வியாழன், 29 ஜூலை, 2021

கச அடிச்சொல். இரு வெளிப்பாடுகள்.

 கச என்ற அடிச்சொல் :

ஓன்று:  கச > கசத்தல் என்ற வினைச்சொல்லிலிருந்து விளைந்த சொற்கள்.  இவை முன்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இன்னொன்று:  கழிச்ச என்ற சொல். இது எழுத்தில் கழித்த என்று எழுதப்படும். நமது வீட்டுமொழி கழித்த என்று சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.  மலையாளத்தில் கழிச்சு  (ஊணு கழிச்சு) என்பதே இலக்கிய வடிவம். எது இலக்கிய வடிவம் என்பது இனமொழிகளுக்கிடையில் வேறுபடும். இலக்கிய வடிவத்தில் உயர்வுமில்லை. இலக்கியத்திலில்லா வடிவத்தில் தாழ்வுமில்லை. கருத்துக்கள் ( அபிப்பிராயம் அல்லது ஆங்கிலத்தில் ஒபினியன்) அருகியே பொருட்டாகும். பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படவேண்டியவை. இலக்கிய வடிவம் இன்சொற்களாய் மலருங்கால் ஒருவன் அவற்றை நுகர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கலாம்.  அப்போது அது உயர்வு உயர்வு உயர்வு என்று உரத்துக் கூவிக்கொண்டு அதன்மூலம் அவனது இரத்த அழுத்தம் குறைந்து நன்மை நேர்கிறதா என்று கவனித்துக்கொண்டு  வாழ்க. எமக்கு எந்த மறுப்புமில்லை.  யாமும் அப்படி இலக்கியத்தைப் புகழ்வதுண்டு.  புகழாமல் இருப்பதுமுண்டு. இக்கணத்தில் அவற்றை மனித ஒலிகள் என்ற நிலைக்குத் தள்ளி திறனாய்வின்றிப் பேசுகிறோம். ஆய்வு நாற்காலியில் அமர்ந்தால் உடனே இந்த நிலைக்குத் திரும்பிவிடவேண்டும்.  அதாவது காய்தல் உவத்தல் என்பது ஆய்வுக்கு விலக்கு.

கழிச்ச என்பது இடைக்குறைந்தால் கச என்று வந்துவிடும்.

ஆகவே இரண்டு கச என்னும் வடிவங்கள் உண்டு. ஒன்று முதலாவது. இன்னொன்று அடுத்துக் கூறிய இடைக்குறை வடிவம். 

இந்த இடைக்குறை வடிவத்தைப் பயன்படுத்தி எந்த இடுகையும் இன்னும் இடவில்லை.  தக்க தருணத்தில் அது செய்யப்படும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர். 


வாழ்வில் பொம்மை அவசியம் (படம் ) நாய்க்குட்டி




 சோறும் கிடைத்து

நீரும் கிடைத்தாலும்

நேரம் இருந்தால்

பொம்மைகள் வைத்த

புதுமை விளையாட்டு!

இல்லை என்றால்

இல்லையே இன்பம் வாழ்வில்!

சின்னஞ்  சிறுகுட்டி  எனக்கு

என்னதான் வாழ்வில் இனி?


கவிதை தந்தவர்: சிவமாலை.

படம் தந்தவர்: திரு ரோஷினி அவர்கள்.

சின்ன நாயின் பெயர்:  யூகி.


 சோறு என்று கவிதையில் சொன்னாலும்

நீங்கள் எங்களின் சிறப்புணவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

சோறு தின்னமாட்டோம்  

எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால்

நான் கைகொடுத்து வரவேற்பேன்


இப்படிக்கு  உங்கள் யூகி.  

.



முகம் மூஞ்சி தமிழ்தான்

 ஒரு காலத்தில் தமிழில் முகம் என்ற சொல்லைப் பற்றிச் சந்தேகம் அல்லது  ஐயுறவு சிலரிடை இருக்கவே செய்தது. அவர்கள் அச்சொல்லைத் தமிழன்று என்று எந்த ஆய்வும் ஆதாரமும் இன்றிக் கூறினர்.

முகம் என்பதைத் தமிழ் என்று அறிய வெகு எளிதான வழி::

மு  - இது முன்னிருப்பதைக் குறிக்கும்.

கு - என்பது தமிழ் தோன்றிய காலத்திலிருந்து  (  அது எக்காலமோ ) [முன் பக்கத்தில்] சேர்ந்திருப்பது எனல் குறித்தது.  அது (முகம்)  தலையில் அமைந்துள்ள பகுதி.

அம் - இந்த விகுதி பெரும்பாலும் அமைந்தருத்தலைக் குறிக்கும்.

அம் >  அமை > அமைதல் > அமைத்தல்.  அம் என்பது இவ்வாறு (பல சொற்களின்) வினைச்சொல்லின்/ வினைச்சொற்களின்  முதனிலை  அசையாக வுள்ளது.

முகுஅம் >  முகம்.

பண்டைப் புலவருள் சிலரும் மூஞ்சி என்பது தமிழ் ஆனால் முகம் என்பது தமிழன்று என்றனர்.  இவர்கள் ஏன் "முகுஅம்" என்று சிந்திக்கவில்லை?  செய்யுள் பல கற்றனரே அன்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் நாம் முடிவு செய்யவேண்டும்.  அவர்கள் புலவர் என்பதனால் நாம் இதைக் கூறாமல் விடமுடியாது.

