Pages

வியாழன், 23 மே, 2024

சொல்லில் யகர ஒற்றுக் குறைந்த சொல்

 ஒரு சொல்லில் ஏதேனும் ஓர் எழுத்து அல்லது  அதனினும் மேற்பட்ட எண்ணிக்கையில் எழுத்துகள்  குறைந்துவிட்டால் அத்தகைய சொல்லை குறைச்சொல் என்று இலக்கணத்தில் சொல்வார்கள்.  குறைச்சொற்கள் பல நிறைச்சொற்கள் போல வழங்குதலும் உண்டு.  ஒன்றைக் குறைச்சொல் என்று அறியாமல் பயன்படுத்துவோரும் உண்டு. ஒரு சொல் குறைச்சொல்லா நிறைச்சொல்லா என்று அறிந்தபின் தான் பயன்படுத்தவேண்டும் என்பதொன்றும் இல்லை.  இதை அறிந்து வைத்திருப்பதால் இயல்பாக ஒருவனுக்கு எந்தப் பயனும் பேச்சு வழக்கில் இல்லை. கவிதைக்கு இது முக்கியமாகும்.

யகர ஒற்று சொல்லுக்கிடையில் குறைந்து வரும் சொற்கள் பல.  அவற்றை இங்கு காணித்துள்ளோம். முதலும் இறுதியும் குறைதலும்  உள.

https://sivamaalaa.blogspot.com/2019/08/blog-post_29.html

முதலெழுத்துக் குன்றியபின் வந்த சொல், சொல்லில் எஞ்சி இருப்பது முதலில் வரக்கூடாத எழுத்தாக இருந்தால் அச்சொல்லில் ஏற்ற உயிரெழுத்தைச் சேர்த்து எழுதவேண்டும்.

எடுத்துக்காட்டு:  அரங்கன் >  ரங்கன் > இரங்கன்.  

இது சரிதான் என்றாலும் அரங்கன் என்று எழுதுவதே உரிய முறையாகும். சீரங்கம் கோவில் ஓர் அரங்கு போன்ற ஆற்றிடைக்குறையில் அமைந்தமையால்  இப்பெயர் ஏற்பட்டது,   என்வே அரங்கன் என்றே வழங்குதல் நலம்.

இரும்பை ராவி எடுக்கவேண்டும் என்ற வாக்கியத்தில் ராவி என்பது அராவி என்று இருக்கவேண்டும்..

உலகின் பல மொழிகளில் ர, ல முதலியவை சொல்லின் தொடக்கத்தில் வருகின்றன. தமிழில் வராமையானது தமிழ் மரபுதான்.  வேறு காரணிகள் ஒன்றுமில்லை. 

இனி  யகர மெய் குன்றிய சொல்லைக் காண்போம்.

நாய்ச்சியார் பாட்டு என்பது  நாச்சியார் .... என்றும் வரும்,   நாச்சியப்பன் என்ற சொல் உண்மையில் நாய்ச்சியப்பன் என்பதே. நாய்ச்சி என்பது தலைவி, உயர்வானவள் என்பது பொருள். எடுத்துக்காட்டு: குந்தவை நாய்ச்சியார். ஆண்டாள் நாய்ச்சியார். வேலு நாய்ச்சியார்.

பாசனம் என்ற சொல்லும் பாய்ச்சனம் என்பதே.  நீர் பாய்ச்சுதல் பாய்ச்சனம்> பாசனம் என்று குன்றியது,

ஆய்ச்சி என்பது ஆச்சி என்று குறையும்.

பேய்ச்சி என்பது பேச்சி ஆகும்.   பேச்சிமுத்து என்பதொரு பெயர்.

தாய்தி என்பது தாதி என்றுமாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.