Pages

திங்கள், 3 அக்டோபர், 2016

கண்டதோர் கொள்கை

கண்டதோர் கொள்கை ஒன்றே
கருதுமோர் உண்மைக் கொள்கை
என்பதோர் படியில் நின்றே
எனைத்துமே போற்றிக் கொண்டு
மன்பதை அனைத்தும் பின்னே
மடங்காது வருக வென்பான்
ஒன்பதில் ஒன்று நீங்கின்
உன்கழுத் தறுத்தல் நீங்கான்.

தீயினில் விரைந்து  வீயும்
ஆயவை  அனைத்தும் போலே
தீவிரம் அதனில் மாயும்
ஆய்விலர் கருதும் யாவும்.
தாவுறும் அனைத்தும் நன்மை
தாவில  அனைத்தும் புன்மை
மேவின புரட்டிப் போட்ட
மிகைபடு பிழைக்கும் செல்கை .     

தீவிரம்  விலகிச்  செல்வீர்
தீவினை கடன   கற்றல் ;
நாவினில் பிழைத்த  லின்றி
நல்லன கடைக் கொள்    வீ ரே;
தேவினை  அடைந்தோன்  போலும்
பாவனை  புனைதல்  தீதாம் ;
ஓவமே  பலரும்  கூடி
ஒத்திருந் தகலுள்  போற்றல் .


 குறிப்புகள்:

கண்டது:  கண்ணாற்  கண்டதும்  மனத்தாற்  கண்டதும்  ஆகியவை;
அவன் காணாத  கொள்கைகள் பல உலகில் உள என்பது  கருத்து.

ஓர்  கொள்கை:   வினைத்தொகை;   ஓரும்  கொள்கை .  ஓர்தல் :  மூளையில்  தோன்ற   அறிதல் .

ஒன்றே  :   மட்டுமே.

கருதுமோர்   உண்மை:    அவன்  ஏற்கத்தக்க  ஒரே  உண்மை.

என்பதோர்  படி:   பிடிவாதமாகிய  ஒற்றைப் படி.

எனைத்துமே -   எதையாகிலுமே.    பிற  குப்பைகள்  பலவற்றையும் .

தா  :   குற்றம்.

செல்கை  :  போம் வழி .

கடன  கற்றல்:   கடன்  அகற்றல்  =   அகற்றல்  கடன் .

பிழைத்தல் :  பிழை படுதல் .

தேவினை  =  கடவுளை.

ஓவம் :   ஓவியம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.