Pages

சனி, 23 மார்ச், 2019

தகர சகரத் திரிபுகள். இன்னொரு விளக்கம்.

தகர வருக்கம் ( அதாவது  த, தா தி.....தௌ  என  வருபவை)  சகர வருக்கமாகத்
திரியும் என்பதைப் பல முறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.  தமிழ்ச் சொல்லில் ஆர்வமுடையோர் இவற்றைச் சிக்கெனப் பிடித்து மனத்துள் இருத்திக் கொள்ளுதல் வேண்டும்.  மறக்காமலிருக்க அவ்வப்போது மீள் பார்வை செய்துகொள்ளுதல் கடனே.

இப்போது சில காண்போம்:

நீந்து >   நீஞ்சு     :  இதில் ந் என்பது ஞ் என்று திரிந்தது;  து >  சு ஆனது.

நீஞ்சு என்பது  பேச்சு வழக்கில் உலவும் வடிவம்.  திரிபுகள் எல்லாம் பேச்சு வழக்கில் வருபவை. சில ஒதுக்கமுடியாமையால் பண்டிதன்மாரால் ஏற்கப்பட்டு இலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சில ஏற்கப்பட்டு அவை திரிபு என்பது கூட மறக்கப்படலாயிற்று.

ஓர் எடுத்துக்காட்டு:

சிற்றம்பலம் >  சித்தம்பரம் >  சிதம்பரம்  ( றகர ஒற்றும் றகரமும் தகர ஒற்றாகவும் தகரமாகவும் திரிந்தன.)  ஒரு தகர ஒற்று ஒழிந்து இடைக்குறை ஆனது.  இவை எல்லாம் மறக்கப்பட்டு  சிதம்பரம் என்பது தனிச்சொல்லாய்த்
தவறுதலாகச் சிலரால் எண்ணப்பட்டது.  சிதம்பரம் என்பது ஒரு   திரிசொல். அத் திரிசொற்கு நேரான இயற்சொல்  சிற்றம்பலம்  என்பதே.    சிற்றப்பா என்பது சித்தப்பா என்றே வழக்கில் இருந்தாலும் சிதப்பா என்று இடைக்குறை ஆகவில்லை.

சிற்றம்பலம்தான் சிதம்பரம் ஆனது என்பதை மறந்துபோவது மொழிவளர்ச்சிக்கு நல்லதுதான்.  இப்படி பல்லாயிரக் கணக்கான சொற்களின் திரிபு மறக்கப்படுதலாலேதான் மொழியில் சொற்கள் பெருகி,  பொருளிலும் ஒலிப்பிலும் தடைகள் நீங்கி  வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  சிதம்பரம் போகும் ஒருவன் சிற்றம்பலத்திலிருந்துதான் சிதம்பரம் வந்தது என்று தெரிந்து  அவனுக்கு ஆகப்போவது யாதுமில்லை என்பதையும் கருதவேண்டும். நாம் மொழியறிதலுக்காகவும் புதிய சொற்களை எப்படிப் படைத்துக் கையாள்வது என்பது பற்றியும் திறன் பெறுதற்பொருட்டு  இங்கு இதைக் கூறுகிறோம்..

ற்று என்பது த்து என்று மாறுவது எத்தனையோ பாட்டிகள் காலத்துக்கு முன்னால் உள்ள வரலாறு.

ஒன்பது வரை அறிந்த தமிழன் அதற்கடுத்த பத்தை அறிய அவனுக்கு ஒரு சொல் தேவைப்பட்டது. ஒன்று ஒன்று ஒன்று என்று எண்ணி, ஒன்பது முடிந்து பத்துக்கு வந்துவிட்டான். பத்து என்பது பலவாகிய ஒரு பெரிய எண்.

பல் > பல்து > பற்று > பத்து.

ஒன்பதினும் பன்மை உடைய எண்ணிக்கை.

அல்லது:

பல் >  (கடைக்குறைந்து ) > ப + து > பத்து எனினும் அதுவே.

பல உள்ளுறைந்த ஓர் எண்ணிக்கையே பத்து.  ஓர் எண் ஆதலின்: து என்னும் ஒருமை விகுதி கொண்டு முடிந்தது.

ஆயிரத்துக்கு வந்த போது   ஆகப் பெரியது என்று தமிழன் மனத்துள் நினைத்தான்.    ஆ =  ஆகப்,   இரு = பெரியது;  அம் =   அதுவாம் என்று சொல்லை அமைத்தான்.   ஆ+ இரு+ அம் =  ஆயிரம்.  அவன் எண்ணப் பழகிக் கொண்ட இருட்காலத்தில்   ஒன்று  - அவனுக்குச் சரி;   அதனுடன் இன்னொன்று என்றால் ஆகா,  பெரிது என்று எண்ணி,  இரு = பெரிது என்ற சொல்லைப் பயன்படுத்தினான்.   ஆயிரம் என்றால் ஆகப் பெரிய அமைப்பாகிய எண்ணிக்கை என்று வியந்து சொல்லை அமைத்துக்கொண்டான்.

இவை எல்லாம் கருத்து வளர்ச்சியையும் திரிபையும் விளக்குகின்றன.

இப்போது தகர சகர உறவுக்குச் செல்வோம்.

மிகப் பழங்காலத்தில் 0னகர ஒற்று இறுதியான ஒரு சொல் பன்மையில் வரவேண்டுமென்றால் அதை மகர ஒற்றாக முடிக்கவேண்டும்.

தன் =(  ஒருமை.)
தம் = ( பன்மை)
என் =  ( ஒருமை )
எம் = (பன்மை ).

தன் + தன் =  தம்.    இது பின் சம் என்று திரிந்தது.

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் கூடுதல் குறிக்கும் சம் இந்தச் தம்மின் திரிபு அன்றி வேறில்லை.

ஆகவேதான் யாம் சொல்வது:  தம் சாரமே > சம்சாரம்.    ஒரு "தன்"னுடன் சேர்ந்து தம் ஆகிப் பின் சம் ஆகின கதைதான்.  சம் என்று கூட்டல் குறிப்பதும் தன் + தன் = தம் > சம்.  ஆகவே தகர சகர உறவு புரிகிறதா?

இன்னும் :

பாய்ந்து > பாஞ்சு
ஓய்ந்து > ஓஞ்சு

என்று பல உள.  இவை மொழி கடைத் திரிபுகள்.  மொழி முதலிலும் இடையிலும் கடையிலும் இத்திரிபு வரும்.  இங்கு மொழி என்றது சொல் என்று பொருள்படும்.  வேறிடங்களில் அது பேசு> பேசை  > பாசை > பாஷை  என்றுமாகும்.  இது ஏகார ஆகாரத் திரிபு என்று வேறு ஆசிரியர்களும் விளக்கியுள்ளனர். இங்கு மொழி - பாஷை என்று அர்த்தமில்லை.  பாடை எனினும் அதே. ஆனால் பாடை என்பதற்குப் பிணப் பாடை என்று இன்னொரு பொருளும் உண்டு.

"தேவ பாடையின் இக்கதை செய்தவர்"  ( கம்பன் செய்யுள்).

சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.