செவ்வாய், 25 ஜூன், 2019

மந்தையும் மன்றமும் - ஆய்வு

மன்றம் என்பது உயர்ந்த அறிவாளிகள் கூட்டத்தைக் குறிக்கும் ஒரு சொல். எடுத்துக்காட்டு:  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் அல்லது அவை.

அவை என்ற சொல் மிக்க எளிதாய் அமைந்த சொல்லென்பதை முன்பு விளக்கியுள்ளோம்.  இச்சொல்லில் வையென்பது வைக்கப்பட்டது, நடைபெறுமாறு நிறுவப்பட்டது என்னும் பொருட்டு.  அங்கு புலவர் கூடுமாறு வைக்கப்பட்டுள்ளது.  அது   " அ ( அங்கு ) +  வை ( நடைபெறுமிடம் )"    எனவே அவை ஆகிறது.  இது மிக்க எளிமையாய் அமைந்ததும் எளிமையாய் விளக்கத்தக்கதுமான ஒரு சொல்.  இதை அமைத்தவர்கள்  அக்கூட்டத்தைச்  சுட்டிக் காட்டுதற்குரிய இடத்திலும் வேலையிலும் இருந்தவர்களே.  எனவே இது புலவர் அமைத்த சொல்லன்று.  அரண்மனைக் காவலர்களோ வழிகாட்டுநரோ அமைத்த சொல்லென்பது கடின சிந்தனை ஏதுமின்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது ஆகும்.  எல்லாச் சொற்களையும் ஒரு மொழியில் புலவர்களே அமைத்தனர் என்பது மடமைக் கருத்தே என்பதுணர்க.  எங்கும் பொறுக்கி எடுத்த சொற்களே ஆங்காங்கு எல்லா மொழிகளிலும் கிடைகின்றன.  அவை பலவேறு வகை மக்களால் அமைத்துப் புழங்கப் பட்டவை.

அவை என்ற சொல் பின் பல மொழிகட்குச் சென்றிருக்கலாம்.  அது இயல்பு.
சவை சபை சபா என்றும் திரிந்திருக்கலாம்.  உயர்தரச் சொல்லாய் இன்று கருதப்படலாம்.  தொடக்க நிலை வேறு.  அடைவு நிலை வேறு.

மன்றம் என்ற சொல்லோவெனின்,  மன்றுதல் என்னும் வினைச் சொல் அடியாகப் பிறந்தது. புலவர் அமைத்த சொல்லாக இருக்கலாம்.  மன்றுதல் எனின் கூடியிருப்பது;   சேர்ந்திருப்பது என்பது ஆகும்.   ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கைத் தொடக்க விழவுக்கும் மன்றல் என்ற சொல் வருகிறது. இதுவும் மன்று என்பதனடிப் பிறந்ததே.

மன்று என்ற வினையை மன்+ து என்று பிரிக்கவேண்டும்.   மன் து என்பது மன்று என்று புணர்ந்து சொல்லாவது தமிழின் இயற்கைக்கு ஒத்ததே ஆகும்.

மன் து என்ற அடியும் விகுதியும் இணைந்து இரண்டு சொற்களைப் பிறப்பித்தன.

மன் து என்பது புணர்ச்சித் திரிபு எய்தி  மன்று என்று ஆகி மன்றம் ஆனது.

இனி :

மன் து என்பதே  மந்து என்று மேற்கண்டவாறு திரிபு எய்தாமல் விகுதி இன்னொன்று  ஐ என்பதைப் பெற்று மந்தை என்று  ஆனது.

மன் என்பது கூட்டம் குறிக்கும் என்றோம்.  இரண்டும் கூட்டமே.  ஒன்று மனிதர்கள் கூட்டம் ( மன்றம்).  இன்னொன்று:  விலங்குகள் கூட்டம். மன் து ஐ ( மந்தை ).