முகம் என்பது பிடிக்கவில்லை என்றால்  முன்+ கு+ அம்  என்று சொல்லைப் புனைந்து,  முன்கம்    என்பதையே பயன்படுத்தியிருக்கலாம்.  அது முங்கம் அல்லது முற்கம் என்று திரிந்திருக்கும்.   அதுவும் ஏற்புடையதாகவே இருந்திருக்கும். முங்கம் இடைக்குறைந்து முகமாகும் வாய்ப்பு அதிகம்.

முகு + இன் + சி >  மூ +ன்  + சி >  மூஞ்சி என்பதையும் அவர்கள் அறியவில்லை. மனிதனுக்குக் காதுகள் தலையின் பக்கலின் உள்ளன.

மூக்கு, கண்கள், வாய் எல்லாம்  முன்னே உள்ளன. இவை மூன்று  உறுப்புகள். அதனாலும் மூ + இன் + சி >  மூஞ்சி   (மூன்று உறுப்புகளை உடைய தலையின் பகுதி) என்பது தெளிவாகவே உள்ளது. [ மூன்று + சேர்ந்தது >   மூன்சே>  மூஞ்சே  மூஞ்சி  எனலும் பொருள்தரும் விளக்கமே ]  முகு என்பது மூ என்று திரியும்.   மூன்று என்பதும் மூ  எனலாகும்.  இருவழிகளிலும் மூஞ்சி என்பதில் எந்த ஐயப்பாடும் எழவில்லை.  காரணம் கூறாமல் ஐயப்பாடுகளை எழுப்பிக்கொண்டிருப்பவன் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  காரண காரணிகளுடன் இதைக் குறிப்பிட்டு எதிர்த்தவர்களை யாம் அறிந்ததில்லை. இருந்தால் பின்னூட்டமிட்டுத் தெரிவிக்கவும்.

முகு என்பது மூ எனலாகும்.  இதுபோன்ற திரிபுகள்:  பகுதி >  பாதி. இதில் பகு என்பது பா என்றானது.   மிகுதி >  மீதி.  இதில் மிகு என்பது  மீ என்றானது.  தொகு > தோ > தோப்பு.    நகுதல் : ஒளிசெய்தல். பாம்புத்தோல் சித்திர வேலைகளுடன் கூடி ஒளியுடைய விலங்கு.  நகுஅம் > நாகம்.  இதில் நகு  என்பது நா என்று வந்தது.  இனி,  நகர்வதனாலும் நாகமென்பர்.  நகர் > நாக > நாக+ அம் > நாகம். இது நகர் என்பதில் அர் கெட்டு, நக என்பது நாக என்று நீண்டு, அம் விகுதி பெற்று அமைந்ததென்பர் அறிஞர் சிலர்.  என்றிவை கூறினும் தமிழ் ஆகும்.

இதுகாறும் கூறியவற்றால் முகம் தமிழே.  சமத்கிருதமென்பது மந்திரங்கள் ஓதி வீட்டுமுன் வந்து  பூசைகள் செய்வாரிடைத் தோன்றிய இந்திய உள்நாட்டு மொழியே அன்றி  ஆரியர் என்று யாரும் வரவல்லை.  வெளிநாட்டினர்  லடாக்கில் வந்து எல்லையில்லாமையால் இடம்பிடித்தனர் பலர்.  அவர்கள் யாரும்   ஆரியர் எனலாகாது.  வெளிநாட்டினர் வருவது எல்லா நாட்டிலும் நடந்த ஒன்றாகும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அகரவரிசை கொண்டுவந்தனரோ?  அவர்கள் கொணர்ந்தவை எங்கே?  

ஒரு அமைப்புறவும் இல்லாத சொற்களை நம்மவை என்று பெருமைப்படுவதாயின் நமக்கு தலைக்கிறுக்குப் பிடித்திருக்கவேண்டும். உலகில் கோடிக்கணக்கான மொழிகளில் சொற்கள் உள்ளன.  நாம் நமவென்று கூறுபவை இங்குக் கணக்கெடுத்தால் ஓர் ஆயிரம் இருக்கலாம். கோடியில் ஆயிரம் எத்தனை விழுக்காடு?  நமக்கு ஒன்றும் பைத்தியம் இல்லை.  வெகு நிதானமாகவே உள்ளோம், காண்பீர்.  தொடர்பு இருப்பவற்றைக் கூறாதொழிதலும் தவறு;  தொடர்பு இலாதனவை தொடர்பு கூறுதலும் தவறு. இதை நாம் அறிவோம்.

பிறர் கூறியன மேற்கோளானால் நாம் அவற்றை மேற்கோளாகக் காட்டுவோம்.   எம்மவை என மாட்டோம். யாமே சிந்தித்த கருத்துக்களையே எழுதுகிறோம்..  பிறர் கருத்துக்களாயின் அவர்கள் நமக்கு முந்திய அறிஞர் பெருமக்களாக இருக்கவேண்டும். தொல்காப்பியர், சங்கப் புலவர்கள், தலைசிறந்த தமிழறிஞர்கள் எனக்காண்க. அல்லாரை நாம் உள்கொணர்வதில்லை. நீங்களும் இவற்றை அறிவீர்.  நன்றி உரித்தாகுக.  யாம் எழுதத் தொடங்கியே 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.  1958 முதல் தமிழ் ஈடுபாடு உடையோரும் நம்முடன் உள்ளனர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்