வியாழன், 6 ஜூன், 2024

சிந்தனை - சொல்

இந்தச் சொல்லின் தோற்றத்தை இன்று சிந்திப்போம்.

சிந்துவது என்றால் கொஞ்சம் கொட்டிப்போவது.   வீட்டுக்கு வந்த விருந்தினர்க்குக் கொஞ்சம் காப்பி ( குளம்பி)  கொண்டுசெல்கையில் சில துளிகள் தரையில் விழுந்துவிட்டால்,  சிந்திவிட்டது என்று சொல்கிறோம். இச்சொல் சிறுமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்று பாடினால் அது சிந்துகவி. அளவாக இல்லாமல் மும்மூன்று சீர்கள் ஒரு வரிக்கு வருமாறு பாடுவது.

ஏறாத மலைதனிலே --- (இ)ரண்டு

எருது நின்னு தத்தளிக்க, 

பாராமல் கைகொடுத்த ----  எங்க(ள்)

பழநி மலை  ஆண்டவனே

இதுவும் சிந்துதான் .  சிந்து என்பது சிறுவகை நூலையும் குறிக்கும்.  சின்+து> சிந்து  . சில்> சின்.  சில்> சிறு.  சில்> சிறு> சிறு+ அமி(ழ்)+ அம் > சிறு அம் அம் > சிரமம்,   அமிழ் என்பதில் உள்ள இழ் என்ற இறுதி நீங்கிற்று.  எதையும் நீக்காவிட்டால் ஒருவேளை சிரமிழம் என்றோ சிற்றமிழ்வம் என்றோ வந்திருக்கலாம்.  அமிழ் உமிழ் என்பவற்றில் இழ் என்பது சொல்லாக்க ( வினையாக்க) விகுதி.  விகுதி தேவையில்லை. இதே விதியமைப்பை முன்னர் வேறு சொற்களைக் கொண்டு பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  இது ஒன்றைச் செய்வதில் உள்ள சிறு இடையூறுகளைக் குறிக்கும். சிற்றிடர் என்னலாம்.   நூலுக்கு வருவோம், இந்தச் சிறு நூல்கள் சிந்து நதிக்கரையில் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுபோய் விற்கப்பட்டன என்று பி டி சீனிவாச ஐயங்கார் கூறி இது தமிழ்ச்சொல் என்றார்.  எம் பழைய இடுகைகளில் காண்க.   சிந்தடி என்பது ஒரு யாப்பியல் குறியீடு.

ஆங்கிலக் கவி டென்னிசனின் கவியை மொழிபெயர்த்து ஓடை என்ற தலைப்பி இங்கு இடுகை செய்துள்ளேம்.  சிந்துகவி தான்.

மெல்லநீ  ஒழுகு  வைக்கோல்
மேடுகள் திடல்கள் தாண்டி
நல்லோடை, பிறகோர் ஆறாய்;
நாடிப்பின் வருவேன் அல்லேன்!

இது ஓடை என்ற தலைப்பில் வெளியிட்டோம். நீங்கள் ஒரு சிந்து எழுதி ஓடை என்னும் கவிதைக்குப் பின்னூட்டம் செய்யுங்கள்.  அதை இடுகையாகப் பின் வெளியிடுவோம். நம் நேயர்களுடன் பக்ர்ந்துகொள்ளவும். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்





கருத்துகள் இல்லை: