செவ்வாய், 2 ஜூன், 2020

பள்ளிக்குச் செல்வதோ துள்ளும் சிறுகிளிகள்?


நேரிசைவெண்பா.

துள்ளிக் குதித்தோடும் துய்ய சிறுகிளியைப்
 பள்ளிக் கனுப்புவதோ பண்ணாமோ------உள்ளந்தான்
நோய்க்கடவை தாண்டா நுடங்கு நிலையினால்
தாய்க்கப் பனுக்குச் சுழல்.




அருஞ்சொற்கள்

துய்ய -  தூய்மையான ( நோயில்லாத )
சிறுகிளி -  சின்னப்பிள்ளை, பள்ளிப்பிள்ளை.
பண்ணாமோ - பொருந்துமோ, தகுமோ-  முறையோ
கடவை - வாயிலில் உள்ள தாண்டவேண்டிய தரைத்தடை.
நுடங்கு  -  முடக்கம். நோய் ஏற்படுத்தியுள்ள தடை(நிலை.)
தாய்க்கப்பனுக்கு -  தாய்தந்தையர்க்கு
சுழல் -  (  மனச்) சுழற்சி. தீர்மானிக்க இயலாமை.


இது சிங்கப்பூரின் நிலை.  நோய்த்தொற்று வருமோ
மிகுமோ என்ற அச்சம்.இதைப் பற்றிய செய்திக்குறிப்புக்கு
இங்கே சொடுக்கவும்:-

http://theindependent.sg/ong-ye-kung-urges-parents-against-keeping-their-kids-out-of-school-as-circuit-breaker-ends/

While some parents are keeping their children home despite the reopening of schools, due to fears over the risk of COVID-19 transmission, Education Minister Ong Ye Kung has asserted that keeping students home for long will impact their development.


வாழ்க்கை என்பதில்  அச்சம் ஏற்படுவது இயற்கைதான்.
ஆனால் அச்சமே வாழ்க்கை ஆகிவிட்டாலும்  
எப்படி வாழ்வோம் இனிமேல் இப்புவியில்?
ஏதாவது ஓர் எல்லையில் அச்சம் தவிர்க்கவேண்டியதுதான்.



திங்கள், 1 ஜூன், 2020

பதுங்கிடுக வீட்டில்


பரவிவிட்ட இடங்களிலே குறைவுபட்ட தென்று
பலரும்விட்ட குளறுபடிக் கூற்றுசெவி ஏற்றி
உறவினரை உறுதோழர் தமைத்தேடிச் சென்றே
ஒளிந்திருந்த நோயணுவைச்  சுமந்துவிரி கூட்டித்
திறமுணர மாட்டாத தேய்மதியால் தன்னைத்
தேறுவழி இல்லாத நோய்வாய்க்குள் தள்ளிப்
பரமனடி போய்ச்சேரும் வரம்வரவே வீழ்ந்து
பாழ்படவும் துணிவீரோ பதுங்கிடுக வீட்டில்.

( ஒரு தோழிக்குப்  புத்திமதி )


பொருள்:

பரவிவிட்ட இடங்களிலே - ( மகுடமுகி என்னும் நோய்நுண்மி (வைரஸ்) த் தொற்று விரிந்துள்ள தலங்களில், குறைவு பட்ட தென்று - அதன் தாக்கம் குன்றி விட்டது என்று,

பலரும் விட்ட குளறுபடிக் கூற்று - வதந்திகள் பரப்புவோர் வெளியிட்ட குழப்படியான பேச்சு,

செவி ஏற்றி - காதில் வர, அதை மனத்துள் மேற்கொண்டு,

உறவினரை உறுதோழர் தமைத்தேடிச் சென்றே-  சொந்தக்காரர்களையும் நெருங்கிய நண்பர்களையும்
இருக்குமிடம் கண்டு போய்ப்பார்த்து,

ஒளிந்திருந்த நோயணுவை சுமந்துவிரி கூட்டித் - தன் அறிகுறிகளை வெளியிற் காட்டாமல் உடலுக்குள் மறைவாக இருந்த கிருமிகளைப் போய் தன்னுடலில் ஏற்றிக்கொண்டு நோயின் பரவலை விரிவாக்கி,

திறமுணர மாட்டாத தேய்மதியால் - நிலைமையை ப் புரிந்துகொள்ளாமல்அறிவுக்கூர்மை இன்மையால்,

தன்னைத் தேறுவழி இல்லாத நோய்வாய்க்குள் தள்ளி- 
தன்னை, மீளமுடியாத நோய்த்தொற்றில் மாட்டிவிட்டுக்கொண்டு,

பரமனடி போய்ச்சேரும் வரம்வரவே- நோய் முற்றி மரண இடர் நெருங்கவே,
வீழ்ந்து பாழ்படவும் துணிவீரோ பதுங்கிடுக வீட்டில். - இறக்கவும் துணிச்சல் கொள்ள முனைவீரோ, வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே இருந்துவிடுங்கள்.

ஞாயிறு, 31 மே, 2020

18ம் பெற்றுச் சிங்கப்பூர் வாழ்க!


கொரனா நோய் குறைந்து நலம் சிறந்தமைக்கு வாழ்த்து.

ஏறு  முகம்கண்  டிருப்போர்  வதைத்த 
வீறு மிகுநோய் முடியுரு  நுண்மி
சீறு விரைவைச் சிதைத்தசிங் கப்பூர்
ஆறு உறழ்மூன் றனைத்தும் பெறுமே.


ஏறுமுகம் கண்டு ---  எண்ணிக்கையில் கூடிவந்து,
இருப்போர் வதைத்த --- குடிவாழ்நரைத் துன்புறுத்திய,
வீறு மிகுநோய் ---  உறுதியுடன்  பற்றுதிறமும் மிக்க நோயான
முடியுரு நுண்மி ---  கொரனா வைரஸ் நுண்மி,
சீறு விரைவை  ---- எதிர்த்துக் கிளம்பும் வேகத்தை,
சிதைத்த சிங்கப்பூர் --- தடுத்து மாற்றிய சிங்கப்பூர்,
ஆறு உறழ்மூன்று --- பதினெட்டுப் பேறுகளையும் (பாக்கியங்கள்),
அனைத்தும் பெறுமே --- எல்லாவற்றையும் பெற்று உயரும்.
முன் கூறிய 16 செல்வங்கள் ஒரு நாட்டுக்கு ஏற்ற
மாற்றங்களுடன் அமைவதுடன், நிலையான ஆட்சியையும்
ஊழலற்ற அமைச்சர் பெருமக்களையும் அடைந்து
ஓங்குக என்றவாறு.
என்று சிங்கையை வாழ்த்துகிறது இக்கவியின் வரிகள்.
வாசித்து மகிழ்வீர்.