திங்கள், 3 ஜூன், 2024

மோடி முனிவர்க்கு வாழ்த்துக்கள் Rajarishi Modi

 இந்தக் கவிதை யாம் மோடிஜி அவர்களைப் பற்றி எழுதியது. இதை எழுதியபின் எம் மடிக்கணினியின் காட்சிமேடையில்(desktop) சேமித்து வைத்திருந்தோம்.. திடீரென்று காணாமற் போய்விட்டது. சேமித்தவை பலவற்றைத் திறந்து பார்த்தும் கிட்டவில்லை.  அப்புறம் கணினியின் தள்ளுக்கூடையில் ( recycle bin) தேடிப் பார்க்கவே, எழுத்துக்கள் எல்லாம் கசடுற்று  (gibberish) ஓர் ஆவணம் இருந்தது.  இதுவாகத் தானிருக்கும் என்று அதை மாற்றுரு உறுத்தியின் மூலம் மீட்டெடுக்க முயன்ற போது இயலவில்லை. மடிக்கணினியை மூடிவிட்டு துர்க்கை அம்மனிடம் வேண்டிக்கொண்டு படுத்து உறங்கி விட்டோம். மீண்டும் இன்று காலை திறந்து பார்த்தோம். மீண்டும் பழையபடி அங்குத் தோன்றியது. கசடுறைவுகள்  (gibberish) நீங்கிவிட்டிருந்தன.

அம்மனுக்கு நன்றி நவின்று அதை இங்கு மீள்படைப்புச் செய்கின்றோம்.


விசுவா மித்திர  மேதை மோடியின்

விவேகா நந்தரைப் போற்றிடு உளத்தால்

சிவாய என்றதும் செய்பவை முடிப்பார்

தவாநல் முன்னவர் தகவுறுத் தினர்காண்.


இவர்:


இராமரைப் போற்றுவார் இராமகி  ருட்டினர்

அறாத்தொடர் புடைய ஆத்தும  ஞானியர்

சிறார்சிசு கொஞ்சுவர். சீர்பல நயந்தே

தராதன தந்தவர் தகைமை சான்றவர்.


அவாய்நிற் பனவே அடைந்தன முழுமை

உவாமதிப் பூரணம்  ஓங்குக உலகில்;

சிவாஏசு  அல்லா சேர்அருள்  மண்டும்

நவைதீர் நலம்கூர் பாரினில் பரதம்.


மோடி  முனிவர் சூடும் வெற்றியால்

வாடா ஞாலமும் வகைநலம் காண்க.

மேடுபள் ளங்கள்  பரதகு  முகமே

வீடுற்  றுயர்ந்து  வேண்டுவ வெல்கவே.


ராசரி    சியாக   மறுவர வோங்கிய

மாசறு காட்சி  மன்னவர் மோடி

ஏசறு  நற்பயன் யாவினும் வென்ற

பாசறு மாட்சிப் பண்ணுறு மோலோர்.


அருஞ்சொற்கள்:

விசுவாமித்திரர் - உலக நண்பர் முனிவர்

தவா - தவறாத

அவாய் நிற்பன - முடியாது நிற்பவை

தகவு உறுத்தினர் - நேர்மை உணர்த்தியவர்

அறாத்தொடர்பு -  முடிந்துவிடாத தொடர் உறவு

வீடு - விட்டுவிடுதல்

வேண்டுவ - வேண்டியவை

ராசரிசியாக - இராஜ ரிஷியாக

மறுவர வோங்கிய - மறுபிறவி கொண்ட

பரத குமுகமே -  பாரத சமுதாயமே

வென்ற - பெற்றுவிட்ட

ஏசறு -  குற்றமற்ற

பாசறு - இலாபம் அடையும் சிந்தனைகள் இல்லாத


மோடிஜி வாழ்க

   


கருத்துகள் இல்லை: