வெள்ளி, 5 ஜூலை, 2024

சேமித்து அறம் செய்க.

 சோலை புரைஅழகில்  ---- விடுதியில்

சுந்தர மலர்பொருத்தி,

மாலை   நிலாவிளக்கம் ---- கூட்ட

மருவு  கவின்தனைப்பார்.


மந்த ஒளியினிலே ---மாந்தும்

மக்க   ளுடனமர்ந்தாய் 

வந்த உணவருந்தின் ---கண்டாய்

வான்பெறு ஆனந்தமே.


உண்டு முடிக்காமலே --- எதுவும்

ஒழித்திடு முன்நினைப்பாய்

இன்றிவ் வுலகினிலே ---உணவும்

இல்லார் பசித்திருப்பார்.


மீதப் பொருள்களிலே -  சேர்த்து

மேல்வரும் சேமிப்பினை 

யாதும் இலார்க்களிப்பாய் ----அறமே

யாண்டும் துணையுனதே.


பொருள்: 

புரை - போன்ற

சுந்தர -  அழகிய

ஒழித்திடு  -  வீசிடும் 

வான்பெறு - மிக உயர்ந்த

ஆனந்தம்-  ஆக நன்று ஆன மகிழ்வு,

(ஆ + நன் து அம்)

யாண்டும் - எப்போதும்

மாந்தும் -  உண்ணும் அல்லது  நீர் அருந்தும்

இலார் -  இல்லாதவர்


வியாழன், 4 ஜூலை, 2024

சணல் கயிறு - சொல்லாக்கம்

சணல் என்பது ஒரு செடிநார்  ஆகும். இச்சொல் அமைதல்:

அண்>  சண் > சணல் .

ஒவ்வொரு நாரும் ஒன்றினோடு மற்றொன்று அணுக்கமாக வைத்தே கயிறு திரிக்கப்படுகிறது. ஆதலின் அணுக்கக் கருத்தைக் குறிக்கும் "அண்" என்ற அடிச்சொல்லிலிருந்து சணல் என்ற சொல் தோன்றியது மிக்க இயல்பினது ஆகும். மற்றும் அண் சண் என்ற மாற்றமும் பொருத்தமாய்  உள்ளது. இச்சொல்லை அண்> சண் > சண்ணல் என்று காட்டி, பின் ண் என்ற ஒற்றினை நீக்கி இறுதி வடிவத்தைக் காட்டுதல் ஒக்கும்.  மணல் என்ற சொல்லுருவினுடன் சணல் உருவொருப்பாடு உள்ளதாதலால் எதுகையாய் நிற்றற்கும் ஏற்றசொல்லுமாகும்.

பலவகைச் செடிகளிலிருந்தும் நார் எடுக்கப்பட்டுக் கயிற்றுக்கு ஆகிறது என்பதை அறிவோம்.

சணல் சில வலைகளிலும் பயன்படுகிறது. சணலின் வலிமையே காரணம் 

சணலுக்கு ஏற்ற சொல் வடிவங்கள்:  சணம். சணம்பு, சணப்பை, சணப்பு, சணப்பநார் என்பவை.  சடம்பு  என்ற சொல்லும் உள்ளது.  அடு> சடு> சடம்பு என்று ஆவது இச்சொல்லாகும். அணுக்கம் என்பதும் அடுத்தல் என்பதும் ஒரு பொருளனவாய் அடிச்சொல் ஆதற்கு ஏற்றவை ஆகும்.

சணல் முதலியவை தமிழ்ச்சொற்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்
 

செவ்வாய், 2 ஜூலை, 2024

பாத்திரம் என்றது

பால்  என்பது பகுதி குறிக்கும் சொல். திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளன. அவை  அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்.

