ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

காசியப்பர் என்ற சொல் ( காசியப் என்று அயலில்)

 காசியப்பர் என்ற பெயரை இன்று ஆய்வுசெய்வோம்.

காசியப்பர் என்பது திரிந்து அயலில் காசியப்ப, காசியப் என்றெல்லாம் வரலாம். பணிவுப்பன்மை விகுதியாகிய அர் தேய்வது என்பது தமிழல்லாத பிறவற்றில் இயல்பு ஆகும்.  காசியப்பர் என்றொரு முனிவர் முதலில் இருந்து அவர்  மன்பதைக்குள் ஏற்படுத்திய அதிர்வியக்கம் சற்று நீங்கிய பின் பிறரும் அப்பெயரைச் சூட்டிக்கொள்வது உலகியல்பு ஆகும்.

காசியின் கடவுள் சிவபெருமான் ஆவார். அவரின் பெரும்பற்றராயிருந்த ஒருவரே காசி அப்பர்> காசியப்பர்.  யகர உடம்படுமெய் வந்துள்ளது.  அவர் பாடியவாக உள்ள சில பாடல்கள் கிடைத்துள்ளன. காலக்கடப்பினால் வேறு சிலர் பாடிய சிலவும் அவற்றுடன் இணைவைத்து மதிப்புற்றிருத்தல் கூடும். முதலில் இருந்தவர் ஒருவரே. பின்னர் வந்தோர் அடியார்கள் அல்லது பின்பற்றாளர்கள் என்பதே அறியத்தக்கது. பண்டை இலக்கியங்களில் அடியார்களையும் இணைத்து மனைவியர் என்று சொல்வது கதைசொல்வோருக்குப் பழக்கமாய் இருதிருக்கிறது. பின்பற்றுவோர் மனைவியர் போலும் பற்றுடையார் என்று முதலில் தொடர்பின் திண்மையைக் காட்டிவிட்டு போகப்போக அவர்கள் மனைவியர் என்று கூறிவிடுதல் பழங்கதை சொல்வோருக்குப் பழக்கமாகி இருந்துள்ளது.   காசியப் என்பது காஷ்யப் என்று வருவது மெருகூட்டல் ஆகும்.

இறைவனின் ஐந்தொழில்களுள் காத்தல் என்பது ஆக்கத்துக்கும் அழிவுக்கும் இடைத்தலைமையாக வரும் செயலாம். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயரே காசி என்ற ஊர்ப்பெயர்.  கா-  காத்தல்.  சி என்பது சீர் என்பதன் குறுக்கமும் விகுதியுமாகும். காக்கும் சீர்பெறு நகரமே காசியாகும். இறைவன் சிவனின் காவலுற்ற நகரம் காசி.

பிரிந்த ஆரண்ய அகத்து உபநிடதத்தில் இவருடைய பாடல்கள் சில வந்துள்ளன.  ஆரண்யம் என்பது காடு.  பிரிந்த ஆரண்யம் என்பது பிற காடுகளிடமிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் விளங்கிய காடு. அரண்> அரணியம் > ஆரண்யம்.  அரிதாக அரசருக்கு வேண்டிய அண்மையில் அமைந்திருப்பது அரணியம் > ஆரண்யம்.  

காசி என்பது தமிழ்ச்சொல். காசி அப்பர் அங்கு வாழ்ந்து மறைந்த ஒரு முனிவர்.அல்லது இறையடியார்.  காசிக்கும் ஈரான், மெசொபோட்டேமியா முதலிய இடங்கட்கும் உள்ள தொடர்புகள் மிகக் குறைவு ஆகும்.  காசியப்பரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் பிற இடங்களிலிருந்து கிடைத்தில.

காசியப்பர் என்ற சொல் காசியப், காசியப்ப என்று வருதல் இயல்பான வாலிழப்பு ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின். 

கருத்துகள் இல்லை: