செவ்வாய், 26 மார்ச், 2019

முல் முன் மு அடிச்சொற்கள். கு என்பது சொல்லாக்கத்தில்.

இன்று முகமென்னும் சொல்லின் அமைப்பை அறிந்தின்புறுவோம்.

இந்த அடிச்சொற்களை மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்:


முல் > முன் >  மு.

இவை ஒவ்வொன்றிலிருந்தும் பல் சொற்கள் தோன்றியுள்ளன. சொல்லியலில் லகரத்தின் பிந்தியது 0னகரம் ஆகும்.  பின் 0னகரம் கெட்ட அல்லது மறைந்த நிலையில் மு என்ற எழுத்துமட்டும் நின்று ஒரு சிறு சொல்லாகிவிடுகிறது. இச்சொல் இப்போது தனியாக வழங்கவில்லை.  முழுச் சொற்களுடன் கலந்தே வரும். ஆனால் ஒரு காலத்தில் அது தனிச்சொல்லாக இருந்து அதன் தனிவழக்கை அல்லது புழக்கத்தை இழந்துவிட்டது என்பதை அறிக.இதன் விளக்கத்தை வேறொருகால் ஆய்வு செய்வோம்.

இப்போது முக்கு அல்லது முக்குதல் என்ற சொல்லைக் காணவும். இதன் பொருள் முன் கொணர்தல் என்பது;  அதுவும் உடலின்  உட்காற்றின்  மூலம் 
அழுத்தம் தந்து வெளிக்கொணர்தல் எனின் வரையறவு சரியாகவிருக்கும். இச்சொல்லில்

மு + கு என்ற இரண்டு உள்ளுறுப்புச் சொற்கள் உள்ளன.

மு:   முன் இருத்தல் என்னும் அடிப்படைக் கருத்து.
கு என்பது இன்றும் உருபாக உள்ளது.  அவனுக்கு எனின் அது வேற்றுமை உருபாக வருகிறது. இதுவே இச்சொல்லாக்கத்தில் வந்துள்ளது.

மு+ கு = முக்குதல் என்று வினைச்சொல் அமைகிறது.

கு என்பது சேர்விடம் மற்றும் சென்றடைவு குறிப்பதாகும்.

மு + கு =  மூக்கு என்ற சொல்லில் மு என்ற முன்மை குறிக்கும் சிறுசொல் முதனிலை திரிந்து  மூக்கு என்று அமைகின்றது.

மு + கு + அம் =  முகம் என்ற சொல்லில் முன் என்பது முன்பக்கத்தையும் குஎன்பது  இருப்பிடத்தையும்  அம் என்பது விகுதியாகவும் வந்து சொல்லமைவதைக் காணலாம்.

அம் என்பது விகுதி என்றோம். அது நீண்டு ஆம் என்றும் இறுதியில் விகுதியாகவே நிற்கும்.

இப்படி அமைவது தான் முகாம் என்ற சொல் ஆகும்.

மு+ கு + ஆம் =  முகாம் ஆகும்.

முகவை என்ற சொல்லில்  மு+ கு + வு + ஐ என்று  வந்து  இருவிகுதிகள் நிற்கின்றன.  இவ்விரண்டையும் ஒருவிகுதியாகக் கருதி  வை என்றும் சொல்லலாம்.  கொலை என்ற சொல் கொல் + ஐ என்று ஐ தனியாக நிற்றல் காணலாம்.

முகன் என்ற சொல்லில்  முகம் + அன் =  முக + அன் =  முகன் என்றாகி முகத்தை உடையோன் என்ற பொருள்தரும்.  எடுத்துக்காட்டு: ஆறுமுகன்.

முகி என்பது முகன் என்பதன் பெண்பாலாக வருதல் காணலாம்.

இன்னும் பல சொற்கள்  இப்பகுதியில் உள்ளன.  இன்று இத்துடன் நிறுத்துவோம்.  பின்னர் தொடர்வோம்.

நன்றி.

