செவ்வாய், 4 டிசம்பர், 2018

யோனி என்னும் சொல்.

உடலுறுப்புகளில் எவையும் தாழ்வு என்று ஒதுக்கிவிடுதல் இயலாது.  எல்லாவற்றுக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் மொழியில் பெயருள்ளது. மருத்துவ அறிவியலில் இன்னும் ஆழ்ந்த நிலையில் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.  அவற்றுக்கு வரும் நோய்களுக்கும்  ஆங்கிலத்தில் பெயர்கள் உள்ளன. தமிழ் வைத்தியத்தில் நமக்குக் கிடைத்த நூல்கள் சிலவே. இருப்பினும் மருத்துவப் பெயர்கள் உள்ளன.  கோரோசனை என்ற பெயர்கூட உள்ளது. அது ஈரலில் மாடுகட்கு ஏற்படும் கல்லைக் குறிக்கின்றது. இதுபோலும் பெயர்களைத் தொகுத்தளிக்கும் அகரவரிசைகள் இருந்தன. யாம் அண்மையில் இவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

பெண்ணுறுப்பைக் குறிக்கும் பெயர் யோனி என்பது. உலகமே உயிர்களைப் பிறப்பித்தது.  இவ் வண்டத்திற்கு அண்டயோனி என்ற பெயரும் உள்ளது.

ஒன்று என்பது பேச்சு வழக்கில் ஒண்ணு என்றும் ஒன்னு என்றும் வழங்கும். ஒன்றுதல் என்பது வினைச்சொல். ஒன்று என்ற ஏவல் வினையும் ஒன்னு என்றே இருந்துள்ளது.

இருவேறு பகுதிகள் போல் தோன்றி ஒன்றுபடுதலே ஒன்னு(தல்.)

இது பேச்சு வழக்குச் சொல்.

இது முதனிலை திரிந்த தொழிற்பெயராகும்.  எடுத்துக்காட்டு:  படு .> பாடு. முதலெழுத்து நீண்டதாகிய திரிபு.

ஒன்னு > ஓனு  :  இது இடைக்குறையும் முதலெழுத்து நீண்டதும் ஆகும்.

ஓனு+ இ=  ஓனி.

 > ஓனி. >  யோனி.

அகர வரிசைச் சொற்கள் சில யகர வரிசைச் சொற்களாக மாறும்.  எடுத்துக்காட்டு:  ஆனை > யானை.

இதுபோலத் திரிந்ததே மேற்கண்ட சொல்லும்.

இதன் சொல்லமைப்புப் பொருள்:  இருபகுதிகளாய் ஒன்றுபடும் உறுப்பு என்பதாம்.  இது பிறப்பு உறுப்பு ஆதலால் இதுவே ஆதிப் பொருள். பின் அண்டயோனி முதலிய சொற்கள் அதிலிருந்து அமைப்புற்றவை.

ஓனி என்ற முந்துவடிவம் வழக்கிறந்தது.

ஒன்+ து =  ஒன்று.
ஒன்+ உ=  ஒன்னு.     ஒன் என்பதே அடிச்சொல். து என்பதும் உ என்பதும் விகுதிகள்  ஆம்.

ஒன் > ஓன் > ஓனி என்றும் விளக்கலாம். இதுவும் மறுபக்க விளக்கம் ஆம்.

உலகத்து உயிர்கள் அனைத்தையும் பிறப்பித்தலால் இது பணிதற்குரிய இடத்தைப் பெற்று வழிபடு குறிப்பு ஆயிற்று, இந்துப் பற்று நெறியில்.

இவ்வுறுப்பு குறித்து எழுந்த சொற்களில் ஒன்றில் ஒன்றுபாடு கருத்தானது; இன்னொன்றில் பிளவுறல் கருத்தானது.  இவ்வாறு மையப் பொருண்மையில் வேறுபாடுகள் உள.  கூ என்ற எழுத்தில் தொடங்கும் இன்னொரு சொல் கூடுதல் ( ஒன்றுபாடு) என்னும் மையக் கருத்தினதே ஆம். இதில் டு என்பது வினையாக்க விகுதி.  மூடு என்பதில் போல. பா> பாடு என்பதில் போல.

கூடு> கூடு+ பு + அம் >  குடும்பம்.  இது முதனிலைக் குறுக்கம்.  தோண்டு> தொண்டை என்பதுபோல.  சா> சவம் எனலும் ஆம்.

