Pages

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

கன்றில் ஓர் ஆ


இங்கிருந்து தொடர்கிறோம்.

தொண்டைமான்  அரசின் சிறப்பு :
http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_91.html

கல்லாடனார் குறிக்கும் மரங்கள்
http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_81.html

நிமித்தங்கள்
http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_9.html

அத்தான் வருவாக !  என்றதோழி
http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_8.html




கல்லாடனாரின் குறுந்தொகைப் பாடலைத் தொடர்ந்து சுவைப்போம்.
இப்போது அதன் இறுதி அடிகளுக்கு வந்துவிட்டோம்.

வண்தேர்த் தொண்டையர்  வழையம லடுக்கத்து
கன்றில் ஓர் ஆ விலங்கிய
புன்றாள் ஓமைய சுரனிறந்  தோரே.

இப்பாடல் தொண்டைமான்களின் ஆட்சியில் இருந்த வேங்கடத்தைக் குறித்தது என்று கண்டோம். இந்  நிலப்பகுதியையே தலைவன் கடந்து சென்றான் என்று கல்லாடனார் குறிக்கின்றார். இது மிகு வெப்பமான நிலப்பகுதி. அவன் கடக்குங்காலை ஒரு மரத்தடியில் ஓர் ஆ நின்றுகொண்டிருந்தது. அது ஒரு தனிப்பசு. அதற்குக் கன்று இல்லை. அது அம் மரத்து நிழலை விட்டுச் செல்ல இயலாமல் அங்கேயே நின்றுவிட்டது,  நிழல்தரு அடுத்த மரம் தொலைவில் உள்ளது. இடையில் வாட்டும் வெப்பத்தில் செல்ல ஆவுக்கு இயலாத நிலல். அந்தப் பாலை வெப்பமான நிலப்பகுதி என்று நேரடியாகக் கூறாமல் பாடல் நமக்குத் தெளிவுறுத்துறுகிறது.

அந்த ஆவைப் பார்த்துக்கொண்டுதான் அப் பகுதியைத் தலைவன் கடந்து சென்றான்  என்று பாடல் சொல்லவில்லை. ஆனால் அவன் பார்த்திருக்க வேண்டும். அதற்குக் கன்று இல்லாமல், தனித்துயர் உழந்து மரத்து நிழலில் நிற்பதானது, தலைவி இன்னும் ஒற்றை ஆவினைப்போல்தான் உள்ளாள் என்பதை அவனுக்குத் தெரிவித்து உறுத்தியிருக்குமே! வாழ்க்கையை வளம் செய்துகொள்ளப் பொருள் வேண்டிச் சென்றாலும் காலம் தாழ்த்தாமல் திரும்பிவிட வேண்டுமென்பதை அது அவனுக்குக் குறிப்பாலுணர்த்துவது ஆகும்,
அவள் தன் பெற்றோர் குடும்ப நிழலிலேயே இன்னும் நின்றுகொண்டிருக்கிறாள். அவளுக்கு வேறு போக்கில்லை. கவலையில் வாடிக்கொண்டிருக்கிறாள்.

அந்த ஓமை மரங்களின் அடி அவ்வளவு அழகுடையவை அல்ல.
அதுபோல, தலைவியில் குடும்பச் சூழலும் அத்துணை இனிதாக இருந்திடவில்லை.  ஆகவே புன் தாளும் ஒரு குறிப்பினையே உணர்த்துவதாம்.

பாலையைக் கடந்து சென்றவனும் தேவை இருந்ததனால்தானே
செல்றான், அவன் கடந்து சென்றான் என்பதை இத்தகு காட்சிகளுடன் தந்து கவலை வண்ணத்துடன் முடிக்கிறார்  சங்கப் புலவர் கல்லாடனார்.

ஒவ்வொரு புலவனும் தன் வாழ்நாளில் பல பாடியிருப்பான் எனினும் தொகை நூல்கள் மூலம்  நாம் சிலவே அறிந்து இன்புற முடிகிறது.  கிட்டாமல் ஒழிந்தவை  பல. பாதுகாக்கப் படாத பல உணர்ந்து துன்புறும் வேளையில்  கிடைத்தவற்றையாவது  போற்றிக்கொள்வோமாக.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.