Pages

புதன், 14 அக்டோபர், 2015

மாமழை பெய்ய முழங்கி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தலைவி கூற்றாக வருகின்ற ஓர்  அகத்திணைப் பாடலை இப்போது பாடி இன்புறுவோம். இதைப் பாடிய புலவர் கச்சிப்போட்டுக் காஞ்சிக் கொற்றனார் என்னும் சங்கப் புலவர். இவர் பாடியனவாக குறுந்தொகையினுள் இரு பாடல்கள் உள்ளன.  அவற்றுள் ஒன்றுதானிது:

அவரே -----

கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடு இறந்தோரே;
யானே------

தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந்திசினே;
அன்னள் அளியள் என்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னும் தொழிலென் இன்னுயிர் குறி த்தே.

இதன் பொருளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கேடில் விழுப்பொருள் =  மிகச் சிறந்த  உயர் பொருள்.
அதாவது இனி  இருவரும் வாழ்தற்கு வேண்டிய பெரு நிதி.

தருமார் = கொண்டு தருவதற்கு;

வாடா வள்ளியங் காடு இறந்தோரே; -   வாடாத வள்ளிக்கொடிகளையுடைய  அழகிய காட்டைக்கடந்து சென்றார்;

தோடு ஆர் =   தொடுத்ததுபோல் வரிசையாக அணியப்பட்ட.
தொடுத்தல்:  தொடு(வினைச்சொல்) > தோடு. (முதனிலை திரிந்த தொழிற் பெயர்)

எல்வளை =  ஒளிவீசும் வளையல்கள்.

நெகிழ ஏங்கி =  கழலும் படியாகக்  கவலை மிகவடைந்து.

பாடு அமை =  கிடப்பதற்கு அமைந்த;

சேக்கை:=  படுக்கை.
படர்கூர்ந்திசின் -=   நடமாடும்   எழுச்சியும் வலிவும் இன்றி  ஒரே கிடப்பாய்ப் கிடந்து துன்புறுகின்றேன். (அவர் நினைவினால்.)

அன்னள்  அளியள்  என்னாது =  ஐயோபாவம் என்றுகூடக் கருதாமல்;

இன்னும் =  இனியும்;

மாமழை =   வலியவாகிய  இந்தக்  கருமுகில்கள்

என் இன்னுயிர்  குறித்தே  -=   என்  இனிய   உயீரை வாங்கும்வண்ணமாக;

(இறந்து விடாமல் அவர் 

பொருட்டு இன்னும் வாழ விரும்புவதால்  இன்னுயிர் என்கிறாள் )

பெய்ய முழங்கி -- மழையைக் கொட்ட  இடித்துப்  
பேரொலி செய்து

மின்னும்தோழி =   தோழியே மின்னுகின்றது

இடி மின்னற் காலத்தில்  பிரிவுத் துன்பம் மிகுந்துவிடும்.   அவருக்கு ஏதும் துன்பம் நேராமல் இருக்கவேண்டுமே

முகிலு ம் இரங்கிற்றிலது  என்றபடி.

பாடிய  புலவர்:

அழகிய இப்பாடலை  வடித்த  நல்லிசைப் புலவர்தம்  பெயருடன் இணைந்துள்ள அடைமொழிகள்  இவர் வாழ்ந்த ஊர்ப்பெயர்களைக் காட்டுவனவாய்க் கொள்ளலாம்  கொற்றம் என்பது அரசாட்சியைக் குறிப்பதும்  ஆகும்  ஆதலால்  இவர் ஓர் அரசியல்  அதிகாரியாய் இருந்திருக்க்கூடும்.
கொற்றம் > கொற்றன்.
எனினும்  இதனை உறுதிப்படுத்த இயலவில்லை.  கொற்றன் என்பது கொத்தன்  அதாவது கட்டிடக் கலைஞன்   என்றும் பொருள்படுவதால் இதில் மாறாட்டம் உள்ளது.  கட்டுமானத் தொழிலர்களும்  புலவர்களாய் இருந்தனர் எனின்   இப்பாடல் எழுந்த காலத்தில் கல்வி கற்று உய்யும் வசதிகள் யாவருக்கும் கிடைத்தன என்று  எடுத்துக்கொள்ளலாம்.    இசின்  மற்றும் தருமார் என்னும் சொல்லாட்சிகளால் இப்பாடல் மிக்கப் பழைய பாடல் என்று 
தெரிகின்றது. ஈயும் என்பதே  இசின் என்று திரிந்துள்ளது என்றாரும் உளர் .
இசின் என்ற சொல்லிறுதி வேறு  திராவிட மொழிகளிலும்  வழங்குவதாகச்  சொல்வர்   இவற்றை  அவ்வறிஞர் நூல்களிற் காண்க  

will edit,   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.