சிதிலம் என்பது காண்போம்.
சொற்கள், ஒவ்வொன்றும் ஒரு குடும்பம் போலவே இணைந்த சொற்களுடன் கூடிவாழ்கின்றன என்று சில ஆய்வு நிபுணர்கள் குறித்துள்ளனர். இது ஒரு பேருண்மை என்று கூறலாம். சிது என்ற சொல்லே அடிச்சொல் ஆகும்.
சிது என்பதை உணர்ந்துகொள்ள, சிறிது என்ற சொல்லைப் பார்க்கலாம். பெரிதாக இருந்த ஒன்று பிளந்தோ, உடைந்தோ, பிரிக்கப்பட்டோ, சிறிது என்ற நிலையை அடைகிறது. இதன்பின் சொல்லில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிறிது என்பது சிது என்று மாறுகிறது. இது பேசுகிறவர்களின் நாவொலிப்பினால், அல்லது சொல்லமைப்பாளரின் திரிப்பினால் அல்லது வேறு காரணங்களால் ஏற்படலாம். சொல்லமைப்பாளர் அல்லது சொல் திரித்தோர், தங்கள் குறிப்புகளை விட்டுச்செல்லவில்லை. எழுதி வைக்கவில்லை. அப்படி எழுதி வைத்திருந்தாலும் அதிற் கவனம் செலுத்தி அதைப் பாதுகாத்து வைத்துத் திறனாய்வு செய்தோர் யாரையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் சிது என்பதை இடைக்குறை அல்லது சொல் தொகுப்பு என்ற இலக்கணியர் தந்த விதிகளின் மூலமே அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.
சிது என்பது மீண்டும் அடிச்சொல்லாகி, சிதை என்று ஐவிகுதி பெற்று, மீண்டும் வினையாகின்றது. சிதைத்தல் என்பது தொழிற்பெயர்.
சிதிலம் என்பதை அறிய, சிதை என்பதை பின்னோக்கிச் சிது என்று கண்டு, மூலமாக்கி, இல் அம் அல்லது அல் அம் என்பனவற்றைச் சேர்த்தால், சிதிலம் என்ற சொல்லை உணர்ந்துகொள்ளலாம். சிதைவு என்பதே அதன் பொருள்.
ஒரு சிலை சிதிலம் அடைந்துள்ளது என்றால், முழுவதும் சிதைந்துவிடாமல், இடங்களில் - அதாவது சிலையில் சில பாகங்களில் தேய்ந்தோ, சில்விட்டோ, பெயர்வுகளாலோ, மாறுதல்களாலோ - சிதைவுகள் உள்ளன என்று தெரிந்துகொள்கிறோம்.
சிதிலம் : இல் என்பதற்குப் பொருள் சொன்னால், ஒரு சிற்றிடம் என்று கொள்ளவேண்டும். இப்படி ஆங்காங்கு மேற்பரப்பில் தேய்வுகளும் மாற்றங்களும் உள்ளன. இதைச் சிதிலம் என்னலாம்.
இதுபோல சிறப்புப் பொருள் அமைப்புகள் மொழியில் வெற்றிபெற்றிருக்க வில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
சிதிலம் என்பது சிதலம் என்றும் வழங்கும் என்பதறிக. சிது என்ற அடி, சிது> சீத்து> சீத்தை எனவும் ஆகும். சிதிதலம் என்பதும் உளது. இது பழைய நூல்களில் வரும் சொல். பொருள் அதுவே. ஸிதிலம் என்று எழுதப்படுவதும் உண்டு.
தமிழில் உரைநடை இல்லாத காலமும் இருந்தது. எழுதி வைத்தவை எல்லாம் பாடல்களே ஆகும். பின்னர் பாடல்கள் கடினமாகி அவற்றுக்குப் பொருளறிய வேண்டி வந்த காலையில், உரை எழுதும் பழக்கம் வந்தது. சிறந்த உரையாசிரியர்கள் உருவாகினார்கள். அடியார்க்குநல்லார், சேனாவரையர், நச்சினார்க்கினியர் எனப்பலர்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.