விருத்தி என்பதன் சொல்வரவியல். இப்போது சொன்னூல், சொல்லமைப்பியல், என்று பலவகையில் கூறலாம். தமிழில் சொல்லுக்குப் பஞ்சம் இல்லை.
விர் என்பது அடிச்சொல்.
விர்+ உ. உ என்ற அடிச்சொல் முன்னிடத்தில் விரிதல் என்று பொருள். உ > உம்> உன்> உங்கள் என்பனவெல்லாம் முன்னிடத்தில் உள்ளோரையே குறிக்கிறது. படிக்காதவராக ஒருவர் இருந்தாலும், இவை யெல்லாம் முன்னிடத்து உள்ளவரைக் குறிப்பதால், விர்+உ என்பதிலும் அதுவே பொருள் என்று கூறிவிடுவார்.
விர்+ இ . இ என்பது இங்கு என்று பொருள்தருவதால், இங்கு விரிதல் என்பதன் இதன் பொருள் என்று அறிந்து கொள்ள அவ்வளவு இன்னல் உறார்.
விர் + அ. விர. அங்கு விரிதல். விரல் என்ற கையில் கடைக்கோடியில் (அ) விரியும் உறுப்பு என்பதை அறிய அவ்வளவு கடினமா? விரியவும் செய்து அல்லாமல் சுருங்கவும் செய்து கையிறுதியில் இருப்பது விரல். இதற்கு அல் விகுதி புணர்த்தல் மிக்கப் பொருத்தமே. இன்னொரு சொல்லைப் பார்ப்போம்.
ஈரல் என்ற சொல் காற்றையோ அரத்தத்தையோ ( blood) உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதும் செய்யும் உறுப்பு. செரிமானம் செய்யும் கல்லீரலும் இவ்வாறே குறிக்கப்பெறும். ஈர்ப்பதும் அல்லாமல் தள்ளுவதும் செய்வதால் அல் என்ற விகுதி பொருத்தமே என்க..
கந்தல் என்ற சொல்லைப் பார்ப்போம். கண் என்ற சொல், சிறு பொத்தல்களையும் குறிக்கும். சேலையில் பூச்சி கடித்துக் கண்கண்ணாகப் போய்விட்டது என்று சிற்றூர்களில் சொல்வர். உடல்துவாரங்களில் கண்ணும் துவாரமே. ஒன்பது வாசல் என்றும் சொல்வதுண்டு. இவை எல்லாம் பண்டை மக்கள் மொழியை நன்கு கையாளும் திறனுடையோராய் இருந்தனர் என்பதையே காட்டுகிறது. புதிய தலைமுறையினர்க்குப் படித்தாலும் தெரியப்போவதில்லை. கண்+து+ அல் > கண்தல்> கந்தல். கண் என்பது இடம் என்றும் பொருள்படும். பழைய நூல்களை எல்லாம் நாம் இழந்துவிட்டால், இந்த மொழிநலங்களை எல்லாம் இழந்துவிடுவோம். கண்கள் உடையதும் அல்லாமல் இடை இடை வருவதும் உடைய துணி - கந்தல். ஒரு ''கந்தல்'' அல்லது கிழிசல் துணியை எடுத்தால், அதில் கிழிந்து பயனில்லாத பகுதியும் இருக்கலாம். கிழியாத ஏறக்குறைய நல்லதென்று கருதத்தகும் பகுதியும் இருக்கும். இதுபோல் கிழிந்தும் அல்லாமலும் இருக்கும் ஒன்றை, அல்விகுதி கொடுத்து அமைத்தல் தமிழின் திறனே ஆகும். பந்தல் என்பதும் இப்படித்தான். பரவலாக நாலு அல்லது மேற்பட்ட கால்களுடன், அங்கு விரிக்கப் பட்டிருந்தாலும் காரியம் முடிந்ததும் அது கழற்றி அகற்றப்படும். ஆகவே பரப்பி வைத்துப் பின் சுருட்டி வைக்கப்படும். பரப்பியும் பின் அல்லாமலும் வைக்கப்படுவது ஆகும்.
கந்தல் என்பதற்கு வேறு விளக்கங்கள் அடுத்த இடுகையில்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
ஆங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.