ஒரே அடிச்சொல்லைக் கொண்டும்  அதே விகுதியைக் கொண்டும் இருவேறு சொற்களை உருவாக்கி உள்ளனர் பண்டைத் தமிழர்.  இறுதிநிலையாக ஒன்றில் அம் இட்டனர்.  இன்னொன்றில் ஐ இட்டனர்.

மொழிக்குச் சொல்லைப் படைப்பதென்றால் இப்படியன்றோ திறம்படப் படைக்கவேண்டும்.

சந்தி விதிகள் என்பவை உரைநடை  செய்யுள் முதலியவற்றுக்குரியவாம். சொல்லாக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.. அந்த விதிகள் வேண்டியாங்கு பயன்படும். பயன்பாடின்றியும் ஒழியும்.  இங்கு விதிகளினும்  சொல்லமை வசதிகளே மேல்வருவன காண்க.

கூட்டம் என்பதே உள்ளுறை பொருளாயினும்  ஒன்று மனிதர்க்கும் இன்னொன்று விலங்குக்கும் ஒதுக்கம் பெறுவது இடுகுறி ஆகும்.


திங்கள், 24 ஜூன், 2019

தேனிரும்பு பெயர் வந்த வகை

தேனிரும்புக்கும் தேனுக்கும் என்ன தொடர்பு?

ஆங்கிலத்தில் "ரோட் அயன்"   (wrought iron ) என்று சொல்லப்படும் இந்த இரும்பு  ,  கலவை இரும்பு ஆகும்.

தமிழர்கள் இது தேய்ந்துபோய்விடும் என்று அஞ்சினர்.  அதனால் இதைத்
"தேயனிரும்பு"  என்றனர். இது ஒரு பேச்சுவழக்குப் பெயர்.   இது எழுத்தில் புகுமுன் தேனிரும்பு என்று திரிந்துவிட்டது.

இது யகரம் வீழ்ந்த இடைக்குறைச் சொல்.

இடைக்குறைகளால் மொழி வளம் பெற்றுள்ளது.

யகரம் குன்றிய   இடைக்குறைச் சொல் இன்னொன்று:-

வியத்தல்  ( மூல வினைச்சொல்).

விய  + தை =  வியந்தை ( மெலித்தல் விகாரம் ) >  விந்தை.

இங்கும் யகரம் வீழ்ந்தது

சனி, 22 ஜூன், 2019

பாக்டீரியா ( சின்`கோலிகள்)பால் வீழ்ந்து விடாதீர்: கவனம்.

தசைதின்னிச்  சின்`கோலிகள்.

'Flesh-Eating' Bacteria

இதுபற்றிய பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  அவற்றை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.   இப்போது இன்னொன்று.

https://www.medicinenet.com/script/main/art.asp?articlekey=222329&ecd=mnl_day_061919 

 

 உருப்பெருக்கியில்   (நுண்பெருக்காடியில் ) நோக்கினால் இந்தச் சின்`கோலிகள்  சின்னக் கோல்கள் போல் காணப்படும்.   ஆதலின் இவற்றுக்கு இப்பெயர் தமிழில் பொருத்தமானது.   இது "பாக்டிரியா" என்னும் ஆங்கிலச் சொல்லின் ஏற்கத் தக்க தமிழாக்கமாகும். பாக்டிரியா எனின் சின்னக் கோல்கள் போல் தோன்றுவன என்பதே பொருளாகும்.

வியாதி என்று தமிழில் வழங்கும் சொல் மிக அருமையாய் அமைந்தது.

விய என்றால் பெரிது என்பது பொருள்.  விய+ ஆதி :  பெரிதாகிக் கொண்டு செல்வது.   அதுதான் இந்த நுண்ம உயிர்களின் நடவடிக்கையால் இப்போது நடைபெற்றுக்கொண்டு உள்ளது காண்பீர்.  வியத்தல் என்பது வினைச்சொல்.  வியந்தேன் -  பெரிதாகக் கண்டேன் அல்லது உணர்ந்தேன் என்பதே பொருள்.   விய -  வியப்பு என்றுமாகும்.

