Pages

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

முழுச்சொற்கள் புணர்ச்சியும் சொற்புனைவுத் திரிபுகளும்

இதைப்பற்றி  ஆங்காங்கு சொல்லமைப்புக்களை விரித்துரைக்கும்போது குறிப்பிட்டிருக்கிறோம்.  என்றாலும் இங்கு மீண்டும் விளக்குவதில் தவறில்லை என்று நினைக்கிறோம்.

இப்போது "மக்கள் "  என்ற  பழந்தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல் தமிழிற் பண்டை நூலாகத் திகழும் தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளது.

இச்சொல்லில்  பிரிக்குங்கால் முன் நிற்பது  மக என்ற அடிச்சொல்லே.  மக என்பது  தாய் தந்தையிலிருந்து  பிறந்தது என்று பொருள் தரும்.

மக என்பதனுடன் "கள்" என்ற  பன்மை விகுதியைக் கொண்டு சேர்க்கும் போது 

மக + கள் =  மகக்கள்  என்று வரவில்லை.

மக்கள்  என்றே வந்தது.

ஏன்  மகக்கள்  என  வந்திலது  என்று  கேட்க வேண்டும். 

கள் என்பது ஒரு விகுதியாக இல்லாமல் முழுச்சொல்லாய் இருந்தால், இரு முழுச்சொற்கள்  ( நிலைமொழியும்   வருமொழியும் ​)  புணரும் புணர்ச்சியாக  இருக்கும்.  அப்போது  "மகக்  கள் "  என்று வருவதே சரி . கள் என்பது ஒரு குடிபொருள் ஆதலின்  மகக் கள்  என்பது  பிள்ளைக்குரிய குடிக்கும் கள் என்று 
பொருள் போதரும்.

கள் என்பது விகுதியாதலின் மக​ + கள் =   மக்கள் என்றே சொல் அமைந்தது.

இதேபோல்  மக+ அன்  என்பது  மகவன் என்னாது  மகன்  என்றே வரும்.  மகவன் என்று வகர உடம்படு மெய் வராது, 
வந்தால் "மகவினை  உடையோன் "  என்று பொருள்தரும். வேறு சொல்.

இதேபோல் :

அறு +  அம் -=  அறம். (தருமம் )
அறு + அம்  =  அற்றம். (தருணம்)

விகுதிப் புணர்ச்சி நிலைமொழி வருமொழிகளின் புணர்வின் வேறுபட்டதென்று  உணர்க.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.