Pages

சனி, 19 ஆகஸ்ட், 2017

ஔவையார் புறநானூற்றுப் பாடல் விளக்கம். பா: 286


இனி ஔவைப்பாட்டியின் ஓர் ஐந்துவரிப் புறநானூற்றுப் பாடலைப் பாடிப் பொருளறிந்து இன்புறுவோம்.
இது 286வது பாட்டு. கரந்தைத் திணையில் வேத்தியல் துறையில் வருகிறது.
பாடல்:
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போல
தன்னோர் அன்ன இளையர் இருப்ப
பலர்மீது நீட்டிய மண்டை என்  சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பத்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே.

இந்தப் பாடலில் போர்மறவர்கள் வெள்ளாட்டுக் கடாக்களுக்கு ஒப்பிடப் படுகின்றனர். ஒரு தாய் பாடுவதுபோலப் பாடல் அமைந்துள்ளது. அத்தாயின் மகனோ போருக்குப் புறப்படத் தயாராய் நின்ற இளைஞன். “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை”. வெள்யாடு என்பது வெள்ளாடு.   யாடு =  ஆடு.
ஆனை என்பது யானை என்றும் வரும். இவ்விரண்டுள் நாம் யானை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆடு என்பது யாடு. இவ்விரண்டுள் யாடு மறக்கப்பட்டது; ஆனால் ஆடு இன்னும் வழக்கில் உள்ளது.  மொழியில் எப்படியெல்லாம் மாறுதல்கள் ஏற்படுகின்றன பார்த்தீர்க்ளா வெள்ளாடு அல்லது வெள்யாடு என்பது ஒரு வகை ஆடு. மறி என்பது வேறுவகை. இப்போது செம்மறி ஆடு என்று வழங்கும்.
இளைஞனைக் காளை என்று ஒப்பிடுவது இன்றும் காணப்படுகிறது. வெள்ளாட்டுக் கடாவுக்கும் ஒப்பிடலாம் என்பதை இப்பாடலின்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
சுற்றி நிற்கும் வெள்ளாட்டுக் கடாக்களைக் போல இத்தாயின் மகனைச் சுற்றி இளைஞர் பலர் நின்றனர்.
ஓர் உண்டாட்டு நடைபெற்றது. ( உணவுடன் கலந்த ஆட்ட நிகழ்ச்சி ). அப்போது வேந்தனோ அல்லது படைத்தலைவனோ அவர்களுடன் நிற்கிறான். (ஓரு பெரிய அதிகாரி ).  ஒவ்வொருவருக்கும் ஒரு மண் சாடியை நீட்டுகிறான். அதனுள்ளே கள். அதை எல்லோரும் வாங்கிக் குடித்து மகிழ்ந்து ஆடுகிறார்கள். அதில் குடித்த பலர் பின் போருக்கு ஏகி அங்கு மடிந்தனர். ஆனால் இத்தாயின்மகன் சென்று வெற்றிக்கனியைக் கொணர்ந்து தாய்க்கு அர்ப்பணித்தான். (வெற்றியைத் தாயின் திருமுன் படைத்தல் ).
பாடலில் வந்துள்ள சில அருஞ்சொற்களைப் பார்ப்போம்.
செச்சை -  கடா.
தன் ஓர் அன்ன – தன்னை ஒத்த;
இளையர் -  இளவயதினர்;
இருப்ப -  சூழ நிற்க;
மண்டை -  மண் சாடி.  (மண் + தை.  இங்கு தை விகுதி ). தை > தைத்தல் : இணைத்தல், செய்தல் எனக்கொண்டு, மண்ணால் ஆனது என்று சொல்லமைப்பைக் காட்டினாலும் ஆகும்.
சிறுவன் -  இங்கு மகன் எனற்பொருட்டு.
கால்கழி கட்டில்:  பாடை.  காலம் கழிந்ததும் இடுவதற்குரிய கட்டில்.  கால் – காலம்.  அம் விகுதி இன்றி வந்தது.  கழி -  கழிந்த. இது வினைத்தொகை.
அறுவை – போர்வை.
போர்ப்பித்து இலதே -  பிணப்போர்வையை இடவில்லை.
அறுவை:  இன்று இப்பொருளில் இச்சொல் வழங்கவில்லை என்று தெரிகிறது.  அறுக்கப்பட்டதை அறுவை என்றனர்.  துணிக்கப்பட்டது துணி என்றும், வெட்டப்பட்டது வேட்டி (வெட்டு+ இ : இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்). என்றாற்போல அறுவை என்ற சொல் அமைந்துள்ளது.
வேட்டி என்பதை வேஷ்டி என்று அழகுபடுத்தியதுடன். இச்சொல் மேலை மொழிகளிலும் பரவிச் சேவை செய்கிறது.  Vest என்ற ஆங்கிலச் சொல்லும் இதிலிருந்து வந்ததுதான். இது இலத்தீன் முதலிய மொழிகளிற் பரவிப் பல சொற்களைப் படைத்துள்ளது. உலக மொழிகட்குத் தமிழ் செய்த பேருதவி இதுவாம். 

Will be edited later as there are posting problems presently.

Justified on 6.6.2022











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.