வியனுலகு என்ற குறள் சொற்பயன்பாட்டில் பெரிதான உலகு என்று பொருள்.

பலர் இறந்துபோவதைக் கண்டு கண்டு பழக்கப்பட்ட ஒரு மனிதன், இறப்பது வழக்கமாக நடைபெறுவது என்ற நிலைக்கு வந்துவிடுகிறான். இவன் " ஆறிலும் சாவு நூறிலும் சாவு"  என்ற பழமொழியைப் புனைந்ததில் யாதொரு வியப்புமில்லை.  ( பாருங்கள்: வியப்பு என்ற சொல் வந்துவிட்டது ).   பண்டிருந்த கற்காலத்துக்கும் முற்காலத்தில் காடுமலைகளில் வாழ்ந்த மனிதன்,  சாவின் தன்மையைச் சிந்திப்பவனாய்,  ஏதோ பெரிதொன்று நடைபெறுகின்றது என்று நினைத்தான்.  நன்றாக இருந்தவன் கோணல்கோணலாய்ப் பிடித்துக் கைகால் இழுத்து விழுந்து இறக்க,   அதேபோல் நிலைமை பிறருக்கும் பரவி அவர்களும் இறக்க,  சாவுக்களம் விரிவுபடுவதை மனிதன் உணர்ந்தான்.   விய ஆதி  (  பெரிதாக ஆகுதல் ) நடைபெற்றது கண்டான். இதை விளைவிக்கும் அந்த ஏதோ ஒன்றுக்கு வியாதி என்று பெயரிட்டான்.

பரவுவதே வியாதி.  நாளடைவில் அதிகம் பரவாமல் ஒருத்தனைக் கொன்ற நோய்க்கும் வியாதி என்றே கூறப்பட்டது இச்சொல்லின் பொருட்குறுக்கம் ஆகும்.   அடிச்சொல் விய என்பது பெரிதாவது என்று பொருள்தருவதே இதற்குக் காரணம்.

சாவு நிகழ்ந்தே தீருமென்பது மிக்கத் தெளிவான பின்னர்:

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு"

என்பது உலகின் பெருமை என்பது உணரப்பட்டது.

இன்றைய நிலையில் சாவைத் தருவது எது?   அது சாதாரணமானதுதான். எப்படியும் நிகழ்ந்தே தீரும்.  இறைவன் ஒருவனே நித்தியன் என்று நினைத்தான் ,  உணர்ந்தான் மனிதன்.

சா -  சாவை,

தார் =  தருவது.

அண் =   அடுத்து

அம் :  அமைந்தே தீரும் என்னும் பொருளை உணர்த்தும் விகுதி.

தரு : தாராய்,  வரு : வாராய் என்றும் திரியும். இது எதிர்மறைப் பொருளும் தரும்.

வாராய்:  வருவாய்,

வாராய்:  வரமாட்டாய்

இவற்றின் பொருளை வாக்கியத்தை நோக்கி அறிக.

சாவு என்பது சாய்தல் என்னும் அடிச்சொல்லின் பொருள் வளர்ச்சி ஆகும்.

சின்`கோலிகள் விளைப்பது விய ஆதி ஆகிய வியாதிதான். வியாதியால் மரணம் ஏற்படுவதும் சாதாரண நிகழ்வுதான் .  சா- சாவை தார் ( தரு) தருகின்ற அண் - அடுத்த அம்: நிகழ்வுதான்.  அல்லது சாய்வு தரும் நிகழ்வுதான்.  நடந்தே தீர்வது.

இவைகளெல்லாம் எப்போதும் ஆவது என்று 

வேதம் உணர்ந்தார் வியக்காமல் உரைப்பினும்---  தம் மக்களுக்குச்

சாதம்  அளிக்கும் உயர்ந்த உழைபாளிகள் கவனம் கொள்வதே கருதத் தக்கது ஆகும்.