சனி, 23 மார்ச், 2019

தகர சகரத் திரிபுகள். இன்னொரு விளக்கம்.

தகர வருக்கம் ( அதாவது  த, தா தி.....தௌ  என  வருபவை)  சகர வருக்கமாகத்
திரியும் என்பதைப் பல முறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.  தமிழ்ச் சொல்லில் ஆர்வமுடையோர் இவற்றைச் சிக்கெனப் பிடித்து மனத்துள் இருத்திக் கொள்ளுதல் வேண்டும்.  மறக்காமலிருக்க அவ்வப்போது மீள் பார்வை செய்துகொள்ளுதல் கடனே.

இப்போது சில காண்போம்:

நீந்து >   நீஞ்சு     :  இதில் ந் என்பது ஞ் என்று திரிந்தது;  து >  சு ஆனது.

நீஞ்சு என்பது  பேச்சு வழக்கில் உலவும் வடிவம்.  திரிபுகள் எல்லாம் பேச்சு வழக்கில் வருபவை. சில ஒதுக்கமுடியாமையால் பண்டிதன்மாரால் ஏற்கப்பட்டு இலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சில ஏற்கப்பட்டு அவை திரிபு என்பது கூட மறக்கப்படலாயிற்று.

ஓர் எடுத்துக்காட்டு:

சிற்றம்பலம் >  சித்தம்பரம் >  சிதம்பரம்  ( றகர ஒற்றும் றகரமும் தகர ஒற்றாகவும் தகரமாகவும் திரிந்தன.)  ஒரு தகர ஒற்று ஒழிந்து இடைக்குறை ஆனது.  இவை எல்லாம் மறக்கப்பட்டு  சிதம்பரம் என்பது தனிச்சொல்லாய்த்
தவறுதலாகச் சிலரால் எண்ணப்பட்டது.  சிதம்பரம் என்பது ஒரு   திரிசொல். அத் திரிசொற்கு நேரான இயற்சொல்  சிற்றம்பலம்  என்பதே.    சிற்றப்பா என்பது சித்தப்பா என்றே வழக்கில் இருந்தாலும் சிதப்பா என்று இடைக்குறை ஆகவில்லை.

சிற்றம்பலம்தான் சிதம்பரம் ஆனது என்பதை மறந்துபோவது மொழிவளர்ச்சிக்கு நல்லதுதான்.  இப்படி பல்லாயிரக் கணக்கான சொற்களின் திரிபு மறக்கப்படுதலாலேதான் மொழியில் சொற்கள் பெருகி,  பொருளிலும் ஒலிப்பிலும் தடைகள் நீங்கி  வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  சிதம்பரம் போகும் ஒருவன் சிற்றம்பலத்திலிருந்துதான் சிதம்பரம் வந்தது என்று தெரிந்து  அவனுக்கு ஆகப்போவது யாதுமில்லை என்பதையும் கருதவேண்டும். நாம் மொழியறிதலுக்காகவும் புதிய சொற்களை எப்படிப் படைத்துக் கையாள்வது என்பது பற்றியும் திறன் பெறுதற்பொருட்டு  இங்கு இதைக் கூறுகிறோம்..

ற்று என்பது த்து என்று மாறுவது எத்தனையோ பாட்டிகள் காலத்துக்கு முன்னால் உள்ள வரலாறு.

ஒன்பது வரை அறிந்த தமிழன் அதற்கடுத்த பத்தை அறிய அவனுக்கு ஒரு சொல் தேவைப்பட்டது. ஒன்று ஒன்று ஒன்று என்று எண்ணி, ஒன்பது முடிந்து பத்துக்கு வந்துவிட்டான். பத்து என்பது பலவாகிய ஒரு பெரிய எண்.

பல் > பல்து > பற்று > பத்து.

ஒன்பதினும் பன்மை உடைய எண்ணிக்கை.

அல்லது:

பல் >  (கடைக்குறைந்து ) > ப + து > பத்து எனினும் அதுவே.

