Pages

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

விஞ்சையர் நீங்கள் காணாமல் வாழ்கிறவர்கள். சேக்கிழார் பாட்டு.

விஞ்சையர்  என்பது பதினெட்டுக் கணங்களுள் அடங்குவோரைக் குறிப்பது என்பது நாம் மாணவர்களாய் இருக்கையில் அறிந்துகொண்டதாகும்.  மனிதர்களாய் வாழ்ந்தவர்களிற் சிலர் வாழ்வாங்கு வாழ்ந்து, பல்புகழும் பெற்று,  மக்களால் இன்னும் எண்ணிப் போற்றப்படுபவர்களாய் உள்ளனர், அவர்கள் வாய்மொழி வரலாறுகளில் அறியப்பட்டாலும்  நூல்களால் அறியப்பட்டாலும்  கணங்களேயாவர்.  சிறப்பான வேளைகளில் அவர்கள் வீணை இசைபோலும் மீட்ட,  பற்றன்  கேட்டு இன்புறுகிறான். கனவிலோ அல்லது  விழித்துக்கொண்டிருக்கும் போதோ இவ்விசை கேட்கிறது.  இது எப்படி என்று ஆராய்வது வீண்வேலை. இத்தகையவை மனவுணர்ச்சியின் பால் எழுவன ஆகும்.

கணம் ( பன்மை: கணங்கள்)  என்ற சொல்  கண் என்பதிலிருந்து வருகிறது. உணர்ச்சி இல்லாதவனுக்குத் தெரியாதது,  உணர்ச்சி அணைகடந்து நின்றவனுக்குத் தெரிகிறது. கண்+ அம் =  கணம்.  கண்ணம் என்று வந்து இடையில் ணகர ஒற்று மறைந்து இடைக்குறையானது என்று கூறினும் இலக்கணம் பொருந்துவதே. ணகர ஒற்று இரட்டிக்கவேண்டும் என்று கவலைகொள்ளும் இலக்கணப் புலமை மிக்கவருக்கு அது விடையாகலாம்.  கண் என்பது இடம் என்றும் பொருள்படுமாதலின்,  சிலவிடங்களில் தோன்றி மறைவதாக அறியப்பட்ட உருவங்கட்கும்  இது பெயராய் இருத்தல் கூடுமெனல் அறியற்பாலதாகும்.

கண் என்பது ஒரு வேற்றுமை உருபும் ஆகும்.  இதன் பொருள்   "இல்" (வேற்றுமை உருபு)    என்பதை ஒப்பதே.  வீட்டின்கண் பந்து விளையாடாதே  என்ற வாக்கியத்தில் கண் என்பது இடப்பொருளது,  " மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்"  என்று வரும் குறளில்  கண் என்ற சொல்,  உருபு,  இடப்பொருள் சுட்டியது.

இப்போது விஞ்சை என்னும் சொல்லின் தோற்றத்தை அறிவோம்.

செய் என்ற சொல் நிலத்தைக் குறிப்பது.  நன்செய், புன்செய் என்ற சொற்களில் இந்த வழக்குகளை அறிந்துகொள்ளலாம்.  இது நஞ்சை,  புஞ்சை என்றும் திரியும்,  பின்வரு இரு சொற்களும் பிசகுகள் அல்ல,  திரிபுகளே.  காவிரி ஆற்றால் தண்மை செய்யப்பட்ட தஞ்சை மாவட்டமும்  தண்செய்> ( தஞ்செய்)> தஞ்சை  என்றே  உருவானதாகும்.  

விண்ணில் நிலம் இருக்கிறதா?  நிலவிலிருந்து மண் கொண்டுவரப்பட்டு அதில் செடி முளைக்கவைத்திருக்கிறார்கள் என்பது தற்போதையச் செய்தி ஆகும்.  பூமிக்கு அப்பாலும் மண்ணும் இருக்கலாம்.  அதில் மேடு பள்ளங்களும் இருக்கலாம்.  ஆகவே,  விண்செய்>  விஞ்சை என்பதும் முறைப்படி அமைந்த திரிபுச்சொல்லே.  இறந்தவர்கள் மேலே சென்றுவிட்டதாகக் குறிப்பிடுவது எல்லா இனத்தவர்களிடமும்  ( சீனர், மலாயர், தமிழர், யப்பானியர், ஆங்கிலர் என எவரிடமும்) காணப்படுவதே.  விஞ்சையர் என்பது பெரும்பான்மையர் வழக்கில் தோன்றிய வழக்குச் சொல் ஆகும்.

விண்ணில் உள்ள கிரகங்களிலும் நிலம் அல்லது மண் இருக்கலாம்.  சந்திரனில் உண்டு . (தண்திறன்>  சந்திரன்,   இது தகர சகரத் திரிபு.)  [ தண்திரள் > சந்திரன் எனினுமாகும்].

