புதன், 15 மே, 2024

சங்கல்பம் தன்முனைப்பு ஈடுபாடு.

தொடங்குரை:  யாகம், ஓமம்

இருபத்தொரு வகை யாகங்கள் உள்ளன என்று அறிகிறோம். ஓமம் செய்தல் ஓமம் வளர்த்தல்  வேள்விசெய்தல் என்றும் சொல்லப்படும். யாகம் ஓமம் என்பவை ஒருபொருட் சொற்களாகக் கருதப்படுதலும் உளது.  ஓமம் என்பது ஒரு விதையைக் குறித்தலோடு, ஓமத் தீ வளர்த்தலையும் குறிக்கும். இச்சொல் தமிழில் பல்பொருட் கிளவியாதலின், யாகம் குறிக்கும் ஓமம் வளர்த்தலை ஹோமம் என்று அயலொலி ஏற்றிக் கூறினர். இது பொருள்வேறுபாடு கருதியதே ஆகும்.  ஓமம் என்ற விதையைக் குறிக்காதபோது அதை ஹோமம் என்று வேறுபடுத்தி ஒலித்தனர். ஓமம்வளர்த்தல் என்று விரித்தால் இந்தப் பொருள்மயக்கம் நீங்கும்.

யாகம் சொல்லமைப்பு:

யாகம் என்ற சொல் தமிழ்ச்சொல்தான்.  பூசை அல்லது தொழுகை மொழியும் திரித்து வழங்கிய தமிழே ஆதலினாலும்,  வீட்டில் தமிழ்ப் பேசியவனே பூசையின்போது தமிழ்த் திரிபுகளுடன் பரகதத் திரிபுகளையும் கலந்து  பூசையிற் பயன்படுத்திக்கொண்டான் என்பதனாலும் இத்திரிபுகள் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளையே குறித்தன.  பர கதம் என்றது பிராகிருதம் என்ற வெளிமாநிலத்து மொழித்திரிபுகளை.  பர கதம் என்றால் பரந்து பயன்பாடுகண்ட ஒலிமுறைய. பிராகிருதம் என்றது அப்பெயரைத் திரித்துக் கூறிக்கொண்டது ஆகும். யாகம் என்றது யாத்தல் என்ற கட்டுதல் பொருட் சொல்லில் உண்டான சொல்லமைப்பு.  கட்டுதலாவது தீவளர்த்தலைக் கட்டமைப்புச் செய்தல் என்ற பொருளதாகும். யா+ கு + அம் என்பது யாகம் என்றாகி யாத்துக் கட்டுங்கால் அதனுடன் இணைந்து (கு)  அமைந்த முறைத் தரவுகள் ( அம்) என்பதைக் குறித்தது.  நிறுவி அதை முடித்தல் முதல் உள்ள அனைத்தையும் குறிக்கக் கு என்ற சேர்வுப் பொருட்குறிப்பும்  அம் என்ற இறுதி அமைப்பு முழுமைபெறுதல் பொருளும் உள்ளமைந்தன. இவற்றின் பொருள் அறிந்துகொள்க. வேட்டல் விரும்புதலாம். வேள்வி என்பது அது.  

விரும்பிச் சேரும் சடங்கு.  சங்கல்பம்  (சங்கலப்பம்)

 இறைவழிபாட்டுச் சடங்குகளின் தொடக்கத்திலும், அதில் பங்குபெறுகிற முன்மாந்தன், இதில் நான் பங்குகொள்வதுடன் இந்த சடங்கினை நிகழ்த்துகின்ற பூசாரியை நான் அவ்வாறே பணிக்கின்றேன் என்னும் உரையைச் செவிப்படுமாறு சொல்லவேண்டும். எனவே இந்து மதத்தில் ( இது தற்காலப் பெயர்) இது பலகாலும் கடைக்கப்படிக்கப்பட்டு வந்தது. இந்த சடங்குகளில் யாரும் வற்புறுத்தப்படவில்லை.  ஒருமுறை கோயிலில் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டால் நீர் எல்லாவற்றிலும் வற்புறுத்தப்படுகிறீர் என்ற பணிப்புமுறை இந்து மதத்தில் இல்லை. இது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்குச் "சங்கல்பம்" செய்தல் எனப்படும். இதைச் சங்கற்பம் என்றும் எழுதுவர்.  விரலிலும் தருப்பை அணிவிக்கப்படும்.

இச்சொல் சங்கலப்பம் என்றே விடப்பட்டிருந்தால் இதில் தெளிவு மிகுந்திருக்கும்.  ஆனால் சொல்லமைப்பில் புதுமை இராது. தங்கலப்பம் என்றே விட்டிருக்கலாமே! அதுவும் ஓர் உத்திதான்.  புதுச்சொல் ஆக்கத்திற்குத் திரிபுகள் தேவைப்பட்டன.

பூசாரிகள் சடங்குகளை நடைபெறுவித்தாலும், உம் இறைவனைக் கண்டுபிடித்து மேன்மை கொள்ளுதல் உம்முடைய சொந்த முயற்சி ஆகும். வேறொரு முறையில் நீர் இறைவனைக் கண்டுகொள்வீராயின், உம்மை யாரும் அழைக்கவுமில்லை,  வலிந்து பணிக்கவுமில்லை. விசுவாமித்திரன் என்ற முனி உள்பட எல்லோரும் சொந்த முயற்சியே செய்தார்கள். நீ இதைச் செய்யவேண்டாம் என்று தடுத்த பிறர்பற்றிப் புராணங்கள் கூறியுள்ளன. நீ செய்க, இல்லையென்றால் தலையை வெட்டிவிடுவேன் என்று யாரும் சொன்னதாக யாம் அறியவில்லை. 

ஆகவே சங்கற்பம் என்ற சொல் முதன்மை பெறுகிறது. இதன் தமிழ் மூலங்களைப் பார்க்கின்ற வேளையில், ஏனை மொழிகளில் பிற மூலங்கள் கூறப்படும் என்பதை அறிக.

தம் + கல+ பு + அம் :  தாம் கலந்துகொள்வது.

தம் + கல் + பு + அம் >  தங்கல்பம் > சங்கல்பம் > சங்கற்பம்.  இவ்விறுதி புணர்ச்சித் திரிபு. தகரம் சகரம் ஆகும். இது திரிபு.

இதில் கல என்பதன் அடிச்சொல் கல் என்பதுதான். கல் என்பதில் அ என்ற பன்மைச் சொல் கலந்து கல என்றாகி கலத்தல் என்ற தொழிற்பெயரானது.

வந்தன சென்றன என்பவற்றில் அ என்ற பன்மைச்சொல் கொண்டு முடிந்தமை காண்க.  இடைச்சொல்லும் ஒரு சொல் என்பதே இவண் கருத்தாகும்.

கலப்பு அம் > கலப்பம் > கற்பம் என்று முடிக்க. கல என்பதில்  அகர கெடுக்க ( அல்லது எடுக்க). கல் என்பதே மிஞ்சுவது காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: