Pages

புதன், 27 டிசம்பர், 2017

கௌதம என்ற சொல்லின் அமைப்பு தமிழில்



இன்று கௌதம என்ற சொல்லினைப் பற்றி அறிந்துகொள்வோம்.இதை ஆராய்ந்த சங்கதப் பண்டிதர்கள் இச்சொல் கோ+தம என்ற இரண்டு சொற்களால்  ஆனதென்று கூறுவர். இது ஒரு குடிப்பெயர் என்பர்  வரலாற்றாசிரியர்.

கோ என்றால் இருள்;  தம என்றால் ஒளி என்று கூறுவர்.  இருளில் ஒளி என்று நாம் இதை எடுத்துக்கொள்ளலாம். இது புத்தருக்குமட்டும் பெயராய் அமைந்திருப்பின் இதை ஏற்பதில் தடையேதும் இருக்கவியலாது. அவர் இவ்வுலகத்தில் இருளான அறியாமையை விலக்கும் ஒளியாக இலங்கினார் என்பதால் அது பொருட்பொருத்தம் உடையதாகிறது.  ஆனால் அது ஒரு குடிப்பெயராதலின் புத்தர் தோன்றுமுன்பே அக்குடிக்குப் பெயராய் அமைந்திருந்த படியினால் அவர் குடியினர் அனைவருமே இருளில் ஒளியாய் இருந்தனரா என்ற கேள்வி எழுகிறது.   புத்தரைப்போலவே அவர் முன்னோரும் அறிஞராய் இருந்தனரென்பதற்கு ஆதாரமெதுவும் கிடைக்கவில்லை. புத்தருக்கு வேண்டுமானால் அது பொருத்தமான வண்ணனையாய் இருக்கலாம்.

ஆகவே வேறு பொருள்கள் உள்ளனவா என்று ஆய்தல் ஏற்புடைத்தாம்,

இப்பெயர் காஉத்தம என்று தமிழ்த்தொடராக இருக்கவேண்டும்.  அதுவே கௌதம என்று திரிதற்கு ஏற்ற தொடராகும்.

அவர்தம் முன்னோர் குடிமக்களைக் காக்கும் உத்தமர்களாக இருந்ததையே இத்தொடர் காட்டுகிறது. இயல்பான அறிவுடன் போரிலும் காவலிலும் சிறந்து விளங்கிக் குடிகளைக் காத்தனர்.

உத்தம என்பது இடைக்குறைந்து உதம என்றாகும்.  நாளடைவில் சுருங்குவதற்கு ஏற்ற சொல்லே இது:  உத்தம > உதம.

கா+ உதம =  காஉ தம >  கௌதம என்பது பொருத்தமாகும்.

புத்தரே அறிவு ஒளி. அவர் முன்னோர் குடிகளைக் காக்கும் காவலர்கள் என்பது இதன்மூலம் பெறப்படும்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.