ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

மேதினத்தை நெஞ்சினுள்ளில் மேனிலையில் வைக்க!

மேதினத்தை  நெஞ்சினுள்ளில் மேனிலையில் வைக்க!
மென்மையோடி யைபிலாத மிகையுழைப்பு மேவி,
சோதனையில் சோர்ந்திழிந்த காலந்தன்னை மாற்றிச்
சூழுநன்மை  தொழிலாளர் ஆழ்ந்தடைந்த  நாளே
யாதுநீவிர் செய்தபோதும் யாண்டும்யாண்டும் நன்றி
என்றுசொல்வீர் ஏதெனினும்  அவர்க்குநன்மை செய்வீர்.
போதுமென்ற  பொன்மனத்தைp பூதலத்தார் கற்கப்
போகவேண்டும் அவர்களாலே புசித்துவாழ்கி றோமே.



பனம்பாரனார்

இவர் தம் இயற்பெயர் அறிகிலேம்

இந்தப் பெயரே மிக்க அழகான பெயர்.  அதாவது பனை மரங்கள் மிகுந்த பரந்த நிலப்பகுதியினின்றும் போந்தவர் என்று பொருள்படுகின்றது. காரணப்பெயர்,
இவர் தொல்காப்பிய நூலுக்கு ஒரு பாயிரம் தந்துள்ளார்.  பாயிரம் எனின் முன்னுரைபோல் தரப்படும் ஒரு பாடல். தொல்காப்பியத்துக்கு நாம் போய் அப்படி ஒரு பாடலை எழுதமுடியாது, தொல்காப்பியரை அறிந்த இன்னொரு புலவர் ,  அவருடன் படித்த இன்னொரு புலவர்தான் அதைச் செய்யக்கூடும். யார்யார் பாயிரம் தரலாம் என்பதற்கு இலக்கணம் இருக்கின்றது,

பர > பரத்தல்.  விரிவாதல்.
பரம் : கடவுள்,  எங்கும் பரந்திருப்பவன்,
பரம்பொருள் :  கடவுள்>
பரம்>  பரன்.

சிற >  சீர் என்று முதனிலை நீண்டு பெயராகும்.  ரகர றகர வேறுபாடு
இங்கு தள்ளுபடி,

பனை பழம் : பனம்பழம் போல பனை பார் =  பனம்பார் ஆனது,
அன் விகுதி சேர்ப்பின் பனம்பாரன்1   ஆகும்,

1. Error rectified.   Reason for error unknown.  Original draft did not have this error.


சனி, 29 ஏப்ரல், 2017

கரப்பான்பூச்சி

கரப்பான்பூச்சிகளையும் கடவுள்தான் படைத்தார்.  ஆனால் ஏன் படைத்தார் என்று புரியவில்லை. வீடுகட்குள்  வந்தேறி பலவிதப் பொருள்கேடுகளையும் விளவிக்கின்றன. இவற்றை அவர் படைக்காமல்
இருந்திருந்தாலும் ஒன்றும் மோசமில்லை என்கிறார்கள்.

இரு பெண்கள், அவர்களில் ஒருவர் ஒரு பிள்ளையைத் தூக்கிக்கொண்டு
மருத்துவரின் கடைக்குச் சென்றுகொண்டிருந்தனர். பிள்ளை அழுது கத்திக்கொண்டிருந்ததால், அதை எப்படி அமைதியாக்குவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சட்டென்று ஓர்  ஓரப் பொந்திலிருந்து
ஒரு கரப்பான்பூச்சி அங்கு வந்துவிட்டது. அந்தப் பெண்களில் ஒருவர், உடனே: " பார், கரப்பான் பூச்சி வந்துவிட்டது, நீ இன்னும் கத்தினால்
வந்து கடிக்கும்" என்றார். உடனே பிள்ளை அடங்கிவிட்டது. இதைக்
கவனித்துக்கொண்டிருந்த யான், " கடவுள் ஏன் கரப்பான் பூச்சியைப்
படைத்தார்  என்று இப்போது புரிந்துவிட்டது"  என்று அருகிலிருந்த‌
தோழியிடம் சொன்னேன். இதுதான் காரணமாக இருந்தாலும் இருக்கலாம்.

நிற்க, கரத்தல் என்றால் ஒளித்தல். கரப்பு என்பது ஒளிந்திருத்தல்
என்று பொருள்தரும். இந்தப் பூச்சிகள் பெரும்பாலும் ஒளிந்துகொண்டு
இருளில் வாழ்பவை. இரையை, நீங்கள் உறங்கச்சென்றபின் வெளிவந்து அலைந்து  தேடும். ஆனுதல் என்பது நீங்குதல்
என்று பொருள்தரும். கரப்பு = ஒளிந்திருந்து, ஆன் = நீங்கிவரும், பூச்சி =~  என்பது பொருத்தமாக உள்ளது.

கரப்பான் என்று ஒரு தோல்நோய் வகையும் உள்ளது; ஆனால் இப்பூச்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

வேண்டாதவற்றைத் தின்று அப்புறப்படுத்த இவற்றைப் படைத்தான்போலும்.  ஆனால் வேண்டியவற்றையும் இவை கெடுத்துவிடுகின்றன.