ஞாயிறு, 6 மார்ச், 2011

இங்கிதம்.

இங்கிதம்.

இவ்விடத்து இது பொருத்தம், இது பொருத்தமில்லை, அல்ல-
து இது அழகு, இது அழகன்று என்று அறிந்து செயல்படுதலே
"இங்கிதம்" என்று சொல்லப்படும்.

இங்கு+ இது + அம். = இங்கிதம்.

அம் = அழகு.

"அம்" எனில் "அழகு" என்று பொருளென்பது மேலே விளக்கப்பட்டது.

அழகென்பது வெளியழகை மட்டும் குறிப்பதன்று.

"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு" என்பதில் அழகு - உடலழகு
தரவல்லது என்பது மட்டுமன்று, உடல் நலமும் தரவல்லது என்பது
பெறப்படும்.

அழகு என்று கூறப்படும்போதும், அது பொருத்தம் என்ற
பொருளும் தருமென்பது காண்க. (This will depend on context)

வழக்கு, செய்யுள் some basic principles

எந்த ஆய்வுக்கும் வழக்கு, செய்யுள் ஆகியவற்றை நுண்மா-
ண் நுழைபுலம் கொண்டு நாடுதல் வேண்டும்.

வழக்கு = மக்களிடையே வழங்குவது. (புலவர் வழக்குத்தான் வழக்கு என்று சிலர் வாதிடுவர். அவர்கள் கிடக்கட்டும்).
செய்யுள் = இலக்கியத்தில் காணப்பெறுவது. " வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்" எனப்பெறும்.

செந்தமிழ் (திருந்திய தமிழ்) வழங்கும் நிலப்பகுதிகளிலிருந்து இவை நாடப்பெறுதல் வேண்டும். நாம், மக்களிடை வழங்குவது மக்கள் வழக்கு என்றும் செய்யுளில் வருவது செய்யுள் வழக்கு என்றும் இருகூறாக்கி உணர்ந்து கொள்ளல் நலமாகும்.

பனம்பாரனார் பாடல் இதை இப்படி விவரிக்கிறது (=விரித்து
வரிகளாக்குகிறது).


தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
(தொல். பாயிரம்.)


இதனையும் கருத்தில் கொள்க:-

தொல். சொல்லதிகாரம். 67

செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல்.



காரணப் பெயர்கள் சில.

இடுகுறிப் பெயர்கள் சில.

காரண இடுகுறிகள் சில.

ஒரு காலத்தில் காரணப் பெயர்களாயிருந்து பின் இடுகுறிகளாய் ஆகிவிட்டனவும் பிறவும் கொள்க. பழங்காலத்திலேயே தமிழிலக்கணமுடையார், இவற்றைக் கூர்ந்துணர்ந்து விளக்கியுள்ளனர்.



குறிப்பீட்டுத் தடுமாற்றம் அல்லது குறிப்பீட்டு ஊசலாட்டமே மொழியின் இயற்கையாகக் காணக்கிடக்கிறது.

-- மேல்நாட்டு மொழியியல் ஆய்வாளர்கள்


பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே.

(தொல். 874).

பொருளைத் தீர்மானிக்கவியலாத தன்மையே மொழியின் அடிப்படைப் பண்பு. (Derrida, French Philos0pher on linguistics )

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கொங்கலர்தேர் தேனீ

கொங்கலர்தேர் தேனீ



முன்னிருப்ப தொருநச்சுச் செடியாம்
முனைந்துவரும் தேனீயும் அறிந்தே
எண்ணரிய நறுமணமே பரப்பும்
எழில்மலரைத் தான் நாடி அமரும்!

அஞ்சிறையின் கொங்கலர்தேர் தேனீ
அதுதன்னை ஏமாற்றும் வித்தை
தன் சிறைக்குள் தான்கிடக்கும் மாந்தன்
தாரணியில் கண்டறிந்த துண்டோ?





சிறை = சிறகு; அஞ்சிறை = அழகிய சிறகு.( The other meaning is "prison": "தன் சிறைக்குள் " )
கொங்கு= தேன்.
அலர் = மலர்.
தேர் = தேடிக் கண்டறியும்.
நச்சு = விடம்(விஷம்)