பர்.  இப்படிச் சொன்னால்  மேன்மைக் குறைவாகப் படுவதால்  இதைச் சிலர்  மறுப்பர்.  தென் + கணம்  >  தெற்கணம்  >  தெக்கணம் >  Deccan >  DeccANi >  தெக்காணி  > தக்காணி.   எனவே  தென் கணத்தே தோன்றி வளர்த்ததே உருது,  இதைப் பேசியவர்கள் முஸ்லீம்கள்.   அரபி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதினர்.  அரபியில் குர் ஆன்  வாசிக்க அறிந்தோருக்கு இந்த நிலை மிகவும் வசதி,

வருவாயிலிருந்து தரப்படும் தொகையை  வருவாய் + தா      என  அமைத்து    அதைச்  சுருக்கி   (வரு என்பதைக்   குறைத்து )  வாய் + தா  =  வாய்தா என்றனர்.
கணக்கு எழுதும்போது   வருவாயில் தந்தது  என்று  முழுவதையும் எழுதி நேரத்தை  ஒழித்துக்கொள்ளாமல்  வாய்*தா  என்று எழுதிக்கொண்டு  மிச்ச நேரத்தில் சுக்கு நீர் அருந்தி மகிழலாம்.  இலக்கணம் விளக்கெண்ணெய் எல்லாம் புலவன்  பேசிக்கொண்டிருப்பான்.     என்ன என்ன விளைந்தது என்று எழுதவேண்டுமானால்  து பரு ;  க பரு  என்று எழுதினால் போதாதா?     துப் பரு =  துவரம்பருப்பு ;  கப்பரு =   கடலைப் பருப்பு. என்று  புதுமை  செய்துகொள்ளும் திறனுடையார்  வணிகர்.

உபரு :     உளுத்தம்பருப்பு. என்றும்  எழுதலாம்.   தாள்  மிச்சம்.

வாய்தா   என்ற சொல் போல் அமைந்தது தான் che'Gu  என்ற மலாய்ச் சொல்லும்,    Incik  Guru   ( Mr  Teacher)     என்பதே  அங்ஙனம் அமைந்தது,   இதில்   பாதி.  அதில் பாதி.   இதைப் பற்றி  முன் எழுதியுள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html

You will find more examples of similar word formation at the above post,



திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னை வாசிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி......

சென்னை வாசிகள்,
மிகுந்த  நெஞ்சுரம் கொண்ட மக்கள்.
ஊரையே உருட்டிப்  புரட்டிப் போட்ட வெள்ளத்தில்
உள்ளே வீடுதேடி வந்த பம்புக்குட்டியை
ஈரத்  துணியை முறுக்கிப் பிழிவதுபோல்
சூரத் தனமாய்த் திருகிக் காட்டுகிறார்கள்.

ஒரு சாலை மேம்பாலத்தைத்  தொட்டுச் செல்லும்
பெருவெள்ளமும்  ஏற்படக் கூடுமென்பதை
இப்போதுதான் கண்டிருக்கிறோம்.

உயிரிழப்புகளும்  பொருளழிவுகளும்  நேர்ந்து
பஞ்சு படாத பாடு படுகின்ற மக்களையும் காண
நெஞ்சு சுக்கு நூறாகிவிடும்
உணவுப் பொருளும் உதவிப் பொருளும் கொண்டுவந்தோரை
உதைத்தனர்  சிலர்;   அது
பதைத்து  நிற்கும் மக்களை
மறைத்து முன் நிற்கும்  காட்சி !
இதைத் தானா நாகரிகம் என்பது?

விரைவில் இயல்பு நிலைக்குத்   திரும்பி
துன்பம் களையப்பட்டு
அன்பு நிலையமாய்ச்
சென்னை செழிக்க
இன்னருள் இறைவன் தருக .


.