Pages

வெள்ளி, 25 நவம்பர், 2016

நடு ( நடுதல் ) நட ( நடத்தல்)

 நடு ( நடுதல் )  நட ( நடத்தல்).

மரம் நடுதல், செடி நடுதல், நாற்று நடுதல். இச் சொல்வழக்குகளிலெல்லாம் நடுதல் என்பது மண்ணில் ஊன்றுதல் என்று
பொருள் தருகிறது. நட்டபின் செடி முதலியவை அங்கிருந்து அசைவதில்லை. அப்படியே வளர்கின்றன அல்லது வளராது அழிகின்றன.

மனிதன் மற்றும் விலங்குகள் காலைத் தரையில் ஊன்றி நிற்பதும் நடுதல்
போன்றதே.  வேறுபாடு யாதென்றால், காலை மண்ணில் புதைப்பதில்லை.  நட்டு இருக்கும் இடத்திலிருந்து மனிதன், விலங்குகள் அசைகின்றன.
இப்படி அசைகின்ற நிலைக்கு நடு என்ற சொல் போதவில்லை, அல்லது
அசைவுக் கருத்தைத் தெளிவாகக் காட்டவில்லை.


ஆகவே நட்ட ( நின்ற) இடத்திலிருந்து அப்பால் அசைவைக் குறிக்க‌
நட என்ற சொல் பிறந்தது.   இது நடு_+ அ, காலை நடு, நட்டு அங்கு
போ. ஆகவே நட ஆயிற்று.

நடு என்ற சொல்லினின்று நட என்பதைப் பிறப்பிக்க, அ என்ற சுட்டு
சென்று இணைந்து பயன்பட்டது காணலாம். இயங்கு என்பதில் இ (இங்கு) +  அ (அங்கு)  + கு (வினையாக விகுதி).= இயங்கு ,இதுபோலவே   நடு + அ (அங்கு) >  நட ஆனது.


எனினும் நடிப்பவன் ஓரிடத்திலிருந்து நடிக்கும்போது இன்னொரு திசை
நோக்கிச் செல்லாமல், குறிப்பிட்ட இடத்தினுள்ளேயே அவன் வேலையைச் செய்கிறான். அவனைப் பார்ப்பவர்கள் (இரசிப்போர்) எங்கு
இருந்து அவனைக் காண்கிறார்களோ, அவன் அங்கேயே தன் அசைவுகளைக் காட்டவேண்டுமே. தெருவில் நடித்துக்கொண்டிருந்தால்
வயலுக்கு ஓடிவிட முடியுமா என்ன? அவன் நிலை ஒரு கட்டுறுத்திய‌
நிலை.  எனவே, நடு ( காலூன்றிய நிலையில் )  + இ (இங்கேயே) = நடி (செய்வது செய்) என்று சொல் அமைந்தது காண்க.  இ என்பது ஒரு
சுட்டுச் சொல் தான்.(பொருள் ஏற்படும்போது ஓர் எழுத்தும் சொல்லாகிவிடும்.)

இதன்மூலம் நடி என்பது நடு + இ என்று இணைப்பில் பிறந்த சொல் என்பதை நன்குணரலாம்.

சந்திப்போம் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.