ஞாயிறு, 21 ஜூலை, 2019

சூது வாது

சூது,  வாது முதலிய சொற்களை முன்னர் விளக்கியதுண்டு எனினும்  அவை ஈண்டில்லை ஆதலின் மீள்பதிவு செய்வோம்.

சூது என்பது  ஓர் இடைக்குறைச் சொல்.  

சூழ்தல் என்பது ஆலோசித்தல்.  சூது விளையாடும்போது ஆலோசித்தே விளையாடவேண்டும்; இன்றேல் தோல்வியைத் தழுவ நேரிடும்.  ஆதலின் சூழ்தல் என்ற வினையடியாய்ப் பிறந்தது இச்சொல்.

சூழ் + து =  சூழ்து >  ( ழகர ஒற்று வீழ்ந்து )  சூது.

சூழ்ச்சி என்ற சொல்லமைப்பும் காண்க.  சூழ் -  திட்டமிடு.

இவ்வாறு ழகர ஒற்று இடைக்குறைந்த இன்னொரு சொல், எடுத்துக்காட்டு:

வாழ்த்தும் இயம் >  வாழ்த்து இயம் >  வாழ்த்தியம்.

வாழ்த்தியம் >  வாத்தியம்.

வாழ்த்துவது என்பதை முன்னர் படிப்பறியார் வாத்துவது என்பர்.

பிற்காலத்தில் இச்சொல் வாழ்த்தாத இயங்களையும் உட்படுத்தி விரிந்தது.

ஆனால் வாத்து என்ற பறவையின் பெயர்  வாய் என்பதனடிப் பிறந்தது.

வாய் >  வாய்த்து >  வாத்து.   இதில் யகர ஒற்று வீழ்ந்தது.

இதுபோலும் இன்னொன்று:   வாய் > வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.

வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர்.

உப அத்தியாயி > உபாத்தியாயி என்பது வேறு.  குழப்பலாகாது.

வாயினால் பரப்பப்படும் கெடுதல் :  வாய் >  வாய்து >  வாது.

வாயினால் செய்யப்படுவது  வாதம்   :  வாய் >  வா > வாதம்.

வாய்ப்பட்டியை வாப்பட்டி என்பர் சிற்றூரார்.  படிப்பறிவு மிக்க ஊர்களில் இப்போது திருத்திக்கொண்டிருப்பர்.

சூது வாது என்பன இடைக்குறைகள். அறிக.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்.

வெள்ளி, 19 ஜூலை, 2019

ரகமா இரகமா ( இரு அகமா)?

ஈண்டு ரகமென்னும் பதத்தை உன்னி உணருவோம்.

ரகமென்பது  ஆங்கிலத்தில் உள்ள "kind"  ( type )  என்ற பொருளில் பயன்பாடு காண்கிறது.

ஒரு பொருளின் தன்மை என்பது அதன் உள்ளுறைவைப் பொறுத்தது ஆகும். தேனில் உள்ளுறைந்திருப்பது அதன் இனிமை. ஒரு குறித்த கருமஞ்சள் நிறத்தில் குழம்புபோல் சற்று இறுக்கமாக இருக்கும் இளகுநிலை. அதிகம் உண்டால் தெவிட்டவும் செய்வது.

உந்து வண்டிக்கு இடும் உயர்தர உருளையெண்ணெய்   ( சிலிண்டர் எண்ணெய்) தேன்போன்ற நிறத்திலும் குழம்பு வடிவிலும் இருந்தாலும் சுவையாலும் நிறத்தாலும் பயன்பாட்டினாலும் வேறுபட்டதே.  அதன் ரகமே வேறு.

இத்தகைய பொருள் உள்ளுறைவினாலே இரகம் ஏற்படுகின்றது.

தன்மையானது பொருளுடன் இயைந்து நிற்பதால் இதனை ரகம் என்றனர்.  அகத்து இருப்பதாகிய தன்மை.

இங்கு அகமென்றது கண்ணால் அறியத்தக்க உள்ளியைபுகளும் கண்காண முடியாத, பிற பொறிகளால் அறியத் தக்கவுமான உள்ளியைபுகளும் ஆம்.

இதைக் குறிக்க எழுந்த இரகம் என்பது எளிமையுடனமைந்த சொல்லே.

இரு அகம் >  இரகம் என்று அமைத்தனர்.

நம்ம பையன் முருகன் ஒரு ரகம்;  அடுத்த ஆத்துக் கிருட்ணன் இன்னொரு ரகம்.

ஆக ரகம் என்பது வகை எனலும் ஆம்.

திராவிட மொழிகள் ஒரு ரகத்தவை;   சீனத் திபேத்திய மொழிகள் வேறு ரகத்தவை.

ரகத்தை உள்ளுறைவால் உள்ளியைபுகளால் அறிக.

