Pages

வெள்ளி, 22 மார்ச், 2019

இறைஞ்சுதலும் இலஞ்சமும்.

இலஞ்சம் என்ற சொல்லைப் பார்ப்போம்

இதை "ரான்ஸம் "  என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு
என்று சிலர் கூறியதுண்டு.  ஒருவனைப் பிடித்து
வைத்துக்கொண்டு அவனை விடுவிக்க வேண்டப்படும்
தொகையே இவ்வாங்கிலச் சொல்லால் குறிக்கப்படுகிறது.

ஆனால் தொகை தரப்படும் ஆள்கடத்தல் கைது முதலிய
 இல்லாத  நிலைமைகளே பெரும்பாலும்  இலஞ்சம் என்ற
 சொல்லால் குறிக்கப் படுகிறது.  ஆகவே ரான்சம் என்பது
இலஞ்சம் என்று  திரிந்திட வாய்ப்பில்லை. கைதானவனை
விடுவிக்கவும் சில வேளைகளில் இது நடைபெறும் என்றாலும்
இலஞ்சத்தில் ஒரு சிறு பகுதியே அதுவாகும். மேலும் ரான்சம்
என்பதில் ஆளைப் பிடித்துவைத்திருப்போர் அதிகாரம்
இல்லாதவர்கள். இதுவும் ஒரு பொருள்குறுக்கீடாகிறது.

பணம் வாங்கிக்கொண்டு இடையில் நிற்பவன் பிறருக்காக
இறைஞ்சுதல்  நாளும்  பல இடங்களில் நடைபெறுகிறது.
பெரும்பாலான பெரிய அதிகாரிகள் நேரடியாக
வாங்குவதில்லை. கீழதிகாரியே வந்து இறைஞ்சுவான்.
ஆதலின் இப்படிப் பட்டவனைக் குறிக்கவே இறைஞ்சு
 என்ற சொல்லிலிருந்து இலஞ்சம் என்ற சொல்
அமைந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

ரகரம் றகரம் முதலியவை லகரமாகத் திரியும்.  றை என்ற
ஐகாரம் கலந்த எழுத்தும் றகரமாதல் உண்டு. இது ஐகாரக்
குறுக்கம் எனப்படும்.  அகரம் இகரம் முதலிய தலையெழுத்து
நீங்கிய சொற்களும் பல. ஆதலின் :

இறைஞ்சு  >  இலஞ்சு > இலஞ்சம் > லஞ்சம்.

என்பதே சரியானதாகும்.

இறை என்பது பணம் செலுத்துதலையும் குறிக்கும்.  இறைஞ்சு
 என்பது வேண்டிக்கொள்வதையும் குறிக்கும்.  இதுவே ஒப்புடைய மூலச்சொல் எனக் கொள்க.  பணம் செலுத்துதல், காரியம் நடை
பெற வேண்டிக்கொள்ளுதல் இரண்டும் இலஞ்சத்தின்
உள்ளமைப்புக் கருத்துகள்.

பிழைத்திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.