திங்கள், 2 பிப்ரவரி, 2026

விளக்கமார் என்னும் பேச்சுச் சொல்

 விளக்கமார் என்னும் பேச்சுச்சொல் .

இந்த ''விளக்க-மார்''  என்னும் சொல்  நாம் தமிழ் பேசுகின்ற போது நாம் வழங்கும் சொல்லாகும்.  இந்தச் சொல் பிடிக்கவில்லை என்றால், இதே போன்ற பாணியில் அமைந்த ''கூட்டுமார்''  என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலா9ம். செவிக்கினிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற  கொள்கை உடையவர்களும் உள்ளனர். மனிதன் பேசும் அனைத்துச் சொற்களும் நாவிலிருந்து அல்லது அஃது இயங்கும் வாயிலிருந்து வரும் சொற்கள்தாம். அதாவது இவை நாவொலிச் சொற்கள். இவற்றை ஒலிவடிவச் சொற்கள் என்று இலக்கண நூலார் கூறுவர்.

இந்தச் சொல்லில் வரும் மார் என்ற வடிவம், மலார் என்று அகரவரிசை யுடையாரால் பதிவு செய்யப்பட்டுளது.  மாறு என்பதும் காணப்படுகிறது.  ஆகவே கூட்டுமாறு, கூட்டுமார், விளக்கமார்,  விளக்கமாறு என்று பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. மாறு என்பதும் துடைப்பத்துக்கு வழக்கில் இருந்துள்ளது. 

மலார், மலாறு, மிலாறு என்பவற்றோடு மார் என்பதையும் கூட்டியுரைக்கத் தோன்றுகிறது. மிலார் என்ற வடிவமும் உண்டு.  ''மிலார்கள் தம்மில் பொலிந்தன பவளக்காய்கள்'' என்று பாரதிதாசனார் கவிதையில் வருகிறது. இந்த வடிவமும் அகரவரிசையில் இருந்திருக்கக் கூடும்.  மாறு என்றால் துடைப்பம் என்ற பதிவும் காணப்படுகிறது. எல்லா அகரவரிசைகளையும் பார்க்குமளவுக்கு நூல்கள் கிட்டவில்லை.

மலார் என்பது சிறு கிளைகளை அல்லது குச்சிகளைக் குறிக்கும் சொல். இது மிலார் என்றும் திரியும் என்பது கூறப்பட்டது. மலார் என்றது   பேச்சில் மார் என்று திரிந்துள்ளது. பாத்திரங்களை விளக்குவதற்கு அல்லது துடைத்து அழுக்ககற்றி  வைப்பதற்கு மலார்கள் பயன்பட்டன.  இந்தச் சிறிய இணுக்குகள் மென்மையானவை.  மெல் என்ற அடிச்சொல்லினின்றே  மலார் என்ற சொல்லின் தொடர்பினதான  மில் வருகிறது.  மெல்-மல்- மலார் என்ற திரிபு காணக்கிடக்கின்றது.   அர் என்பது அரு என்பதன் திரிபு.  அரு>அர்.  அரு என்பது சிறு வடிவினவாயவற்றையும் குறிக்கும். மெல்>மில்>மிலார்.   அர் இங்கு ஆர் ஆனது.  அர்> ஆர்: வந்தனர் (அர்> ஆர்) என்பதால் வந்தார். ஆர் என்பது, பன்மையும் ஆகும்.  வந்தார் என்பது பண்டைத் தமிழில் பன்மை, இன்று ஒருமையையும் குறிப்பது  வழுவமைதி என்றனர். மிலார்கள் அருகருகில் இருப்பவை,  அதனால் பொருந்துகின்றன. மிலாறு என்பது மலார் என்றும் வந்துள்ளது.

பழைய இடுகைகளில் பல திரிபுகள் காட்டப்பெற்றுள்ளன.  மெல்>மில்>மிலார்>மிலாறு என்பவற்றோடு கூறப்பட்ட பிறவும் தெளிவாம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

கருத்துகள் இல்லை: