புதன், 14 நவம்பர், 2012

அன்னாசிப் பழம் < அருநாசிப் பழம்


அன்னாசிப் பழம் என்பதைச் சிலர் அருநாசிப் பழம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொல்வது  "அன்னாசி".
மக்கள் மொழி: அர்நாசி. மலாய் மொழியில் "நாநாஸ்"

இதிலும் அரு > அன் திரிபைக் கவனிக்கவேண்டும்.

அரிய மூக்குப்போன்ற முட்டுக்களை உடையதும், உள்ளே மூக்குப்போன்றே துளைகளை உடையதும் ஆன இப்பழத்திற்கு இப்பெயர் இட்டவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும்.
அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை.

அரு+ நாசி  > அருநாசி >அன்னாசி.

நாசி என்பதும் அழகிய சொல். மூக்கு இல்லையானால், நாவினால் ஒழுங்காகப் பேசவராது.  நாவிற்குச் சீர்தருவது  நா+சீர் = நாசீர்? நாசி. நோஸ் என்ற ஆங்கிலம் வரை இதற்கு உறவு உண்டு.

இப்போது அரு(ந்து) > அன்(னம்) தொடர்பான திரிபுகளை @ இன்னொருமுறை கவனித்துக்கொள்ளுங்கள். *

@(சில விரைவில் வெளியிடப்பட்டும் )


தீபாவளியே மீ ண்டும் எப்போது வருகிறாய் ?



come again

வாரநாள் தன்னில் வந்ததீ பாவளிப்பெண்
கூர்ந்துநான் நோக்கக் குசும்பாகப் -- பேர்ந்தோடிக்
கண்ணிற் படாமல் கதவிடுக்கில் போய்மறைய
இன்னுமினி என்றென்றேன் நான்.

தீபாவளியே!


ஓராண்டுக் காலம் உனக்காகக் காத்திருந்து
சீராக உற்றார்நம் நண்பருடன் ---தீராத
நன்மகிழ் வோடுநாம் நண்ணிய தின்பண்டம்
பொன் திகழும் நாள்தந்த தே.




குசும்பு = குறும்பு.




திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி வாழ்த்துக்கள்

நாபா ரிதுபார்க்கும் நன்னீலன் தாள்போற்றித்
தீபா வளிஆர்க்கும் தேஞ்சுவையூண் --- ஆன்பாலும்
உட்கொண் டிமைப்போதும் ஓர்துயரும் தீண்டாமல்
கட்கண் சிறக்கவாழ் வீர்.


நா = நாவு. பாரிதுபார்க்கும் - இவ்வுலகைக் காக்கும்.
நன்னீலன் -விட்ணு ( விஷ்ணு). ஆர்க்கும் - தரும்.
தேஞ்சுவையூண் - இனிய உணவு வகைகள். ஆன் பால் - பசும்பால். கட்கண் - வாழ்வின் எல்லா முனைகளிலும்.

அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் உரியனவாகுக !