அத்து என்பது ஒரு சாரியை,  சாரியை என்றால் என்ன?  சார்+ இயை.  ஒரு சொல்லைச் சார்ந்தும் அதனோடு இயைந்தும் வருவது சாரியை. ஒலியழகு தந்து சொல்லை அழகுபடுத்த வருவது சாரியை. ஆற்றங்கரை என்பது இடையில் அம் வருகிறது, இது சொல்லை அழகுபடுத்தி இனிமை தருகிறது. விலவங்கோடு, தலைச்சங்காடு, தலைச்சம்பிள்ளை.   இவற்றில் அம் அழகுதருகிறது. 

அவளுக்கு இந்தப் பேறுதான் தலைச்சன்.  என்றால் தலை (முதலாவது) பிள்ளை. தலையன் எனல் கூடாது   தலையன் எனில் தலையை உடையவன் என்று பொருள். பெருந்தலையன்:  அதாவது தலை பெரிதாகப் பிறந்தவன். சீழ்த்தலையன் என்றால் தலையில் சீழ் வடிகிறவன். 

சீழ்குதல் என்றால்  கண்ணீர் வடித்தல். சீழ்கி அழுதுகொண்டிருக்கிறான் என்றால் கண்ணீர் வடித்து அழுதுகொண்டிருக்கிறான் என்பது. இந்த வினைச்சொல்லை இப்போது எந்தப் புதினத்திலும் ( நாவலிலும்) காண இயலாது. தமிழில் உள்ள வினைகளை ( வினைச்சொற்களை)ப் பயன்படுத்தாமல், அறிந்து புழங்காமல் இருந்துகொண்டு, தமிழை வளர்த்துவிட முடியாது.  கூட்டம் கூடிப் பேசினாலும் பேசும்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதுச்சொல்லையாவது பயன்படுத்தவேண்டும்.

மேல் > மே > மோ.  மே> மோள்> மோக்கு> மோக்கம். மோக்கம் என்றால் மோட்சம். மேல் என்பது சில தமிழின மொழிகளில் மோ என்று திரிந்து மோ+ கு+ அம் > மோக்கம், என்றாகி மோட்சம் குறிக்கும். மேல் என்பது மோள் என்று மலையாளப் பேச்சு வழக்கில் சில வட்டாரங்களில் பேசப்படும். மோக்கம் பின் மோட்சம் என்று திரிந்தது.  மோள்+ சு+ அம்> மோட்சம்.

இனி, பால் என்பது பகுதி என்று உணர்ந்தோம், பால் என்பது கடைக்குறைந்தால் பா என்றாகும்.  பா+ திறம்> பாத்திறம் > பாத்திரம் என்பதுதான் வீட்டிலுள்ள ஏனம், ஏல்> ஏல்+ ன்+ அம் >  ஏனம்.  இங்கு ன் என்பது இடைநிலையாக வந்தது.பலவகையில் அறிவுறுத்தலாம் எனினும்  உம் என்ற இடைச்சொல் உன் என்று திரிந்து ன் என்று மட்டும் எஞ்சி நிற்கிறது. இந்த உன் என்பது உம் என்பதன் திரிபு.  உம்> உன்>ன். பொருளை ஏற்று வைத்துக்கொள்ளும் பாத்திரம்.

பால்> பாற்று> பாத்து > பாத்து+இரு+அம் >பாத்திரம். எனினும் ஆகும். பொருள்களைப் பகுதிப்படுத்தி வைக்கும் ஏனம். பர> பா> பாத்திரம்:  பரந்த வாய் உடைய ஏனம் என்று இது பல் பிறப்பி. உளுந்து வேறு,  அரிசிமாவு வேறாக ச்  சற்று புளிக்க வைத்து, வேறுவேறு பதார்த்தமாகச் சுடலாம். பகுத்து வைக்கப் பாத்திரம் உதவும். பகுத்து>பாத்து.  எ-டு: சப்பையாகப் பகுத்துச் செய்யப்படுவது சப்பாத்து, உணர்க. சப்பை + பாத்து.> சப்பாத்து..


கூடுதலாக எழுதாமல் முடிப்போம்.




அறிக மகிழ்க\

,மெய்ப்பு பின்னர்