Pages

புதன், 11 ஏப்ரல், 2018

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து பல சொற்களை ஆய்வு
செய்து வெளியிட்டுள்ளேன்.  இவற்றில் பல இன்றும் கிடைக்
-கின்றன. கிடைக்காதவை பல எனது முன்வரைவுகளில்
உள்ளன.  எதையும் எளிதாக மறந்துவிடுவதில்லை.

வாடிக்கை என்ற சொல் இவற்றுள் ஒன்று.

வாடிக்கை என்பது வடித்தல் என்பதனடிப் பிறந்த சொல்.

வடித்தல் என்பதன் பொருளாவன:  கூராக்குதல், தெளிதல்,
தெளித்தெடுத்தல், ஆராய்தல், திருத்துதல், நீளமாக்குதல்,
பயிற்றுதல், யாழ் மீட்டுதல்  அல்லது நரம்புகளை உருவுதல்,
வயப்படுத்துதல், நீர்போன்றவற்றை வடியச்செய்தல்,
வடிகட்டுதல், பிழிதல்..

கொஞ்சம் நீரை வடித்துவிட்டு அரிசியை வேகவை --- என்னும்
போது இந்தச் சொல் பயன்படுகிறது. இன்னும் கூறப்பட்டுள்ள
வெவ்வேறு பொருள்களில் இச்சொல் இன்னும் வழக்கில்
உள்ளது.

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே  -  இந்த
வாக்கியத்தையும் நோக்கலாம்.

கொல்லர் முதலான திறனாளர்கள்,  ஒன்றை எப்படி வடிப்பது
அல்லது செய்வது என்பதை ந`ன்கு தெரிந்தவர்கள். எப்போதும்
ஒன்றை முன் செய்த வழியிலேயே திறனாகச் செய்வர்.
எப்போதும்  செய்யும் முறையானது வாடிக்கை ஆகிவிடும்
அவர்களுக்கு. அதேபடிதான் செய்துமுடிப்பர். அப்போதுதான்
செய்வதை நன்றாகச் செய்து குறித்த நேரத்தில் முடிக்க
முடியும். அப்போதுதான் பணவரவு தடைப்படாது.

இப்படி அதேபடி செய்வதால் வாடிக்கை என்ற சொல்லுக்கு
எப்போதும்போல் செய்தல் என்ற பொருள் தோன்றலாயிற்று.
எப்போதும் கடைக்கு வந்து பொருள்வாங்குவோர்
வாடிக்கையாளர்கள் ஆயினர்.

இனிச் சொல் அமைப்பைக் கவனிப்போம்.

வடி > வடித்தல்.   இது வினைச்சொல்.
வடி > வடிக்கை.   இது வடித்தல் என்று பொருள்பட்டு,
செயலைக் குறித்த சொல்.  தொழிற்பெயர்.

வடி+கை:  வாடிக்கை.  இது வடி என்ற சொல் தலை நீண்டு
கையென்னு ம் தொழிற்பெயர் விகுதி பெற்றுப் பெயராயிற்று.. 

சுடு+அன்  என்பது சூடன் என்று முதனிலை நீண்டு விகுதி
பெற்றது போல.

பெயர்தல் ( வேறு இடம் சேர்தல்) என்னும் வினை பேர்
என்று நீண்டும் திரிந்தும் பின் து+அம் விகுதிகள் பெற்றுப்
பேதம் ஆனது போல.  ஓரிடத்தது இன்னோர் இடம் செல்வது
பேதம் .  (திரியாவிடில் பெயர்தம் என்று இருந்திருக்கும்). ரகர
ஒற்று கெட்டது .

பெய்தல் -  நீராய் வெளிவருதல் அல்லது பொழிதல்.
பெய்+தி = பேதி என்று நீண்டு விகுதி பெற்றது போல.
செய்தி என்பது சேதி ஆனதைச் சொல்ல வேண்டுமோ.

சொற்கள் திரிவது மொழி இயல்பு.

தொல்காப்பியனார்:  இயற்சொல், திரிசொல்,............என்`கிறார்.
இது திரிசொல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.