கூடு : கூடுதல்.  சேர்தல்.  கூடு என்பது குடு என்று குறுக்கம் பெற்ற காலை பு விகுதி வரின் குடுப்பு குடும்பு என்று இருவகையாகவும் வரும். இவற்றுள் சொல்லாக்கத்திற்கு  குடும்பு என்ற மென்றகவே ஏற்புடைத்தானது. மகர ஒற்று புணரியலில் அல்லது சந்தியில் தோன்றியது. அம் எனல் இறுதி விகுதியாயிற்று.  இச்சொல் குடும்பி என்று மாறுங்கால் இகரம் வர அம் என்னும் விகுதி களைவுறுதல் காண்க.  குடுப்பு எனல் வலித்தல். குடும்பு எனல் மெலித்தல். குடுகுடுப்பை என்ற சொல்லில் வலித்தலே மேற்கொள்ளப்படுவதாயிற்று. சொல்லமைப்பில் எப்படி வந்தால் இன்னோசை தழுவும் என்பதும் எடுத்துக்கொள்ளப்படுவதே.

தமிழின் குகைக்கால அமைப்புக்குள் சென்று ஆராய்ந்தால் ஓரெழுத்து ஒரு சொற்களாய்ச் சீன மொழிபோல் தோன்றும்.  தீர ஆய்ந்தாலே தெரிவன இவை.









திங்கள், 3 டிசம்பர், 2018

குழந்தைகட்கு கடவுட்பெயர் வைக்கக்கூடாதென்றவர் கதை

எமக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்,

கடவுளாவது  கத்திரிக்1    காயாவது என்று சொல்லுவார்.

இவர் திருமணம் செய்து ஐந்து குழந்தகள் பிறந்தனர்.  எல்லாம் ஆண்கள்.  பெயர் வைக்கும்போது கடவுள் பெயரோ அல்லது பத்திமான்`கள் பெயரோ வைக்கக்கூடாது என்று கவனமாக இருந்தார்.  நாத்திகத்தில் பெயர் விளங்கிய பெரியோர்களின் பெயர்களையே வைத்தார்.  இதன்மூலம் இவர் பையன்`கள் பத்திமான்-கள் ஆகிவிடாதபடி பார்த்துக்கொண்டார்.

பையன்`கள் வளர்ந்து பரம பத்தர்களாகிவிட்டனர்.  ஒருவன் முருக பத்தன். இன்னொருவன் சிவபத்தன்.  மூன்றாமவன் விட்ணு (கண்ணன்) பத்தன்.  நான் காவது நபர் அடிக்கடி காவடி தூக்கிக்கொண்டு பல கோயில் வைபவங்களில் கலந்துகொள்வான்.  ஐந்தாவது பையன் கைலாசம், கெடார்நாத் ஆலயம் எங்கும் அடிக்கடி போகத் தொடங்கிவிட்டான்.

எல்லாம் இப்படி ஆகிவிட்டார்களே என்று அவருக்குப் பெருங்கவலை.

அண்மையில்தான் காலமானார்.

படிப்பில் பையன் கள் அனைவரும் நன்றாகவே செய்து நல்ல வேலைகளில் அமர்ந்தனர்,




நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்............?

அடிக்குறிப்பு:

கத்தரிக்காய் என்று எழுதப்பெறும்.
அரி என்பது சில நிறங்களைக் குறிக்கும்.  பொதுப்பெயராய் நிறம் என்றும் பொருள்தரும்.  கொஞ்சம் கருவலாக இருப்பதே பெரும்பான்மை.  கருத்த அரி > கருத்தரி > கத்தரி என்று அமைந்தது.  சறுக்கரம் என்ற சொல் சக்கரம் என்று வந்தது காண்க.  இவைபோல்வன இடைக்குறை.



ari  1. green; 2. yellow, brown, tawny, fawn colour;   3   colour;


ஐயப்பன் முன் குழந்தை பேசிய விந்தை,

ஐயப்பசாமிக்கு அன்னதானப் பிரபு என்றொரு புகழ் நிலவுகிறது.  சபரிமலை செல்வோரும் செல்லுமுன் வீட்டில் பூசைகள் செய்து  மற்ற சாமிமாருக்குச் சோற்றுணவு பல குழம்புவகைகளுடனும் பச்சடிகளுடனும் வழங்கவேண்டும்.  இது தானம் ஆகும்.  இச்சொல் தா என்பதனடியாகப் பிறப்பது.

தா என்பது ஒத்தோருக்கு வழங்குதல். ஈகை என்பது இல்லார்க்கு வழங்குதல். மற்ற சாமிமார்கள் பற்றர்கள் ஆதலின் தானம் என்பது அவர்களுக்குப் பொருத்தமான சொல்.  ஒரு சாமி தம்மோடு ஒத்தவர்க்கு அன்னதானம் வழங்குகிறார்.  இது போற்றத் தக்கது ஆகும். தா என்ற தமிழ்ச்சொல்லுக் ஏற்ப அமைந்துள்ளது இந்நிகழ்வு.

