Pages

புதன், 27 செப்டம்பர், 2017

ஏளனம் என்ற சொல்லின் அமைப்பு.



இன்று ஏளனம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்து இன்புறுவோம்,
இதற்குரிய வினைச்சொல் எள்ளுதல் என்பதாகும்.

சில தொழிற்பெயர்கள் முதனிலை நீண்டு அமைபவை. அதாவது வினைச்சொல் சுடு என்றிருந்தால் சூடு என்று நீண்டு பெயர்ச்சொல் ஆகும், அப்புறம் ஒரு விகுதி பெற்றுத் தொடர்புடைய பொருளையோ அதே பொருளையோ குறிக்கும்.   தொடர்புடைய பொருளைக் குறிப்பதற்கு எடுத்துக்காட்டு:  சூடு > சூடம் அல்லது அல்லது சூடன் என்பது. சூடன் என்பது நாம் பூசையின்போது கொளுத்தும் சூடன்,  சூடுதல் என்ற வினைச்சொல் வேறு.   சுடு என்பதிலிருந்து அமைந்த சூடு (வெம்மை) என்பது வேறு.

இதுபோலவே எள்ளுதல் என்ற வினைச்சொல்லும்.

எள் என்பது வினைப்பகுதி அல்லது ஏவல்வினை.

எள் என்பது எள்ளு என்று உகரச் சாரியை பெற்றும் வழங்கும்.  எள்> எள்ளுதல்.  கொள் > கொள்ளுதல் எனல்போல.

எள்> ஏள்+அன்+அம் = ஏளனம் என்றானது.

அன் : விகுதி அல்லது சொல்லிடைநிலை.

அம் :  விகுதி.

விகுதி என்பது மிகுதி என்பதன் திரிபு. சொல் இறுதி மிகுந்து நிற்றல்.  ம- வ திரிபு.

அன் அம் என்பவை மிகுதிகள்.  மிகுதி என்பதே விகுதி என்று திரிந்தது.

திரிபுக்கு முந்திய வடிவம் காணாமற் போய்விடுவதும் உண்டு.  அது வழக்கற்றுப் போவதும் அது பயன் கண்ட நூல்கள் அழிந்துவிட்டமையும் காரணங்கள். எடுத்துக்காட்டு:  

மனிதன்

   இதன் பெண்பால் வடிவம் மனிதை. இது  வனிதை என்று திரிந்தபின் 
(    ம  - வ திரிபு )அதையே மக்கள் விரும்பிப் பயன்படுத்த, மனிதை என்ற வடிவம் ஒழிந்தது. மனுசி (மனுஷி) என்ற வடிவமும் உள்ளது.. இதைப் பின் வேறோர் இடுகையில்  காண்போம்.

எள் என்பது ஒரு சிறிய தானியவகை.  எள் என்பதன் கருத்து சிறுமை என்பது.  எள்ளுதல் -   சிறுமைப்படுத்தல்.

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும்" என்பது நாயனார் வாக்கு.  எள்ளுதல் என்பதன் எதிர் எள்ளாமை. 

Some errors keep recurring. Will review.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.