அகத்தில் இருக்கும் தன்மை என்பதை மறுதலையாகப் போட்டு இரகம் என்ற சொல் அமைந்தது.

இப்படித் தலைமாற்றாக அமைந்த சொற்கள் பல பழைய இடுகைகளில் விளக்க[ப் பட்டுள்ளன.   அவற்றைப் படித்துத் தமிழுணர்வு மேம்படுத்திக் கொள்வீர். 

7.3.2020 சில தட்டச்சுப்பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.

வியாழன், 18 ஜூலை, 2019

குணமென்னும் சொல்.

குணம் என்ற சொல்லின் அமைப்பையும் அது எவ்வாறு பண்பு என்னும் பொருளை அடைந்தது என்பதையும் தெரிந்துகொள்வோம்.

குணித்தல் என்பது இதற்குரிய மூல வினைச்சொல்.

குணித்தல் என்பது கணித்தல் என்பதன் வேறன்று.   கணி என்பது குணி என்றும் திரியும்.

ஒரு மனிதன் எவ்வாறான நடவடிக்கைகளை உடையவன் என்பதும் ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி நடந்துகொள்கிறான் என்பதும் பிறரால் கணிக்கப்படுகிறது அல்லது அளவிடப்பட்டு அறிந்துகொள்ளப்படுகிறது.

வாசலுக்கு வந்து உணவு கேட்டு இரந்து நிற்பவன் ஒருவனுக்கு வீட்டிலிருப்பவன் பரிந்து ஏதேனும் உண்ணக் கொடுக்கிறான். இதைப் பார்ப்பவர்கள் அவன் இரக்க குணம் உடையவன் என்று கணிக்கிறார்கள் அல்லது குணிக்கிறார்கள்.  (  கணி =  குணி முன்னர் கூறப்பட்டது.  )

குணி +  அம் =   குணம்.

அம் விகுதி சேர்க்க,  குணி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு,  குண் + அம் =  குணம்   ஆகின்றது.

குணி என்ற வினைச்சொல்லைத் தருவிக்காமல் குண் என்ற அடிச்சொல்லினின்றே குணம் என்னும் சொல் அமைதல் கூறினும் அதுவும்  ஏற்புடைத்ததே ஆகுமென்பதறிக.

எதையும் கணிப்பதோ குணிப்பதோ கண்களினால் அறிந்துகொள்வதே ஆகும். பின்னர்தான் மனம் அதை உருவப்படுத்துகிறது.  ( மனம் என்ற ஒன்று இல்லை என்பது அறிவியல் ).  உடல் முழுமைக்கும் இரத்தம் ( அரத்தம் )  என்னும் குருதியினை ஈர்த்து வெளிப்படுத்தி ஓடச்செய்யும் இருதயம் (  ஈர் + து + அ + அம் ) மனம் அன்று.   அது அரத்த ஓட்டம் ஏற்படுத்தும் ஓருறுப்பே ஆகும்.  இந்த இருதயம் என்ற சொல்லின் வினையடி ஈர்த்தல் என்பதே.  ஈர் என்பது இர் > இரு என்று குறுகிற்று.  தோண்டு >  தொண்டை,  சா > சவம் என்பன போலுமே ஆம்.

கண்களே  முதல் அறிகருவி ஆதலின்,   கண் > கணி > கணித்தல் என்று சொல் அமைந்தது.   கணித்தல்,  கணக்கு, கணிதம் என்னும் பல்வேறு  சொற்கள்  கண் என்பதனடிப் பிறந்தன அறிக.  கண் என்பதில் இகரமாகிய வினையாக்க விகுதி இணைந்து,  கணி என்பது அமைந்தது.   இகரம் இங்கனம் வினையை உண்டாக்குவது   அளைஇ,  நசைஇ  என்னும் பழஞ்சொற்களின் வாயிலாகவும் அறிந்தின்புறலாம்.

அகரத் தொடக்கத்தன இகர மாதலும்  பின்னது முன்னதாதலும் திரிபில் உளது  என்பதுணர்க.  எடுத்துக்காட்டு:  அண்ணாக்கு -  உண்ணாக்கு;   அம்மா> உ(ம்)மா.

குணம் என்பதுபோல் அமைந்ததே கணமென்னும் சொல்லும்.  கணம் என்பதற்குப் பல பொருளுண்டு.  எனினும் அடி கண் என்பதே.   அதைப் பின்னொரு நாளில் நுணுகி அறிவோம்.

குணமென்பது பல மொழிகளிலும் புகுந்து சேவை கண்ட சொல் ஆகும்.  இதுவும் தமிழர்க்குப் பெருமை தருவதே. 

தட்டச்சுப் பிழை தன்திருத்தப் பிழைகள் பின்னர் கவனிக்கப்படும்.