தா +  இன் + அம் =   தா + (இ)ன் +அம் =  தானம்.  கைம்மாறு கருதாமல் தரப்படுவது தானமாகும்.   இன் என்ற  சொல்லாக்க இடைநிலை    " ன் " என்று குறுகிற்று.  தா என்பதும் "டோ" என்று இலத்தீன் வரை சென்று ஐரோப்பியக் கண்டமுழுதும் பரவிய பெருமைக்குரிய சொல். தமிழிலிருந்து வந்தமையை மறைக்க, மானத்தின் பொருட்டு, உலகப் பொதுமொழியினது இச்சொல் என்று மறைப்புரை பகர்வார் ஐரோப்பிய ஆய்வாளர்.  முன் தோன்றி மூத்த குடி தமிழ்க்குடி. தா என்ற சொல் நமக்குப் பெருமிதம் தருகிறது.  உரோமப் பேரரசு ஏற்பட்டபின் அதற்கு ஒரு பொதுமொழி வேண்டப்படவே,  தமிழ் முதலிய மொழிகளிலிருந்தும் சொற்கள் பெறப்பட்டன.   அணுகுண்டு செய்யவேண்டுமென்றால் யூரேனியம் என்னும் பொருளை அயல்நாட்டிலிருந்துமே பெற்றுக்கொள்வதில் தடை யாது?

ஐயப்பன் அன்னதானப் பிரபு ஆகிறார்.  பிரபு எனின் பெருமான்.  பெரு+பு = பெருபு > பிரபு. பெருபு என்ற மூலவடிவம் ஒழிந்தது.

ஊமைக்குழந்தை பேசிப் பாடிய விந்தை:

ஐயப்பன் அருள்தரும் ஆண்டுகொண்ட தெய்வம் என்பதற்கு இப்போது ஒரு புதிய ஆதாரம் கிட்டியுள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.  ஒரு நாலு வயதுக் குழந்தை  ஊமையாய் இருந்து பெற்றோருக்கும் மற்றோருக்கும் கவலையளித்துக்கொண்டிருக்க, அதனைப் பெற்றோர் சபரிக்குத் தூக்கிச் சென்றனராம்.   ஆலயத்துள் நுழையும்போது அங்கு பாடிக்கொண்டிருந்த இசையைக் கேட்ட குழந்தை,  தன் வாய்ப்பூட்டுக் கழன்றதாய், மழலை மொழியில் ஐயப்பசாமியைப் பாடத் தொடங்கிவிட்டதாம். இப்போது பிற குழந்தைகள் போல  நன்றாகப் பேசுகிறதாம்.  இப்படி ஒரு விந்தையும் நடந்துள்ளதாக பற்றர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஐயப்பசாமி யாவருக்கும் அருள்வழங்க வேண்டிக்கொள்கிறோம்.

விஷ்ணு என்னும் விண்ணர்பெருமான், கருமை நிறத்தவர்.  அறிவியலார் கூறும் கார்த்துளை ( பிளாக் ஹோல் )   கருமையானதே.  இதுவே விண்ணர்பெருமானின் உறைவிடமாகவும் இருக்கலாம்.  நம்முள் வைகும் உயிர்க்கு ஆதாரமாய் அதை எப்படிப் பிரித்துக் காட்ட முடியாமல் திணறுகிறோம்.  அதைப்போலவே இறைமையையும் தனித்தெடுத்து இதுதான் இறை என்று மெய்ப்பிக்க இயலாது.  நம்பினால் அதனால் நாம் இழப்பது ஒன்றுமில்லை.

ஐயப்பன் என்பதற்கு நற்பொருள் பல கூறுதல் இயலுமென்றாலும்,   ஐந்து தெய்வங்களும் தன்னுள் கொண்ட பெருமான் ஐயப்பன் என்று பற்றர் சிலர் சொல்வதும் நாமறிவோம்.   பிரம்மன் ( பெருமான் அல்லது பெருமன் ,)  சிவன், விட்ணு , கந்தன், பிள்ளையார்   ஆகிய ஐவரும் அடங்கியவரே ஐயப்பன் என்பர்.
எத்தெய்வம் வேண்டினும் அத்தெய்வமாய்த் தான் தோன்றுகிற வல்லமைத் தெய்வம் ஐயப்பன் என்பர்.

திருத்தம் பின்.

அடிக்குறிப்பு:

வியந்து (  வினையெச்சம் ) :  வியந்தை >  விந்தை ( இடைக்குறை, யகரம் மறைவு). இதை வேறு விதமாகவும் காட்டுதல் கூடும்,



எடுத்துக்காட்டு:

ஆண்ட + அவன் ( பெயரெச்சம் )  :  ஆண்டவன்.  ஓர் அகரம் மறைவு,)  இது சொற்புணர்ச்சி காரணமான எழுத்துக்கெடுதல் ).

மந்தை என்ற சொல் தோன்றியவிதம் ?