வெள்ளி, 4 மார்ச், 2016

இடையில் நின்ற அதுவும் இதுவும்

சொற்கள் பலவற்றைப்  பிரித்து  ஆய்வு செய்வோர் பிரிக்கப் பட்ட துண்டுகளுக்கு இடையில்  அது  இது   என்பன  நிற்றலைக் காண்பர்.
எடுத்துக்காட்டாக  பருவதம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

பருத்தல் என்பது தமிழ் .  உள்ளது பரிது ( பெரிது ) ஆவதைக் குறிக்கிறது இந்தச் சொல்.  சிறு சிறு மேடுகளையும் குன்றுகளையும் பார்த்துப் பழக்கப்பட்ட ஒருவன்  ஒரு பெரிய மலையைக் கண்டவிடத்து  வியக்கிறான்;  பெருத்தது, பருத்தது என்று அவன் அதை வருணிக்கிறான். இப்படி அமைந்ததே பருவதம் என்ற சொல்.

பரு +  அது + அம் =  பருவதம்.

இதில் அது என்னும் சுட்டு இடையில் நின்று சொல்லமைப்புக்குத்  துணை புரிந்தது.  மலை என்ற சொல்லும் கண்டு வியத்தல் என்னும்  மலைவு என்பதனோடு தொடர்புடைய கருத்தே ஆதலின் இவற்றின் கருத்தொருமை நன்கு புலப்படுவதாகும்.

இடையில் நின்று சொல் அமைப்புக்குத் துணைசெய்வனவற்றை இடை நிலை என்றனர் இலக்கணியர் .  ஆனால் வினைமுற்றுக்களை ஆய்வு செய்த காலையே அவர்கள்  அங்ஙனம் கூறினர் .  வினைமுற்று அல்லாத பெயர்களிலும் இது காணப்படுகின்றமையின்  தமிழில் வினைமுற்றுக்கள் அமைந்த விதத்தினைப் பின்பற்றியே  பருவதம் முதலிய சொற்கள் பிற்காலத்துப் புனைவுற்றன என்று முடித்தல் பொருத்தமே.

இடையில் அது என்னும் இடைநிலை  நிற்றல் தேவை ஆயிற்று.   இன்றேல்  பரு+ அம்  =  பரம் என வந்து  பர+ அம் =  பரம் என  உருக்கொண்டு இறைவனைக் குறிக்கும் சொல்லுடன்   மலைவு  (குழப்பம் )   நேர்தல் காண்க.


தெய்வதம் என்ற சொல் இப்படியே புனைவு பெற்றது என்பது தெளிவு.

தெய்வம் + அது + அம் =  தெய்வ + அது + அம்  = தெய்வ +  து + அம் >   தெய்வ + த் + அம் >   தெய்வதம்.

இரண்டு அகரங்கள் வரின் ஓர் அகரம் வெட்டுப்படும். அது நிலைச்சொற்பாகத்தினது ஆயினும்  வருஞ்சொற்பாகத்தினதாயினும்  முடிபு வேறுபடுதல் இல்லை.

இடை நிலை இறுதி உகரமே மறையு,ம்,  இறுதி விகுதி அகரத் தொடக்கத்தினதாயின்

அப்தெய்வத என்ற சங்கதச் சொல்லில்   அது என்பது நின்று அம் என்பது  வாலிழந்த நிலையில் முற்றுப்பெற்றமை காண்க.   அப்தெய்வத எனின் நீரைத் தெய்வமாய்க் கும்பிடும் கொள்கையர் என்பதாம்.  இவர்களை வேறுபடுத்திக் காண ஒரு சொல் தேவைப் பட்டதுபோலும். அக்கினியை வணங்குதலினின்று  வேறுபாடு இதனால் அறியப்பட்டது. இக்காலத்து இரண்டும் இணைப்புற்றமை காணலாகும்.

பெரிது  சிறிது என்பவற்றில்  இகரம் வந்தமை காண்க.  வேறு சொற்களில்  " இது"   இடைநிலை  வந்தது பின் ஓர் இடுகையில் காண்போம்.

"  அது" இடை நிலையை  விரியப் பயன்படுத்திச்  சமஸ்கிருதமும் பெருவெற்றி அடைந்தது --  சொல்லமைப்புக் கலையில்.






சிவனுக்கு ஒரே ராத்திரி - நம் கடமை

சிவனில்லா இராத்திரிதான் எங்கே தம்பி -----அந்தச்
சிவனின்றிப்   பகலில்லை இரவுமில்லை
அவனில்லா உலகில்லை என்னும்காலை ----- பகல்
அவற்கில்லை  இரவொன்றே என்னலாமோ

அனைத்தினையும் விட்டு  நாமும் அவன்நினைந்து ----உள்ளம்
அவனிற்போய் மூழ்கிவிட  இரவும் ஒன்றே !
நினைத்தபடி வீண்பேச்சு பயன்இல் காலம் ----- வேண்டா
நேரியதோர் பண்பாட்டின் இராத்திரியாமே! 

புதன், 2 மார்ச், 2016

அபத்தம்

அபத்தம்

எதிரிகட்குப் பற்றலர் என்றும் கூறுவதுண்டு.  எவ்வாற்றானும் பொருந்திவராதவர்களுக்கு அந்தச் சொல் மிக்கப் பொருத்தமுடையதே. பானையில் உள்ளது பத்தாது ‍  அரிசி கிளைந்து வைக்கவேண்டும் என்று பேசுவர். பற்றாது என்பதே பத்தாது என்று பேச்சில் மாற்றம் பெற்று வரும். என்ன நடந்தது என்பதை எந்து பற்றி என்பர் மலையாள மொழியில்! எதைப் பற்றிப் பேச்சு நடக்கிறது என்று கேட்பதுண்டு.

பற்று என்ற சொல் பற்றி என்றாகிப் பின் பத்தி என்றாகி இறுதியில் பக்தி என்று விளைந்தது. "பத்தி செய்து பனுவலால் வைத்ததென்ன வாரமே!"  என்ற தாயுமானவரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
தேவாரத்தில் "பத்தி" என்றே வரும்.  ஆனால் பக்தியைத்தான் பத்தி என்று பாடியுள்ளனர் என்று தமிழாசிரியன்மார் சொல்லிக்கொடுப்பர்.
ஆனால் பற்று > பற்றி > பத்தி பின் பக்தி என்பது இப்போது மிக்கத் தெளிவு பெற்றுள்ளது.  முத்தி  முக்தி ஆனாற்போல்.  முது >  முத்து > முத்தி > முக்தி;  முற்று > முத்து > முத்தி .

எமது எழுத்து அதைப்பற்றி அன்று.   அபத்தம் என்பது பற்றியே.

பற்றுதல் என்பது பொருத்துதல் என்றும் பொருள்தரும்.  இரும்புத் துண்டுகளைப் பற்றவைத்தல்  என்பதுண்டு,  அதாவது தீயினால் உருக்கிப் பொருத்துதல்  என்பதே இது.

அபத்தம் என்பது பொருந்தாதது.   பற்று >  பத்து > பத்தம்   அல்  >  அ .  அல்லாதது.   அ + பத்தம்  = அபத்தம்.

இதன் மூலமும் தமிழ் தான்.  இந்தோ ஐரோப்பியம் அன்று,