பல உள்ளுறைந்த ஓர் எண்ணிக்கையே பத்து.  ஓர் எண் ஆதலின்: து என்னும் ஒருமை விகுதி கொண்டு முடிந்தது.

ஆயிரத்துக்கு வந்த போது   ஆகப் பெரியது என்று தமிழன் மனத்துள் நினைத்தான்.    ஆ =  ஆகப்,   இரு = பெரியது;  அம் =   அதுவாம் என்று சொல்லை அமைத்தான்.   ஆ+ இரு+ அம் =  ஆயிரம்.  அவன் எண்ணப் பழகிக் கொண்ட இருட்காலத்தில்   ஒன்று  - அவனுக்குச் சரி;   அதனுடன் இன்னொன்று என்றால் ஆகா,  பெரிது என்று எண்ணி,  இரு = பெரிது என்ற சொல்லைப் பயன்படுத்தினான்.   ஆயிரம் என்றால் ஆகப் பெரிய அமைப்பாகிய எண்ணிக்கை என்று வியந்து சொல்லை அமைத்துக்கொண்டான்.

இவை எல்லாம் கருத்து வளர்ச்சியையும் திரிபையும் விளக்குகின்றன.

இப்போது தகர சகர உறவுக்குச் செல்வோம்.

மிகப் பழங்காலத்தில் 0னகர ஒற்று இறுதியான ஒரு சொல் பன்மையில் வரவேண்டுமென்றால் அதை மகர ஒற்றாக முடிக்கவேண்டும்.

தன் =(  ஒருமை.)
தம் = ( பன்மை)
என் =  ( ஒருமை )
எம் = (பன்மை ).

தன் + தன் =  தம்.    இது பின் சம் என்று திரிந்தது.

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் கூடுதல் குறிக்கும் சம் இந்தச் தம்மின் திரிபு அன்றி வேறில்லை.

ஆகவேதான் யாம் சொல்வது:  தம் சாரமே > சம்சாரம்.    ஒரு "தன்"னுடன் சேர்ந்து தம் ஆகிப் பின் சம் ஆகின கதைதான்.  சம் என்று கூட்டல் குறிப்பதும் தன் + தன் = தம் > சம்.  ஆகவே தகர சகர உறவு புரிகிறதா?

இன்னும் :

பாய்ந்து > பாஞ்சு
ஓய்ந்து > ஓஞ்சு

என்று பல உள.  இவை மொழி கடைத் திரிபுகள்.  மொழி முதலிலும் இடையிலும் கடையிலும் இத்திரிபு வரும்.  இங்கு மொழி என்றது சொல் என்று பொருள்படும்.  வேறிடங்களில் அது பேசு> பேசை  > பாசை > பாஷை  என்றுமாகும்.  இது ஏகார ஆகாரத் திரிபு என்று வேறு ஆசிரியர்களும் விளக்கியுள்ளனர். இங்கு மொழி - பாஷை என்று அர்த்தமில்லை.  பாடை எனினும் அதே. ஆனால் பாடை என்பதற்குப் பிணப் பாடை என்று இன்னொரு பொருளும் உண்டு.

"தேவ பாடையின் இக்கதை செய்தவர்"  ( கம்பன் செய்யுள்).

சந்திப்போம்.

வெள்ளி, 22 மார்ச், 2019

இடுகைகள் சேமிப்பு - பதிவிறக்கம்.

கூகிள் + என்பதில் உள்ள நம் இடுகைகள் அனைத்தையும் வேறிடத்திற்கு
மாற்றவேண்டியுள்ள படியால் இந்த மாத இறுதியில் வேலையதிகமாய் இருக்கும். இயன்றவரை நம் நேயர்களையும் வலைப்பூவின் மூலம் சந்திக்க முயற்சி செய்வோம். இயல்வில்லை என்றால் மன்னிக்க வேண்டும்.

சிவமாலா வலைப்பூவகம் வழக்கம்போல் நேயர்களுக்குக்  கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.