சில சொற்கள் நம்பிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ளன.  மனம் என்ற ஓர் உறுப்பு உடலில்  காணப்படவில்லை,  இருதயம் அல்லது இதயம் என்பது இரத்தத்தை  ( அரத்தத்தைக்) செயலாக்கம் புரியும் கருவியுறுப்பு,  மனவுணர்வினால் எவ்வுறுப்பும் பாதிப்பு (தாக்கம்)  அடையலாம் எனினும்  உணர்வு என்பது மூளையிலிருந்து வெளிப்படுவதாகக் கூறுகின்றனர்,  ஆயினும் மனம் என்பது மூளையன்று,   மூளையென்பது ஒரு குழைவுறுப்பு,  விஞ்சையர் என்பது மறைந்து நம்மால் தொழுதகு மேன்மக்கள் என்று அறியப்படுவோரைக் குறிக்கும் சொல்லாகும்,  விண்செய்+ அர் என்பது உயர்ந்த செயலுக்கு உரியோராய் இருந்து மறைந்தவர்கள் என்றும் சொல்லலாம்,

உலகின் பொருள்கள் மனிதனின் நம்பிக்கையினால் இருப்பன இல்லாதன என்று கொள்ள இயலாது,  விண்செய்யர்  அல்லது விஞ்சையர் - தமிழில் உள்ள சொல்.   திரிசொல்.  இலக்கணம் அவ்வளவே.

மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்

கான வீணையின் ஓசையும் காரெதிர்

தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர்

வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம். 

----------சேக்கிழார் பெருமானின் 
12 நூற்றாண்டு   பாடல்

இயற்கை  நியதிகளைக் கடந்து நின்றவர்கள் என்றும் இச்சொல்லை விளக்கலாம்.  இதன் காரணம்,  விஞ்சு  என்றால் மிஞ்சு  என்று பொருள். இருசொற்களும் ஒன்றுக்கொன்று போலி.  இவற்றுள் மிஞ்சு என்பது முதலாக இருக்கக் கூடும்.  அதாவது அதிகமாக அல்லது கடந்து நிற்றல் என்பது பொருள்.  விஞ்சு >  விஞ்சு ஐ >  விஞ்சை,  தொழிற்பெயர்.    அர் -  அவர்கள்.  இறந்துவிட்டால் அன்னோரை நாம் பின்னர் காண்கிலம்.  அவர்கள் இல்லாமல் ஆகிவிட்டனர்..  உண்மையில் அவர்கள் நம் கண்களுக்குத் தெரியாத வேறொரு நிலையில்  நிலவுகின்றனர் என்பதும்  நாம் அவர்களைக் காண இயலாததற்குக் காரணம்,  அவர்களைக் காணும் ஆற்றல் நம் கண்களுக்கு இல்லையாய் விட்டது என்பதும்தாம்..   நம் கண்களுக்குத் தெரியாத எத்தனையோ எத்தனையோ உயிரினங்கள் உள்ளன.  கோவிட் கிருமி அல்லது நுண்மியை நம்மால் காணமுடிவதில்லை.  இப்போது அதைக் காணும் ஆற்றலுள்ள கருவியைக் கண்டுபிடித்த பின்புதானே அறிவியலார் கண்டுகொள்கின்றனர்.  அதுபோல் விஞ்சையரைக் காணும்  விஞ்சுவிழியைக் கண்டுபிடித்து அதைக்கொண்டு பார்த்தால்  ஒருவேளை முடியலாம்.  அவர்கள் வாழ்வது நாம் அறியாப் பரநிலையில்.  ஆகையால் விஞ்சையர் என்பது இதையும்கூட விளக்கித் தரும் ஓரழகிய தமிழ்ச்சொல் ஆகும்.   The Chariot of the Gods  என்னும் அழகிய ஆங்கில நூலை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். They are living in a different plane of existence.  That is the truth.

விஞ்சையர் என்பது விளக்கப்பட்டது மேல்

இப்போது பாடலின் அழகில் தொடர்ந்து  ஈடுபடுவோம்.

மேன்மை  நான்மறை நாதமும்  ----  மேலான  அல்லது   மிகச்சிறந்த நான்கு  மறைகளை  ஓதுவார்தம் நாவிலெழும்  இனிய   ஒலியுடன்,
கான வீணை ஓசையும் -  இசைதரும்  வீணையின் ஒலியும்,  கார் எதிர் தான மாக்கள் முழக்கமும்-  கார் காலத்தை எதிர்கொண்டு பின் விளைச்சல் கண்டு  தானம் அல்லது கொடைகள் செய்யும்  உழவப் பெருமக்களின்  எழுச்சி ஒலிகளும், தாவில்சீர் வான துந்துபி ஆர்ப்பும்   ----குற்றமற்ற  வானிலெழும்  பெருமதங்கத்தின் சத்தமும்   மருங்கெலாம் -  பக்கங்களில் எங்கும் கேட்கும்,.

----என்கின்றார் இவ் இறைநலப் பெருங்கவியரசு.


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

சில புள்ளிகள் தாமே தோன்றுகின்றன.
இவை நீக்கப்பட்டன. மீண்டும் தோன்றக் கூடும்.
கவனமுடன் வாசிக்கவும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
,
இடுகை முற்றிய  பின்னர்,  என்-கின்ற  என்ற சொல் என்பது  எங்கின்ற என்று
மாறிவிடுகிறது.   

இனி என்-கின்ற  என்று  'தட்டெழுதினாலே'  முடியும்போல் தெரிகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.